Skip to main content

திருமா மீது எடப்பாடிக்கு வந்த திடீர் பாசம்; அரசியலா? அக்கறையா? - ‘விசிக’ சங்கத்தமிழன் 

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 VCK Sangatamilan interview

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசியல் களச் செயற்பாட்டாளர் சங்கத்தமிழன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

திருமாவளவன் அவர்கள் உடல்நலம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடியும் கூட விசாரித்தார். இதனை அரசியல் நோக்குடன் பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், திருமாவளவன் அரசியலைக் கடந்து நட்பு வைத்துள்ளவர். அதிமுக குறித்து எங்கள் தலைவர் அக்கறை காட்டக் காரணம், அவர்கள் பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை உடன் வைத்திருப்பதால் அதில் இருந்து வெளிவர பலமுறை கூறியுள்ளார். விசிகவும் இவர்கள் இருவரும் இருக்கும் கூட்டணியில் இடம் பெறாது எனவும் முன்பே அறிவித்திருந்தோம். ஏனென்றால், பாஜக எவ்வாறு மாநிலக் கட்சிகளின் முதுகில் பயணம் செய்து பின் அதன் தலையை வெட்டும் என்பதை மும்பை(ஏக்நாத் ஷிண்டே) விவகாரத்தில் பார்த்தோம். இந்த நிலையில் அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்து தான் ஒரு புரட்சித் தமிழன் என நிலைநாட்டி விட்டார் எடப்பாடி. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சமூகநீதி என்ற ஒரே கருத்தியலை பேசும் கட்சி என்பதால். பாஜக போன்ற சுமையை அதிமுக சுமக்க வேண்டுமா? என்பது எங்களின் நிலைப்பாடாக இருந்தது.

 

அண்ணாமலை ஐ.டி. ரெயிடுகள் வரும் என சொன்னது உள்பட பல பிரச்சனைகள் இருக்கும் நிலையிலும், அதிலும், பா.ஜ.க. தேர்தல் ஆணையம் தொடங்கி அமலாக்கத்துறை வரை நெருங்கிய உறவு வைத்திருக்கும் போதும் எடப்பாடி கூட்டணியை முறித்தது பெரிய சமூகநீதி தான். இப்படி சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என நினைக்கிறேன். இதற்கு மேல், திருமாவளவன் கண்ட கனவும் இந்த கூட்டணி முறிவால் நிறைவேறிவிட்டது. இத்தனைக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க.தான் இரண்டாவது பெரிய கட்சி. இருந்தபோதிலும், இந்தியளவில் பெரும் கூட்டணி உடைப்பை எடப்பாடி ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக, தன்னுடன் இருந்த பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை நீக்கினாலும், விசிக ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க.வை பரிசீலிக்கவில்லை.

 

தொடர்ந்து, விசிக கொடியேற்றும் பிரச்சனை குறித்தும் முதல்வரிடம் பேசியுள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாது எனவும் நம்புகிறோம். சொல்லப் போனால், திமுக ஆட்சிக் காலத்தில் கூட கொடியேற்றுவதில் சிறிய சிக்கல்கள் இருந்ததுண்டு, ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.  தொடர்ந்து, ஒரு காலத்தில் விசிக - அதிமுக கூட்டணியில் இருந்தது. பின்னர், திருமாவளவன் ஒரு சிறிய முரண் காரணத்தால் வெளியே வந்தார். ஆனால், அதிமுகவிற்கும் எங்களுக்குமான உறவு சுமுகமாகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன், ஜெயலலிதாவின் கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் தன் கால் மயிருக்கு சமானம் எனச் சொன்னவர். மாறாக, திருமாவளவன் வெளியேறுகையில் "அன்புத் தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழட்டும். ஆனால், தம்பிக்கு அரசியலில் அவசரம் கூடாது" என அறிவுறுத்தினார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்தும் உள்ளார். எனவே, சமீபமாக சில வருடங்கள் அதிமுக, சங்கிக் கூட்டத்துடன் சுற்றுவது தான் வருத்தமளித்தது. ஒருவேளை, வருகிற தேர்தலில் சில எம்.பி. சீட்டுகள் வென்று பாஜகவில் இணைவார்களா என்று உறுதியாக கூற முடியவில்லை. தற்போதைக்கு அவர்களை விரட்டிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

 

இந்த கூட்டணி விவகாரத்திற்கு தலைமை தான் முடிவெடுக்கும் என்ற அண்ணாமலை அதன் பிறகு எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. அதேபோல், எந்த ஒரு கட்சி தனது தொண்டனின் கனவுகளை உள்வாங்கி செயல்படுகிறதோ அதன் தலைவர் மாபெரும் தலைவனாக வருவான். தொடர்ந்து, தமிழ்நாட்டில் தி.மு.க.வை விட பெரிய கட்சி என்று பார்த்தால் அது அ.தி.மு.க. தான். தற்போது நடந்து வரும் போஸ்டர் போரில், புலிகேசி என எடப்பாடியை விமர்சித்துள்ளனர். ஆனால், அவர்கள்(அண்ணாமலை) தான் ரசத்திற்கு பயன்படுத்தும் கொட்டை எடுத்த புளி என்பேன். அதிமுகவை பொறுத்தவரை தொண்டனின் முடிவும் கட்சியின் முடிவும் ஒரு சேரத்தான் இருக்கும். ஆனால், பாஜகவில் தலைமை தான் தீர்மானிக்கும். அதேசமயம், இந்த கூட்டணி முறிவிற்கு மோடி அவர்கள் வரை கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

 

இன்றைக்கு அ.தி.மு.க. உடைந்து சிதறியதற்கு காரணமே பாஜக தான். எச். ராஜா, அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டையை தூக்கிச் சுமந்தோம் என்கிறார். நெல்லிக்கனி கூட நிறைய விசயங்களுக்கு உதவும். ஆனால், பாஜக என்பது கள்ளிப் பால் போன்றது. இனிமேல், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என்ற கட்சிகள் நிலைக்கும். இதனால் பா.ஜ.க.வினர் டெல்லிக்கு சென்று மோடி அவர்களுக்கு பாதுகாப்பாக செல்லவும் வாய்ப்புள்ளது. ஏன், அண்ணாமலையை கூட இந்த கூட்டணி பிரிவு விவகாரத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் செய்யலாம். தற்போது நடந்த கூட்டணி பிரச்சனை பிறகு நடைப்பயணம் கூட நின்றுவிட்டது என சொல்கிறார்கள். அந்தளவு அவர்களின் கதை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.