Skip to main content

வாஜ்பாய் பிரதமரான கதை!!!

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
vajpeyee

 

 

இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.

 

தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி வெளியிடப்பட்டன.

 

தினமணி, எக்ஸ்பிரஸ் போன்ற தேசிய நாளிதழ்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், ராஜ்நாராயண், தேவிலால், சரண்சிங், வாஜ்பாய், ஜார்ஜ் பெர்ணான்டஸ், பிஜு பட்நாயக் போன்ற தலைவர்களையும் அவர்களுடைய கட்சிகளையும் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தின.

 

 

 

மத்திய அரசால் தேடப்பட்ட சில தலைவர்களுக்கு கலைஞர் தலைமையிலான அரசு அடைக்கலம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஒருவழியாக, 1977 மார்ச் மாதம் நெருக்கடிநிலை திரும்பப்பெறப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அவரே தோல்வியடைந்தார்.

 

மொரார்ஜிதேசாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவருடைய அமைச்சரவையில் வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அத்வானி தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்கள். இவர்கள் ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களால்தான் ஜனதா அரசுக்கு முதல் நெருக்கடி முளைத்தது. ஜனசங்கத்தில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்சிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற குரல் ஒலித்தது. ஆனால், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று கூறி வாஜ்பாயும் அத்வானியும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

 

அதைத்தொடர்ந்து, ஜனதாக் கட்சியை காங்கிரஸ் எளிதாக உடைத்தது. அந்தக் கட்சியில் பிரதமர் கனவோடு இருந்த சரண்சிங்கை ஆதரிப்பதாக ஆசைகாட்டி ஜனதாக் கட்சியை பிளந்து, அடுத்த சில மாதங்களில் அவரையும் கவிழ்த்தது காங்கிரஸ்.

 

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் ஜனசங்கம் என்ற பெயர் பாஜக என்று மாற்றப்பட்டது. ஜனதாக் கட்சி ஆட்சி கவிழ்ந்தபிறகு பாஜக என்ற பெயரில் போட்டியிட்டாலும் பெரிய வெற்றி எதையும் அது பெற்றுவிடவில்லை. ஆனால், 1989ல் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தபோது, அந்த அரசுக்கு 86 இடங்களை வைத்திருந்த பாஜகவும், 52 இடங்களை வைத்திருந்த இடதுசாரிகளும் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்தன. இந்த அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டே, மதவெறியைத் தூண்டும் வகையில் ரதயாத்திரையை தொடங்கினார் அத்வானி. அதேநேரத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடுக்கு வழி அமைத்தார் வி.பி.சிங். அவருடைய முடிவை எதிர்த்து பாஜக போராட்டங்களை முன்னெடுத்தது. அத்வானியின் ரதயாத்திரை பிகாருக்குள் நுழைந்தவுடன் அவரைக் கைதுசெய்தார் லாலு. இதையடுத்து வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது பாஜக.

 

 

 

 

 

1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தது. அந்த நாடாளுமன்றத்தில் பாஜக 120 இடங்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 244 பேர் ஆதரவுடன் பிரதமரான நரசிம்மராவ் 5 ஆண்டு பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். ஆனால், பாஜக தனக்கிருந்த 120 எம்பிக்களின் பலத்தைக் கொண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து நாடுமுழுவதும் ரத்தக்களறியை ஏற்படுத்தியது.

 

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக பாஜக 161 இடங்களுடன் தனிப்பெருங்கட்சியாக வந்தது. அதன் கூட்டணிக் கட்சிகள் 26 இடங்களை பெற்றிருந்தன. பாஜகவை ஆதரிக்க வேறு எந்தக் கட்சியும் முன்வரவில்லை. தேசிய முன்னணி மற்றும் மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால் வெளியிலிருந்து ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், தனிப்பெருங்கட்சி என்ற வகையில் தன்னைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வாஜ்பாய் பிடிவாதமாக இருந்தார்.

 

இதையடுத்து, குடியரசுத்தலைவர் சங்கர்தயாள் சர்மா வாஜ்பாய்க்கு பிரதமராக பதவிப்பிரமானம் செய்துவைத்தார். ஆனால், 13 நாட்களே பிரதமராக இருந்த வாஜ்பாய், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, மாநிலக் கட்சிகள் இணைந்த ஐக்கியமுன்னணி அரசு, தேவெகவுடா தலைமையில் காங்கிரஸ் ஆதரவுடன் பதவியேற்றது.

 

 

 

இரண்டே ஆண்டுகளில் இரண்டு பிரதமர்கள் பொறுப்பேற்ற ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்த பிறகு 1998 ஆம் ஆண்டு அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு வாஜ்பாய் பிரதமரானார். இந்தமுறை தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைக்கும்படி வாஜ்பாயை அடிக்கடி வற்புறுத்தினார் ஜெயலலிதா. வாஜ்பாய் நிம்மதி இழந்து தவித்தார். பாஜகவின் மூத்த தலைவர்களும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் டில்லிக்கும் சென்னைக்குமாக பறந்து கொண்டிருந்தனர். திமுக அரசை கலைக்க வாஜ்பாய் மறுத்துவிட்டார். எனவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வாஜ்பாய்க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா. ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு 11 மாதத்திலேயே கவிழ்ந்தது. ஆனால், மாற்று அரசு அமைக்கும் முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில்தான் கார்கில் சண்டை தொடங்கியது. அந்தச் சண்டை முடியும்வரை வாஜ்பாய் அரசு நீடித்தது. அந்தச் சண்டையில் கிடைத்த வெற்றியும் திமுக உள்ளிட்ட புதிய கட்சிகளின் கூட்டணியும் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் அரசு அமையும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

 

இந்தமுறை முழுமையான பதவிக்காலத்தை நிறைவு செய்தார் வாஜ்பாய். ஆனால், 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சி பாஜக அரசின் பாதுகாப்புத் தன்மையை கேள்விக்குரியதாக ஆக்கியது.

 

அதைத்தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாஜகவும் சங் பரிவாரங்களும் சேர்ந்து நடத்திய இந்த கொலைவெறித் தாண்டவத்தில் சொந்த மாநிலத்திலேயே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

 

இந்த கலவரத்தை ஒடுக்க வாஜ்பாய் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. அன்றைய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர், இந்தக் கலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த வாஜ்பாய் உலக அளவில் இந்தியா மீது படிந்த கறை என்றார். 2004 ஆம் ஆண்டு பாஜகவை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிடாமல் தடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் எதிர்க்கட்சிகள் புதிய கூட்டணியை அமைத்தன. அதைத்தொடர்ந்து பாஜக படுதோல்வி அடைந்தது.

 

2009 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதே ஆண்டு அவருக்கு மார்புப் பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நோய்வாய்ப்பட்டிருந்த வாஜ்பாய் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி மாலை மரணம் அடைந்தார்.

 

ஈழத்தமிழருக்காக 1980களில் திமுக தலைமையிலான டெஸோ அமைப்பு சார்பில் மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய வாஜ்பாய்தான் முதன்முதலில் இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த வார்த்தையை பயன்படுத்திய முதல் வட இந்திய தலைவர் இவர்தான்.

 

 

 

 

 

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.