Skip to main content

அக்கா என்னை விட்டுரு நான் செத்துருவேன்... துப்பாக்கிசூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் தோழி பேட்டி

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது, இதில் 13பேர் இறந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினுடைய தோழி நக்கீரனுக்கு அளித்த பேட்டி...


 

sterlite

 

 

நான், பாத்திமா நகர்ல இருக்கேன், எங்க ஏரியா ஆட்களோடதான் நான் வந்தேன். போராட்டத்துக்கு வந்ததுக்கப்பறம் எங்களுக்கு முன்னாடி திருநங்கைகள் போனாங்க, எங்களையும் கூப்டாங்க வாங்கனு. என்கூட இரண்டு பொண்ணுங்க இருந்தாங்க. ஒரு பொண்ணு பேரு ஃபினோலின், இன்னொரு பொண்ணு பேரு ஸ்னோலின். அந்தப்பொண்ணை எனக்கு பள்ளியில் படிக்கும்போதிருந்தே தெரியும். அதனாலயே நாங்கள் இருவரும் சேர்ந்து சென்றோம். முதலில் நாங்கள் கோரஸ் கொடுத்துக்கொண்டே சென்றோம். போகப்போக முன்னோக்கி சென்றோம். பெண்களை முன்னோக்கி செல்ல சொன்னார்கள். அதனால் நாங்கள் இன்னும் முன்னோக்கி சென்றோம். 

 

முதலில் போலிஸ்தான் அடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு போலிஸ்காரரெல்லாம் யூனிஃபார்மோட கல்லைத் தூக்கி எறிந்தார். பாலத்துகிட்ட மறைந்திருந்து அடித்தார்கள், குண்டு போட்டார்கள். நாங்க அங்கையே மாட்டிகிட்டோம். அங்க இருந்து தப்பிச்சு போனோம், பாலத்துக்கு அடியில பைக்கெல்லாம் போட்டு எருச்சாங்க. இத்தனைக்கும் எங்கள்ட்ட கம்பு ல இருந்து எதுவுமே கிடையாது. எங்கள்ட்ட பெட்ரோலும் கிடையாது, எந்த ஆயுதமும் கிடையாது, ஏன் எங்கள்ட்ட தீப்பட்டிகூட கிடையாது. அவுங்கதான் எல்லத்தையும் எருச்சாங்க, அவங்கதான் தீ வச்சாங்க. அப்பறம் தண்ணீ வச்சு அடுச்சாங்கா. இது எல்லாத்தையும் தாண்டிதான் கலெக்டர் ஆபிஸ் வாசல்ல போயி முற்றுகையிட்டோம். அப்பறம் எல்லாரும் உள்ள போயிட்டாங்க, நாங்களும் உள்ள போயிட்டோம். அமைதியாதான் எல்லாரும் போனாங்க. பேச்சுவார்த்தை நடத்ததான் போனோம். போற வழியிலேயே கல்லை விட்டு அடுச்சதுல என் தலைல அடிபட்டு வீங்கிடுச்சு. நான் ஒரு ஓரமாக போயி உக்காந்துட்டேன். அப்போ அந்தப் பொண்ணு கூப்ட்டுச்சு  வாங்கக்கா, வாங்கக்கானு. அப்போ நான் சொன்னேன் வேணாம் பாப்பா போக வேண்டாம் நாம இங்கையே உக்காரலாம்னு. நீங்க உக்காருங்கக்கா நான் போய்ட்டு வந்துரேனு சொன்னா. ஒரு அஞ்சு நிமிஷம்தான் இருக்கும் இரண்டுபேரும் ஓடி வந்தாங்க. என்னாச்சுனு கேட்டுட்டு இருக்கும்போதே போலிஸ் இரண்டு பக்கத்தில இருந்தும் ஓடி வந்தாங்க. வந்தவுங்க லத்தி சார்ஜ்கூட பண்ணல, நேரா துப்பாக்கி வச்சு சுட ஆரம்புச்சுட்டாங்க. அங்க இருந்து சுட ஆரம்பிச்சாங்க, அதுக்கப்பறம் மாடில இருந்து கொஞ்சபேரு சுட ஆரம்பிச்சாங்க. அப்பறம் ஷார்ட் கட்ல வந்து காட்டுபாறைக்குள்ள ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க. 

 

 

நாங்க மூணுபேரும் கைய புடுச்சுகிட்டோம், எங்க ஊரு பொண்ணு ஒண்ணும் என் கைய புடுச்சுகிச்சு. ஆபிஸ் வாசல்ல இருந்து நாங்க ஓட ஆரம்பிச்சோம். கலெக்டர் ஆபிஸ் பக்கத்துல ஒரு ஸ்பீட் பிரேக் இருக்கும் அங்க போயிட்டு இருக்குறப்ப லத்தி சார்ஜ் பண்ணாங்க அதுல ஃபினோலின் பொண்ணு கீழ விழுந்து நெஞ்சுல அடி பட்டு மூச்சுதிணர ஆரம்பிச்சிருச்சு. இந்த பொண்ணு என்னவிட்டு ஓடிருச்சு. நான் இந்தப் பொண்ண தூக்க போனபோது, அந்தப்பொண்ண சுட்டாங்க அது அந்த இடத்திலயே இறந்திருச்சு. வாயில சுட்டுட்டாங்க. அக்கா என்னை விட்டுரு நான் செத்துருவேன் அப்படினு அந்தப்பொண்ணு சொல்லுச்சு,  இந்தப்பொண்ண நான் தர,தரனு இழுத்துட்டுபோனேன். அதுக்கப்பறம் நாலு பசங்க வந்து தூக்கிட்டு போய்ட்டாங்க. போயி பக்கத்துல இருந்த கண்ணாஸ்பத்திரில அட்மிட் பண்ணாங்க, அங்க டாக்டர்ஸ் அவ்வளவா யாரும் இல்லை, பெட்டும் அவ்வளவா இல்லை. அதுக்கப்பறம் குண்டடிபட்ட இன்னும் கொஞ்ச பேரோட ஆட்டோல வந்து நாங்க ஜி.ஹெச். ல சேர்ந்துட்டோம்..

 

 

 

 

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கண்ணீர் வடித்த மூதாட்டி; உதவி செய்த முதல்வர் - அடுத்தடுத்து நடந்த சுவாரஸ்யம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Interesting events followed when the CM stalin campaign in Tuticorin

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. இதுதவிர, நாமக்கலில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க போட்டியிடுகிறது. இந்தக் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள், அவரவர் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். இது ஒரு புறமிருக்க, அனைத்து கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிரச்சார பயணத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் துவங்கியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதால், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலரும் முதல்வருடன் சென்றுள்ளனர். தூத்துக்குடி நாடாளுமன்ற மன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே முதல்வர் புறப்பட்டுள்ளார்.

முதலில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்துள்ளார். முதல்வர் காய்கறிகள் குறித்து கேள்வி எழுப்பியதும், வியாபாரிகள் ஆர்வத்துடன் பதிலளித்துள்ளனர். அப்போது, காய்கறி வாங்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேரி என்ற மூதாட்டி, தான் காய்கறிகள் வாங்க கொண்டு வந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தவறவிட்டுவிட்டதாக முதல்வரிடம் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். உடனடியாக அந்த பெண்ணிற்கு தமிழக முதல்வர் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் பிரச்சார வாகனம் மூலம் தூத்துக்குடி பள்ளிவாசல் வழியாக சென்றிருக்கிறார். அப்போது, சாலையில் சென்றவர்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி லயன்ஸ் ஸ்டோன் பகுதியில், வீதி வீதியாக சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்துள்ளார்.

அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்கின்ற மீனவர் வீட்டிற்குள் திடீரெனெ சென்றுள்ளார். முதல்வர் வீட்டிற்குள் வந்ததால் சூசை குடும்பத்தார் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளனர். பின்னர், அவர்களிடம் பேசி  வாக்கு சேகரித்துள்ளார். அதன் பின்னர், அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தியுள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்துள்ளார். இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் செல்பி எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர். தூத்துக்குடி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.