Skip to main content

"நீங்கள் நினைப்பது போல எல்லோரையும் உடனேயெல்லாம் சந்திக்க முடியாது!" - ஸ்டாலின், தினகரன் சந்திப்புகள் குறித்து திருமாவளவன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பயணம், மத்திய மாநில அரசுகளுக்கெதிரான போராட்டங்கள், தொடரும் ஆணவக் கொலைகளுக்கெதிரான செயல்பாடுகள், இடையில் கூட்டணியில் குழப்பம் என்று செய்திகள்... பரபரப்பாகவே இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் நேரத்தில் கொஞ்சத்தை கேட்டு வாங்கினோம். சில முக்கியமான கேள்விகளுக்கு அவரது விடைகளையும் கேட்டு வாங்கினோம். எப்பொழுதும் போலவே தெளிவும் தீர்க்கமுமான பதில்கள்...   

 

 

tt

 

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. நீங்கள், மக்களை நேரில் சென்று சந்தித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்? 

 

கஜா புயல் அடித்தபோது நான் மாநாட்டு பணிகளில் தீவிரமான சுற்றுபயணத்தில் இருந்ததால் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திக்க இயலவில்லை. பிறகு நான் புதுகோட்டை மாவட்ட ஆலங்குடி வட்டாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்து மக்களை சந்தித்தேன். அந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் எல்லாம் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். குறிப்பாக அமைச்சரின் பெயரை சொல்லியே அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும் புயல் அடித்து பத்து நாட்களுக்குப் பிறகும் அவர்களுக்கு தண்ணீர் கிட்டவில்லை, வீடுகளுக்கு மின்சாரம் கிட்டவில்லை, கோவில் போன்ற பொதுவான இடங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கிடைத்துள்ளது. அரசு தரப்பில் இருந்து ஒரு வேளை உணவும்கூட தரப்படவில்லை என்று தெரிவித்தனர். நான் சென்ற அனைத்து இடங்களிலும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இப்படி இருப்பதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களை வஞ்சித்துவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள். நான் பார்த்த பல பேர்களில் என்னை பாதித்த ஒரு முதியவரின் வார்த்தைகள் ‘இந்த ஒரு மரந்தாங்கையா எனக்கு ஒரு வருஷத்தில் ஆறு மாசத்திற்கு கஞ்சி ஊத்துச்சு. இப்போ நான் என்ன பண்ணுவேன்னு தெரில’ என்றார். அவர் 40 வருடத்திற்கு முன் அந்தப் புளிய மரத்தை வைத்து ஒரு குழந்தையைப்போல் வளர்த்துவந்திருக்கிறார். அந்த மரத்தில் காய்க்கும் புளிகளை விற்று, வருடத்தில் ஆறு மாதத்திற்கு அவருக்கு உணவு அளித்துள்ளது. ஆனால் இந்தப் புயலில் அந்த மரம் வேரோடு சாய்ந்திருக்கிறது. இதுதான் அங்கிருக்கும் அனைவரின் பிரதிபலிப்பாகவும் பார்க்கமுடிகிறது.

 


மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் அவர்களுடன் துணையாக களத்தில் அரசியல் கட்சிகள் நிற்க வேண்டும் எனும் சூழ்நிலையில், தமிழகத்தில் கூட்டணி தொடர்பான சலசலப்புகளும் எழுந்ததே? 
 

ஊடகங்கள் பல யூகங்களை செய்தியாகவும் அதனை ஊதி பெரிதாகவும் ஆக்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக துரைமுருகன் பேட்டி அளிக்கும் முன் நான் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தேன். அவர்களும் ’திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு என்ன பங்கு, என்ன பாத்திரம், என்ன இடம்’ என்பதைத்தான் மீண்டும் மீண்டும் முதன்மைப்படுத்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதற்கு நான் ‘திமுக, காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லை. அதற்கு மாறாக நாங்கள் 'மக்கள் நல கூட்டணி' எனும் மாற்று அணியை கட்டி எழுப்பினோம். அதில் எங்கள் அணி வெற்றி பெற முடியவில்லை. அதன் பின் ஆர்.கே.நகர் தேர்தலிலும் எங்களால் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கமுடியாமல் போனது. மேலும் 2016 தேர்தல் முடிந்து 'மக்கள் நல கூட்டணி' தோற்றுப் போனதும் தேமுதிகவும் தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணியில் இருந்து வெளியேறின. அதன் பின் கிட்டத்தட்ட 'மக்கள் நல கூட்டணி' இனி எடுபடாது என்ற நிலையிலே, போராட்டக் களத்தில் இணைந்து செயல்படுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடது சாரிகள் இணைந்து செயல்பட்டுவந்தன. அதன் பிறகு திமுக சில போராட்ட நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சனைகள் போன்றவற்றில் மக்கள் நல கூட்டணியில் இருந்த நான்கு கட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கினோம். அது தோழமையாக வளர்ந்து, இன்று கூட்டணி குறித்து பேசும் அளவுக்கும் ஒரு இனக்கமான உறவை உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் ஒரு தோழமையுடன்தான் இருக்கிறோம். கூட்டணியாக மாற வேண்டும் என்றுதான் எங்கள் ஆசை. ஆனால், அதனை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமுடியாது. இதைத்தான் திரு. துரைமுருகனும் 'இன்னும் கூட்டணி உறுதிப்படுத்தி அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் குறிப்பாக மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் என்று கேள்வி கேட்டதால், 'அவர்கள் எங்கள் நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் குறித்த முடிவை தலைமை எடுக்கும்’ என்றும் சொன்னார். இதில் எந்த வகையான எதிர்மறை அணுகுமுறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 

 

tt

 

 

நீங்கள் தினகரனை சந்தித்தது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதால் உடனடியாக ஸ்டாலினை சந்தித்தீர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?
 

நீங்கள் நினைப்பது போல் உடனடியாக எல்லாம் யாரையும் சந்தித்துவிட முடியாது. அவரை சந்தித்ததனால் அதை ஈடுகட்டுவதற்கு இவரை சந்திப்பது என்பது எல்லாம் முடியாது. இல்லை அவர்தான் வேலை இல்லாமல் இருக்கிறாரா அல்லது நான்தான் வேலை இல்லாமல் இருக்கிறேனா?
 

திமுக தலைமையிடம் நாங்கள் அனுமதி கேட்டு ஒரு வாரம் ஆனது. இந்த மாநாடு தொடர்பாக சில ஆலோசனைகளை அவரிடம் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருந்தது. குறிப்பாக டிசம்பர் 10ஆம் தேதி எங்கள் மாநாடு தொடங்குகிறது. அதேபோல் டிசம்பர் 11, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்காக இரு அவைகளும் கூடுகிறது. மேலும் தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில் 10ஆம் தேதி யுபிஐ தலைவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி தொடர்பாக பேசயிருப்பதாகவும் மேலும் சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வந்திருக்கின்றது. இதைப் பற்றியெல்லாம் பேசுவதற்காகத்தான் திமுக தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தோம். அவருக்கும் பணிச்சுமை இருந்த காரணத்தினால், நானும் மாநாடு தொடர்பாக சுற்றுப் பயணத்தில் இருந்ததால் உடனடியாக சந்தித்துக்கொள்ள முடியவில்லை அந்த வாய்ப்பு பின்பு கிடைத்தது, சந்தித்துப் பேசினோம். இது ஒரு வழக்கமான சந்திப்புதான்.

 

தினகரனுடன் சந்திப்பு என்ற செய்தி வந்ததும் அவருடன் கூட்டணியா என்ற சர்ச்சை உருவாகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

கொத்தமங்கலம் என்னும் இடத்தில்தான் நானும் தினகரனும் சந்தித்துக்கொண்டோம் அதும்கூட எதார்த்தமான சந்திப்புதான். காரணம், புயல் பாதித்த பகுதிகளை பார்க்கச் சென்றபோது கொத்தமங்கலத்தின் நகரவீதியில் மக்கள் கூடி இருந்த இடத்தில், என்னை அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் பேசச் சொல்லி அங்கிருக்கும் மக்கள் என்னை கேட்டுக்கொண்டார்கள். அதனால் நான் அங்கு உரையாடிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் போலீஸ் கொஞ்சம் பரபரப்பானது, என்ன என்று பார்த்தபோது டிடிவி தினகரன் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். உங்கள் வாகனங்கள் தொடர்ச்சியாக நிற்பதனால் அவர்களால் வரமுடியவில்லை, அதனால் உங்கள் வாகனங்களை கொஞ்சம் எடுங்கள் என்று என் தொண்டர்களிடம் போலீசார் பேசிக்கொண்டிருந்தனர். இந்த விஷயம் என் காதிற்கு வந்து, நான் மேடையை விட்டு இறங்குவதற்குள் தினகரன் பிரச்சார வண்டி நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே வந்தது. ஒரு மரியாதை நிமித்தமாக நான் இறங்கியதும் அவரிடம் கை கொடுத்துவிட்டு, அவருக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவ்வளவுதான் எனக்கும் அவருக்கும் இடையேயான சந்திப்பு நடந்தது. இதனை வைத்துக்கொண்டுதான் திமுகவுடன் தேர்தல் சிக்கல் ஏற்பட்டுவிட்டதால், தினகரனுடன் கூட்டணி வைக்க திருமாவளவன் முயற்சிக்கிறார் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அண்மையில் கூட முதலமைச்சரை சந்தித்து பேசினேன். அதேபோல் ஒரு விருது வழங்கும் விழாவிலும்கூட மாஃபா  பாண்டியராஜனை  சந்தித்து பேசினேன், அதேபோல் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் கடலூர் எம்.சி.சம்பத்தை சந்தித்துப் பேச நேர்ந்தது. இதுவெல்லாம் நாகரிகமான அணுகுமுறை, சந்தித்துக் கொள்வதனாலேயே கூட்டணி பேசுகிறோம் என்று கருத்து தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

 

பாஜகவிற்கு எதிராக ஒரு அணியை அமைக்க வேண்டுமென மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் எல்லாம் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கும்போது. ரஜினி, பாஜகவை பலசாலியான கட்சி என்று கருத்து தெரிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

பாஜக ஆபத்தான கட்சியா என்பதுதான் கேள்வி. ஆனால், திரு ரஜினிகாந்த் அவர்கள் அதற்கு பதில் எதிர் கேள்வி எழுப்பி பிரச்சினையை திசை திருப்பி விட்டார். கேட்ட கேள்வியின் பொருள் அடக்கம் என்பது பாஜக நல்ல கட்சியா அல்லது கெட்ட கட்சியா என்பதுதான். அதற்கு நேரடியாக, 'அது ஆபத்தான கட்சி என்று சொல்லமுடியாது, அது நாட்டுக்கு நன்மை செய்துகொண்டிருக்கும் கட்சிதான் என்று பதிலளித்து இருக்கலாம். ஆனால் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பிரச்சினையை திசை திருப்பும் வகையில் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அந்த ஒருவர் பலசாலியா இல்லையா என்ற எதிர் கேள்வி கேட்டு பிரச்சினையை திசை திருப்பிவிட்டார். இது ரஜினிகாந்தின் ஒரு நழுவல் போக்கு. அவர் நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சுற்றிவளைத்து கேள்வியின் தன்மையை மாற்றி விட்டார். இந்தப் பத்து பேர் சேர்ந்து பாஜகவை எதிர்க்கவில்லை. அவர்களின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமாக இருக்கிறது. அதனால் அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் சேர்ந்திருக்கிறார்கள். ரஜினிகாந்திற்கு பாஜக, ஆர் எஸ் எஸ், சங்கப் பரிவார் போன்றவற்றை எதிர்க்கக் கூடாது என்றுகூட காரணமாக இருக்கலாம். மத்தியில் ஆளும் கட்சியாகவும், மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாகவும் இருப்பதனால் அவர்களை எதிர்த்து எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார்.
 

 

 

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.