Skip to main content

தவித்த போலீஸ்! தாய் கொடுத்த க்ளூ; வெளிவந்த பயங்கர படுகொலை! 

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Tenkasi district valasai woman vinothini passes away case

 

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரை ஒட்டியுள்ள வலசை வயல்வெளிப் பகுதியின் கிணற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது. அக்கம்பக்கத்தில் விவசாயப் பணியிலிருப்பவர்கள் தகவல் தர, கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் கிணற்றை சல்லடையிட்டதில் சாக்குப் பையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.

 

ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று முகம் விகாரமாகச் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட இளம்பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி. என்ற எழுத்தை மட்டுமே க்ளூவாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நான்கு நாட்களாக தமிழகமெங்குமுள்ள காவல்நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் லிஸ்ட்டில் தேடியும் பலனில்லை. 

 

போலீஸ் டீம் தவித்துக்கொண்டிருந்த நிலையில்தான், காவல் நிலையத்திற்கு தன் 17 வயது மகனுடன் வந்த ஒரு தாய், "ஐயா, கொல பண்ணுன பொண்ணு ஒருத்திய தன்னோட நண்பர்களோட சேர்ந்து சாக்குமூட்டைல அடைச்சு வலசைக் கிணத்துல வீசுனதாச் சொன்னாம்யா. எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. வெவரம் தெரிஞ்சும் சும்மாயிருக்கக் கூடாதுன்னுதாம்யா, இவன நா ஒங்ககிட்ட ஒப்படைக்க வந்தேம்யா...'' என்று சொல்லி அந்த தாய், தன் மகனை ஒப்படைத்தாள்.

 

அந்தச் சிறுவனிடம் விசாரித்த தனிப்படை, உடனடியாக வலசைப் பகுதியின் 22 வயதுடைய மனோரஞ்சித் என்பவனைத் தூக்கி வந்து விசாரிக்க, நடந்தது அம்பலமாயிருக்கிறது. இப்போது அவனது நண்பர்களான வலசையின் மகா பிரபு, பரத், மணிகண்டன் உள்ளிட்டோரை கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறது தனிப்படை.

 

படுகொலைக்கு ஆளான அந்த இளம்பெண் சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டையைச் சேர்ந்த வினோதினி. அவர் மாயமான புகார் பதிவான தேவகோட்டை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்ட தனிப்படை, உடலின் அங்க அடையாளத்தை தெரிவித்த பிறகே வினோதினி என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

 

வலசைப் பகுதியின் மனோ ரஞ்சித், தன் நண்பர்களான மகா பிரபு, பரத், மணிகண்டன் உள்ளிட்டோருடன் ஆலய திருவிழாக்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் அடிக்கிற தொழிலில் இருந்திருக்கிறார். நிகழ்ச்சிகள் இல்லாத வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்தும் தனியாகவும் கஞ்சா, சரக்கு அடிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர்.

 

மனோ ரஞ்சித்திற்கு இன்ஸ்டாகிராம் மூலமாக தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த வினோதினியின் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராம் மூலம் இவர்களின் பழக்கமும் காதலும் வளர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட வினோதினியின் மீது பைத்தியமாகவே மாறியிருக்கிறான்.

 

வினோதினியோ வேறு பலரையும் காதலித்ததோடு, வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சென்னை சென்றுவிட்டாள். திருமணத்திற்குப் பிறகும் மனோரஞ்சித்துடனான தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்திருக்கிறார். இதனிடையே வினோதினிக்கும் அவரது கணவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பிறகும், மனோரஞ்சித்துடனான தொடர்பை வினோதினி விடாமல் தொடர்ந்திருக்கிறார்.

 

இதற்கு மத்தியில் பலமுறை வலசை வந்து மனோரஞ்சித்தோடு தனிமையிலும் இருந்திருக்கிறார் வினோதினி. இது மனோரஞ்சித்தின் பெற்றோருக்கும் தெரியவர, வேண்டாம் இந்தத் தொடர்பு விட்டுவிடு என்று சொல்லியும் வயது, தவறான உறவு தந்த ஈர்ப்பில் மனோரஞ்சித் தேவகோட்டையிலிருந்து வலசை வருகிற வினோதினியை தன் கிராமத்தின் ஒதுக்குப்புறமான வீட்டில் தங்க வைத்து குடும்பம் நடத்தியிருக்கிறான். கடந்த ஆக. 7 ஆம் தேதியன்று வினோதினியை ஊருக்கு வருமாறு மனோரஞ்சித் அழைக்க, வினோதினியும் வந்திருக்கிறாள். இருவரும் காட்டுப் பகுதிக்குள் சென்றவர்கள் தனிமையாகவும் இருந்திருக்கின்றனர்.

 

அதுசமயம் இன்ஸ்டாகிராம் மூலமாக வினோதினிக்கு வேறு பல இளைஞர்களுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றி வினோதினியிடம் கேட்டவன், “நான் உனக்கு உண்மையாக இருந்திருக்கிறேன். ஆனால் நீயோ...” என்று சொன்னதும் பதற்றமான வினோதினி. “நான் அப்படியெல்லாம் கிடையாது. உனக்கு நான் உண்மையாக உள்ளேன்” என்று கூறி சமாதானம் செய்திருக்கிறாள்.

 

“என்னை நம்பவில்லை என்றால் நீயே என்னைக் கொன்று விடு” என்று வினோதினி சொல்லியிருக்கிறாள். ஆத்திரத்திலிருந்த மனோ ரஞ்சித், அருகில் கிடந்த பெரிய கட்டையால் வினோதினியின் தலையில் மாறி மாறித் தாக்க, தலை, முகம் சிதறிப் போய் ரத்த வெள்ளத்தில் சரிந்த வினோதினி, சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்.

 

பதற்றத்தில் மனோரஞ்சித்தின் போதை இறங்க, தனது டிரம்ஸ் குழுவின் மகா பிரபு, பரத், கடையநல்லூர் மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை தொடர்புகொண்டு காட்டுப் பகுதிக்கு வரவழைத்திருக்கிறான். உடலை மறைப்பதற்காக ஆலோசனையில் ஈடுபட்டவர்கள் பெரிய சாக்குப் பையில் சிதைக்கப்பட்ட வினோதினியின் உடலைத் திணித்து, காட்டுப் பகுதியின் ஒதுக்குப்புறமுள்ள கிணற்றில் வீசிவிட்டு ஏதுமறியாதது போல் திசைக்கொருவராகப் பிரிந்து சென்றிருக்கின்றனர்.

 

இதுகுறித்து நாம் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜுவிடம் கேட்டதில், “பிடிபட்ட மனோரஞ்சித் விசாரணையில் நடந்ததை ஒப்புக்கொண்டான். அவரையும் உடந்தையாக செயல்பட்டவர்களையும் ரிமாண்ட் செய்துள்ளோம்” என்றார்.

 

 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.