Skip to main content

புதுவையில் ஆட்சி - தமிழ்நாட்டில் வானதி சீனிவாசன்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Tamilnadu BJP Leader change

 

அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவில் சமீபத்தில் நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் முக்கியக் காரணம் வானதி சீனிவாசன் என்கிறார்கள் பா.ஜ.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க., பா.ஜ.க. குழப்பங்களுக்கிடையே நிர்மலா சீதாராமன் கோவைக்கு விசிட் அடித்தார். அவரை கோவைக்கு வர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தது ஜக்கி வாசுதேவ். அதற்கான கோரிக்கையை ஜக்கியிடம் முன்வைத்தது வேலுமணியும் வானதி சீனிவாசனும். கோவைக்கு வந்த நிர்மலாவிடம், வேலுமணி அ.தி.மு..க எம்.எல்.ஏ.க்களை அனுப்பி சந்திக்க வைத்தார். ஜக்கியும், வேலுமணியும் வானதி சீனிவாசனும், நிர்மலாவை ரகசியமாக சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்களுடைய திட்டம் பற்றி நம்மிடம் விளக்கினார்கள் பா.ஜ.க. பிரமுகர்கள்.

 

அண்ணாமலையை நீக்கிவிட்டு வானதியை பா.ஜ.க. தலைவராக்குவது, அவரை கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக்குவது, ஜெயித்த பிறகு மத்திய மந்திரியாக்குவது என எல்லா வேலைகளையும் வேலுமணி பார்த்துக்கொள்வார். இந்த திட்டமிட்ட வேலைக்கு ஆதரவாக எடப்பாடி இருப்பார். அவரிடம் அ.தி.மு.க.விற்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ரெய்டுகள் வராது என்கிற உறுதி நிர்மலாவிடமிருந்து பெறப்பட்டு எடப்பாடியிடம் சொல்லப்பட்டது.

 

இந்தத் திட்டத்தின் அச்சாரம், சி.பி. ராதாகிருஷ்ணன் கவர்னரான உடன் அவருக்கு கவுண்டர்கள் நடத்திய பாராட்டு விழாவிலேயே வெளிப்பட்டது. அந்த விழாவில் பேசிய சி.பி.ஆர்., “வானதி, நீ கெட்டியாக வேலுமணியைப் பிடிச்சுக்கோ” என்றார். இந்தத் திட்டத்தின் ஹைலைட்டாக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வேலுமணியை முதலமைச்சர் ஆக்குவதுதான் என்கிறார்கள் கோவை பா.ஜ.க.வினர். அதற்கு அச்சாரமாக அண்ணாமலைக்கு எதிராக ஒரு விரிவான ரிப்போர்ட்டை தயார் செய்து வானதி, ஜக்கி மூலமாக நிர்மலாவிடம் கொடுத்துள்ளார். நிர்மலா அந்த ரிப்போர்ட்டை பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளார்.

 

மோடி, அமித்ஷா இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பி.எல். சந்தோஷிடம் விவாதித்திருக்கிறார்கள். அவர் ஏற்கெனவே வெளிப்படையாக நடந்த மாநில பா.ஜ.க. கூட்டத்திற்குப் பதிலாக மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்த அண்ணாமலைக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அவரே நேரடியாகப் பங்கேற்றார். கூட்டத்திற்கு வந்தவர் அண்ணாமலையிடம் பேசவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூத் கமிட்டி அமைப்பது பற்றிப் பேசினார்கள். 39 பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் பணியாளர்கள் தயார் எனக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், இந்தமுறை நாம் பாண்டிச்சேரியில் ஆட்சியை அமைப்போம். தமிழ்நாட்டில் துணை முதல்வர் பதவியில் பா.ஜ.க. அமரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை தமிழ்நாட்டில் வலுப்படுத்த வேண்டும். பா.ஜ.க. தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற வேண்டும். அதற்கு அ.தி.மு.க. முக்கியம். எனவே, அ.தி.மு.க.வை விமர்சித்து யாரும் பேசக்கூடாது. நமது கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியிருப்பது ஒரு தற்செயலான செயல். புதுவையில் ஆட்சி அமைப்பதற்காகத் தான் ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது என விரிவாகப் பேசினார். அண்ணாமலைக்கு கடிவாளம் போட்டுவிட்டு அவரது முக்கிய கோரிக்கையான, அ.தி. மு.க.வுக்கு எதிரான ஊழல் பட்டியலை அம்பலப்படுத்துவதற்கு பி.எல்.சந்தோஷ் தடை விதித்துவிட்டார்.

 

இப்பொழுது பா.ஜ.க. ஐந்து மாநிலத் தேர்தல்களில் பிசியாக இருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி அந்தத் தேர்தல் முடிந்துவிடும். அதன்பிறகு அ.தி.மு.க. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மறுபடியும் இணையும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என ஒட்டுமொத்தமாக அண்ணாமலைக்கு அதிர்ச்சி தரும் விதமாகவே பேசினார் பி.எல். சந்தோஷ். அவரது பேச்சில் எந்த இடத்திலும் அண்ணாமலையின் பாத யாத்திரையைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை.

 

அவரிடம் அண்ணாமலைக்கு எதிராகச் செயல்படும் தமிழக பா.ஜ.க. அதிருப்தியாளர்கள் எஸ்.வி.சேகர், காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா சிவா, கே.டி.ராகவன், செய்தித் தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத் போன்றவர்களுக்கு கட்சிப் பதவிகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைப் பரிசீலனை செய்யலாம் என பி.எல். சந்தோஷ் சொல்ல, பா.ஜ.க.வில் நிர்வாகிகள் மாற்றம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. பாண்டியில் ஜெகத் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரையாவது பா.ஜ.க.விற்கு கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சிகள் வேகம் எடுத்துள்ளது. அண்ணாமலைக்கு எதிராக பிராமணர்கள், கவுண்டர்கள் உட்பட பலரும் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அவரிடம் மிஞ்சி நிற்பது அவருக்கு ஆதரவான ஐ.டி.விங். மட்டுமே.

 

“அண்ணாமலை மாற்றப்படுவது ஒருவேளை நடக்காவிட்டாலும், அ.தி.மு.க. கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வானதி சீனிவாசனை கோவை எம்.பி. ஆக்குவது என்பதில் வேலுமணி உறுதியாக உள்ளார். அவரது குறி அ.தி.மு.க. தலைவர் பதவி. அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி காய் நகர்த்துகிறார். எடப்பாடி, அண்ணாமலையை எதிர்த்துப் பேசுவதற்கு முக்கிய காரணமே வேலுமணிதான் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். வேலுமணி, எடப்பாடி, பா.ஜ.க. வானதி, அண்ணாமலை ஆகியோருக்கு இடையே நடைபெறும் இந்த அதிகாரப் போட்டியில் யாரை, யார் எப்படி வீழ்த்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி நிலவரங்கள் அமையும். கோவை தொகுதியில் கமல்ஹாசன் போன்ற உறுதியான போட்டியாளர்கள் இல்லையென்றால் வானதியை எப்படியும் ஜெயிக்க வைத்துவிடுவார் வேலுமணி” என உறுதியாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.