Skip to main content

புயல் எச்சரிக்கை எண்களுக்கு அர்த்தம் இதுதான்...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

புயல் எச்சரிக்கை எண்கள், புயலின் வேகத்தையும் அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவிக்கும் ஒரு அளவீடு. இதன் அடிப்படையிலேயே கடலுக்கு செல்லலாமா, வேண்டாமா என மீனவர்கள் முடிவெடுப்பர்.
 

storm


இது மீனவர்களுக்கு மட்டுமான எச்சரிக்கை இல்லை, கடற்கரையை ஒட்டியுள்ள அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை. புயல் எச்சரிக்கை எண்களுக்கான அர்த்தம் இதுதான்...


புயல் எச்சரிக்கை எண் 1: புயல் உருவாவதற்கான வானிலை உள்ளது என அறிவிக்கும் சமிக்ஞை இது. செவ்வக வடிவிலான கூண்டு ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு வெள்ளை நிற விளக்குகள் எரியும். தூரத்தில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இது குறிக்கும். 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 

புயல் எச்சரிக்கை எண் 2: தூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை இது குறிக்கும். பகலில் செவ்வக கூண்டு செங்குத்தாக ஏற்றப்பட்டிருக்கும், இரவில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரியும். 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
 

புயல் எச்சரிக்கை எண் 3: இதில் இருந்துதான் பாதிப்புகள் சிறிது,சிறிதாக தொடங்கும். முதல் இரண்டு எண்களும் தூர அறிவிப்பாக இருக்கும். இது உள்ளூர்களுக்கான முன்னறிவிப்பு. பலத்த காற்றுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்பதற்கான அறிவிப்பு. பகலில் முக்கோண வடிவ கூண்டு தலைகீழாகவும், இரவில் மேலே வெள்ளை விளக்கும், கீழே சிவப்பு விளக்கும் எரியும். 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

cyclone warning signs

 

புயல் எச்சரிக்கை எண் 4: 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் துறைமுகத்திற்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த ஆபத்து அவ்வளவு தீவிரமாக இருக்காது. அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கான சமிக்ஞை பகலில் முக்கோண வடிவ கூண்டு, இரவில் மேலே சிவப்பு, கீழே வெள்ளை விளக்குகள். 
 

புயல் எச்சரிக்கை எண் 5: பகலில் மேலே முக்கோண கூண்டு தலைகீழாகவும், அதற்கு கீழே சீட்டு கட்டிலிருக்கும் டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே இரு வெள்ளை நிற விளக்குகளும், அதற்கு கீழே ஒரு சிவப்பு நிற விளக்கும் எரியும். 60 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதிலிருந்துதான் அபாயம் தொடங்குகிறது. இதற்கான பொருள் துறைமுகத்தின் இடது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும்.
 

புயல் எச்சரிக்கை எண் 6: 5ம் எண்ணின் வேகம்தான் இருக்கும். ஆனால் துறைமுகத்தின் வலது பக்கம் புயல் கடந்துசெல்லும். புயல் கடக்கும் நேரத்தில் துறைமுக பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதாகும். பகலில், முக்கோண கூடும் அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூடும் ஏற்றப்பட்டிருக்கும். இரவில் மேலே சிவப்பு விளக்கும், அதற்கு கீழே இரண்டு வெள்ளை நிற விளக்குகளும் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 7: 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதை உணர்த்தும் விதமாக மணல் கடிகார வடிவிலான கூண்டும், அதற்கு கீழே டைமண்ட் வடிவிலான கூண்டும் ஏற்றப்பட்டிருக்கும். இதற்கு பொருள் துறைமுகத்தை நெருங்கும் அல்லது கடந்துபோகும் புயலால் துறைமுகத்திற்கு கடுமையான வானிலை ஏற்படும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதாகும். இரவில் வெள்ளை, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 8: துறைமுகத்திற்கு இடதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் தலைகீழான முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் வெள்ளை, சிவப்பு, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 90 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

 

cyclone warning signs


 

புயல் எச்சரிக்கை எண் 9: அதே வேகம்தான் ஆனால் துறைமுகத்திற்கு வலதுபுறமாக கடந்துசெல்லும் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். பகலில் முக்கோண கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, சிவப்பு, வெள்ளை என்ற வரிசையில் விளக்குகள் எரியும்.
 

புயல் எச்சரிக்கை எண் 10:  துறைமுகத்திற்கு அருகிலோ அல்லது கடந்துசெல்லக்கூடிய கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும். மணல் கடிகார வடிவிலான கூடும், செங்குத்தான செவ்வக கோடும் ஏற்றப்படும். இரவில் சிவப்பு, வெள்ளை, சிவப்பு என்ற வரிசையில் விளக்குகள் எரியும். 120 முதல் 220 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். 
 

புயல் எச்சரிக்கை எண் 11: வானிலை எச்சரிக்கை மையத்தோடு இருந்த தகவல்தொடர்பு அற்றுப்போனது. மோசமான வானிலையால், மிக அதிகமான கேடு விளையலாம் என உள்ளூர் அலுவலர்கள் கருதுகின்றனர். என்பதுதான் இதற்கான பொருள். பகலில் மணிக்கூண்டு வடிவிலான கூடு ஏற்றப்படும், இரவில் ஒரேஒரு சிவப்பு விளக்கு மட்டும் எரியும்.

 

 

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.