Skip to main content

கரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா ? என்ன நடந்தது... அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு... வெளிவந்த ரிப்போர்ட்!

Published on 07/04/2020 | Edited on 08/04/2020


இந்தியாவில் கரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததற்கு காரணம்,டெல்லியில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாடுதான் என்பதே தலைநகரம் முதல் குக்கிராமம் வரை வாட்ஸ் ஆப் பரவலாகவும்,பரபரப்பு பேச்சாகவும் இருக்கிறது.கரோனா தாக்கத்திற்குப் பின்னால்,இஸ்லாமிய சதி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடக்கின்றன.கரோனா ஜிகாத் என்ற பெயரில் ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகிறது.

அப்படி என்னதான் நடந்தது? 

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் நூற்றாண்டு பழமையான பெங்காலிவாலி மசூதி இருக்கிறது.தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பின் சர்வதேச தலைமையகமான இந்த மசூதியில், ஆண்டுதோறும் முக்கியப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி மாநாடு நடத்துவது வழக்கம். அதுபோலவே,இந்த ஆண்டும் மார்ச் 8, 9, 10 மற்றும் 20-ம் தேதி வாக்கில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கரோனா தொற்று நாடெங்கிலும் பரவிய நிலையில், இந்த மாநாடுதான் அதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டே பிரதானமாகியுள்ளது.
 

 

issues



தப்லிக் அமைப்பினர் கரோனா வைரஸைத் திட்டமிட்டுப் பரப்பினார்களா என்ற கேள்வியை ஆராய்வதற்கு முன், தப்லீக் ஜமாஅத் அமைப்பைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. எல்லா மதத்தினரிலும் இறை மறுப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இஸ்லாமிய மதத்தில் இருப்பவர்களை இனங்கண்டு, அல்லாவை முழுமையாக ஏற்றுக்கொள்ள வைப்பதுதான் இவர்களது தலையாய கடமை. அதைத் தவிர உலக நடவடிக்கைகள் எதிலும் இவர்களின் பங்கு இருக்காது.

 

http://onelink.to/nknapp



நேரு பிரதமராக இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேலுக்கு, தப்லீக் ஜமாஅத் பற்றி உளவுத்துறை ஒரு அறிக்கை கொடுத்தது.அதில்கூட, இவர்கள் வானத்துக்கு மேலேயும்,பூமிக்குக் கீழேயும் நடப்பதைத்தான் விவாதிப்பார்களே தவிர, நாட்டு நடப்பில் எந்தத் தலையீடும் இருக்காது.இவர்களால் எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை’என்று சொல்லப் பட்டிருக்கிறது.அதனால்தான், இவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு எப்போதும் தடை விதிக்கப்பட்ட தில்லை.பாபர் மசூதி இடிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுமாறு பிற இஸ்லாமிய அமைப்புகள் கேட்டபோது, அந்த மசூதி போனாலென்ன? வேறு மசூதிகளில் நாம் தொழுவோம்.அல்லா நம்மைக் காப்பார் என்று சொன்னவர்கள் இந்த தப்லீக் ஜமாஅத்-தைச் சேர்ந்தவர்கள்.

 

issues



தற்போது நடந்து முடிந்த மாநாட்டிற்குக் கூட, பல மாதங்களுக்கு முன்பே இவர்கள் அனுமதி பெற்றுத் தான், ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஒருபுறம், ஒரு கொடிய வைரஸை உடலில் வைத்துக்கொண்டு, ஊரெல்லாம் சுற்றித்திரிந்தது இவர்களது அலட்சியமாக இருப்பினும், இதில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்குகளையும் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.கரோனா வின் தாக்கம் வேகமெடுத்திருந்த போதும், மார்ச் 9ந்தேதியில் இருந்துதான், விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகள் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11ந்தேதியே, கரோனாவைத் தொற்று வியாதி என்று அறிவித்தது.ஆனால், கரோனாவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று மார்ச் 13-ம் தேதி சொல்லிவிட்டு சாதாரணமாகப் பிரச்சனையைக் கடந்துசென்றது மத்திய அரசு.

டெல்லியில் கரோனாவின் வேகம் அதிகமானதும், மிகச்சில கெடுபிடிகளை விதித்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.அது போதாதென்பதைத் தாமதமாக உணர்ந்த பிறகுதான், மார்ச் 16-ம் தேதி முதல் கெடுபிடிகள் வலுவாகின.ஐம்பது பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்று உத்தரவு பறந்தது.அதையும்விட தாமதமாக, மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கச் சொல்லி மார்ச் 19-ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்குள் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் இந்தியா முழுவதும் பயணமாகி இருந்தனர்.

issues



தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்ட போது, அவர்கள் தப்லீக் மாநாட்டோடு தொடர்பு கொண்டிருப்பதை மார்ச் 17-ம் தேதியே மத்திய அரசுக்கு அறிவுறுத்தியாகவும், அதேபோல், தமிழ்நாட்டில் தப்லீக் மாநாட்டில் தொடர்புடையவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தமிழக அரசு தெரியப் படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால், மத்திய அரசோ அனைத்து மாநில அரசு களுக்கும் தப்லீக் ஜமாஅத் மாநாடு தொடர்புபற்றி அறிவுறுத்தியது மார்ச் 21-ல்தான்.

இதற்கிடையே, நிசாமுதீன் மசூதியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் களை மீட்கக்கோரி பலமுறை டெல்லி போலீசில் தப்லீக் ஜமாஅத் நிர்வாகிகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.மார்ச் 31-ம் தேதி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,அங்கிருந்து 1,033 பேர் மீட்கப்பட்டனர்.அவர்களில் முதற்கட்டமாக 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்திருக்கிறார்.இந்த மாநாட்டை ஒருங்கிணைத்த தலைவர்கள் மீது தொற்று நோயைப் பரவவிட்ட குற்றத்திற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் கிடுக்குப் பிடி பிடித்தாலும், மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் அல்லா மீது பாரத்தைப் போட்டுவிட்டு தலைமறைவாக இருக்கின்றனர். பலர் தாமாகவே முன்வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதலமைச்சர் எடப்பாடியும், சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷூம் விடுத்த வேண்டுகோளை ஏற்று,டெல்லியிலிருந்து திரும்பியிருந்த அனைவரும் தங்களைப்   பரி சோதனைக்குட்படுத்திக் கொண்டார்கள்.இதனைச் சுகாதாரத் துறைச் செயலாளர் அவர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஜனவரி வாக்கில் கரோனா தொற்று பரவலானபோது, விமானநிலையங்களில் கட்டுப்பாடு தேவை என்று பிப்ரவரி 12-ம் தேதியே வலியுறுத்தினார் ராகுல்காந்தி.விமானப் போக்கு வரத்தைக் கையில் வைத்திருக்கும் மோடி அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை.டெல்லி அரசின் கட்டுப்பாடுகளை மீறி தப்லீக் மாநாடு நடந்தபோதே தடுக்காமல், சட்டம் ஒழுங்கைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நழுவவிட்டது.மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவுக்காகக் காத்திருந்து, மற்ற செயல்பாடுகளைத் துரிதப்படுத்த தவறிவிட்டன.

நோய்தான் உலகின் எதிரி. நோயாளிகளை எதிரியாகப் பார்த்து, மதச்சாயம் பூசுவது ஆபத்தானது என்கிற சமூக ஆர்வலர்களும் அரசியல் நோக்கர்களும், “தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகள் அதிகரித்ததற்கு டெல்லி மாநாடுதான் காரணம் என்று மக்கள் மனதில் பதிய வைப்பதில் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. தரப்பும் துணை போகிறது.மதப்பிரிவினை அரசியலைத் தமிழ்நாட்டிற்குள் இதுவரை செயல்படுத்த முடியாத பா.ஜ.க தரப்பு இதனைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது’‘என்றும் எச்சரிக்கின்றனர்.

 

-ச.ப.மதிவாணன்

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.