Skip to main content

ஈரோட்டில் 58 ஆயிரம் பேர் கண்காணிப்பு...!  –யார் மூலம் வைரஸ் பரவியது? அதிர்ச்சி தகவல்கள்

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

 

உலகை ஆளப்பிறந்தவன் மனிதன். ஆனால், அந்த மனித இனத்தையே தனது கொடூர தொற்றால் அடக்கி அமர வைத்து விட்டது கரோனா வைரஸ். ஒவ்வொரு நிமிடமும் உயிர் பயத்தில் பதைபதப்புடன் கலங்கி வாடும் மனித குலம் இந்த வைரஸ் என்கிற கொடுங்கோலன் எப்போது புதைக்கப்படுவான் என்ற கேள்வியோடுதான் ஒவ்வொரு நொடிகளையும் கடத்துகிறார்கள்.
 

சீனாவில் தொடங்கி ஏறக்குறைய 200 நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் இந்திய சமூகத்தையும் பலமாக ஆட்டிப் படைக்கிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் அபயக்குரலின் ஒலி அதிகமாக கேட்க தொடங்கி விட்டது. இதிலிம் குறிப்பாக ஈரோடு தான் மொத்தமாக முடங்கி விட்டது. பய பீதியும் மக்களை மயானம் வரை கொன்டு செல்கிறது. 30ந் தேதி காலை வரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி (கரோனா சிறப்பு) மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட 84 நபர்களில் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி என அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு தாய்லாந்து நபர்கள் 10 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் லேடி டாக்டர் உட்பட நான்கு பேருக்கு வைரஸ் தொற்றி உறுதி செய்யப்பட்டது. இந்த நான்கு பேரும் தனி குழு. ஈரோட்டில் கரோனா வைரஸ் பரவுதலுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் மூன்று நிகழ்வுகள்.

 

erode


 

ஒன்று :
 

மார்ச் மாத முதல் வாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 40 பேர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சில நாட்கள் கலந்து கொண்ட பிறகு ஈரோடு திரும்பினார்கள் அந்த 40 பேரில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 

இரண்டு : 
 

தாய்லாந்திலிருந்து டெல்லி வந்த இஸ்லாமிய குழுவினர் 7 பேர் டெல்லியிலிருந்து மார்ச் 11ந் தேதி ஈரோடு வந்து கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை என இரண்டு மசூதிகளில் தங்கினார்கள். அதில் இரண்டு பேர் திரும்ப தாய்லாந்து செல்ல கோவை விமான நிலையம் சென்றபோது தான் அவர்கள் பரிசோதனை செய்யப்பட காய்சல் உறுதியானது. அதில் ஒரு நபர் இறந்து விட்டார். மீதி இருந்த ஒரு நபருடன் ஈரோட்டில் தங்கியிருந்த எஞ்சிய ஐந்து தாய்லாந்து நபர்கள் என 6 பேர் பெருந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி என கண்டுபிக்கப்பட்டது. இந்த தாய்லாந்து நபர்களுக்கு உதவி செய்ததாக, வீட்டுக்கு வரவழைத்து சாப்பாடு போட்டது என நெருக்கமான தொடர்பில் இருந்த 84 பேரை பெருந்துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் தான் ஈரோட்டைக் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
 

மூன்று :
 

ஈரோடு ரயில்வே காலனி ரயில்வே நிர்வாக மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர் அந்த லேடி டாக்டர். சென்ற 20 நாட்களுக்கு முன்பே கோவைக்கு பணி மாறுதல் பெற்ற அவர் கோவையிலிருந்த தனது வீட்டிலிருந்து தினமும் ரயில் மூலம் ஈரோடு வந்து சென்றுள்ளார். இவரது பூர்வீகம் கேராளாவின் பாலக்காடு மாவட்டம் சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்து வந்துள்ளார். அங்கு இவருக்கு ஏற்பட்ட தொற்று இவர் மூலம் இவரது கணவர், குழந்தை மற்றும் வீட்டில் வேலை செய்ய பெண் ஒருவர் என நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நால்வரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உள்ளார்கள்.

 

ஆக இங்கிருந்து டெல்லி சென்றவர்களாலும், தாய்லாந்திலிருந்து இங்கு வந்த குழுவினராலும், கேரளா சென்று வந்த டாக்டராலும் இவர்கள் ஈரோட்டில் பழகிய, தங்கிய, இவர்களுக்கு உதவியவர்கள் இந்த நபர்களுடன் நேரிடையாக மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்கள் என 30ந் தேதி மாலைவரை ஈரோட்டில் வசிக்கும் மக்கள் 58 ஆயிரம் பேர், 16500 குடும்பங்கள் குறைந்த பட்சம் 15 வீதிகள் என எல்லோரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அங்கு வெளிநபர்களின் சுவாச காற்று கூட செல்லாதவாறு அடைக்கப்பட்டுள்ளது. 
 

இந்த 58 ஆயிரம் பேரும் தொடர் கண்கானிப்பில் உள்ளார்கள். இவர்களில் யாருக்கேனும் காய்சல் அறிகுறி வரும் நபர்கள் எல்லோரும் பெருந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அந்த மருத்துவமனையிலும் தற்போது வரை 84 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வராமல் உள்ளனர்.
 

கரோனா வைரஸ் தொற்று இந்த மூன்று நிகழ்வுகளில் உள்ள நபர்களால் தான் மேலும் மேலும் ஈரோட்டில் கூடி வருகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இதில் எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தற்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் ஈரோட்டுவாசிகள் புதிதாக யாருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லையென்பதால் சமூக பரவல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.