Skip to main content

வேலுமணிக்காக வரும் ஈஷா! அ.தி.மு.க.வில் அடுத்த பிளவு?

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

SP Velumani to break ADMK ?

 

‘என்றென்றும் அ.தி.மு.க.காரன்’ என சனிக்கிழமையன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. இனிமேல் பா.ஜ.க.வுடன் எவ்வித கூட்டணியும் கிடையாது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, அதற்கடுத்து வரவிருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அறிவித்தது. இதனையடுத்து வேலுமணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல், உரசல் என செய்திகள் சிறகடித்துப் பறந்தது. இந்த நிலையில், வேலுமணியின் எக்ஸ் தளப்பதிவு எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டவே எனவும், இதன் பின்னணியில் ஈஷாவின் ஜக்கி வாசுதேவ் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

 

ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவை KMCH-ல் பாராட்டுவிழா நடந்தது. வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் வானதி சீனிவாசனைப் பார்த்து, “வானதி.! முன்னாள் அமைச்சர் வேலுமணியைப் பார்த்துக்கொள். எந்த சூழலிலும் அவரை கைவிடக்கூடாது” என அனைவரின் முன்னிலையில் நேரடியாகப் பேசினார் சி.பி. ராதாகிருஷ்ணன். அந்தளவிற்கு பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் வேலுமணி மீது அக்கறை வைத்துள்ளார்கள்.

 

SP Velumani to break ADMK ?

 

ஹைகோர்ட்டாவது, ...வது என்று கூறிய ஹெச். ராசாவை கைது செய்யவிடாமல் பார்த்துக்கொண்டது, வானதியின் தேர்தல் செலவைப் பார்த்துக்கொண்டது என பா.ஜ.க.வின் தமிழக தலைவர்கள் இன்றுவரை வேலுமணி புராணம் பாடிக்கொண்டிருக்கின்றார்கள். இங்குதான் இப்படியென்றால் அமித்ஷாவுடன் அவருடைய உறவு உலகம் அறிந்ததே. அண்ணாமலை வருகைக்கு முன்பே அமித்ஷாவுடன் நெருங்கி மத்திய அரசின் நீட் தேர்வு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி. எட்டுவழிச் சாலை சட்டங்களுக்கு அனுமதியளித்து ஒன்றிய அரசிற்கு முட்டுக்கொடுத்தது வேலுமணியே. அதுபோல் வேலுமணியின் சொத்துக் குவிப்பு மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்படி ஒன்றிய அரசுடன் ‘முஸ்தபா... முஸ்தபா...’ ரேஞ்சில் பின்னிப் பிணைந்து வருபவர் வேலுமணி.

 

இப்படியிருக்க, அடுத்த முதல்வர் யார்.? எனும் பிரச்சனைக்காக பா.ஜ.க. வுடனான உறவை முறித்ததில் துளியும் உடன்பாடில்லை வேலுமணிக்கு. அறிவிப்பு வந்த நாளிலிருந்து அமைதியாக இருந்தவர் இப்பொழுது ‘என்றென்றும் அ.தி.மு.க.காரன்’ எனும் பதிவைப் போட்டிருக்கின்றார். இது புரிந்தவர்களுக்குப் புரியும்” என்கிறார் மேற்கு மண்டலத்திலுள்ள அ.தி.மு.க. முன்னாள் மா.செ. ஒருவர்.

 

2021 சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் 21 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் வேலுமணி. தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. மண்ணைக் கவ்விய நிலையில் தான் பொறுப்பேற்ற 21 சட்டமன்றத் தொகுதிகளில் 17-ஐ கைப்பற்றி அ.தி.மு.க.வில் அசைக்கமுடியாத சக்தியானார். இது இப்படியிருக்க, தற்பொழுதுள்ள அ.தி.மு.க. கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் 32க்கும் அதிகமானோர் வேலுமணியின் தயவால் எம்.எல்.ஏ. ஆனவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி, “எடப்பாடி பழனிச்சாமி மீது வேலுமணி கடுமையான கோபத்தில் இருப்பது உண்மை. அதற்காக பா.ஜ.க.விற்கோ ஏனைய கட்சிகளுக்கோ எந்நாளும் போகமாட்டார். அதுபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்த ஏக்நாத் ஷிண்டேவாகவும் இருக்கமாட்டார். நான் அ.தி.மு.க. கட்சிக்காரன். நான் எதற்கு வெளியே போகணும், கட்சியை உடைக்கணும். துரோகியாக மாறனும் என்பது அவருடைய வாதம். இருப்பினும் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ.க் களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர்களும், மா.செ.க்களும் என் பக்கமே இருக்கின்றார்கள் என்பதை கோடிட்டுக் காட்டவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்பட எவ்வித முடிவையும் நான் எடுப்பேன் என்பதை அறிவிக்கவுமே இந்த எக்ஸ் தளப்பதிவு. இதன் பின்னணியில் ஜக்கி வாசுதேவ் மற்றும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நண்பர்களான கிரண் விஸ்வநாத், சிவக்குமார் ஆகியோர் இருக்கின்றனர். விரைவில் அ.தி.மு.க. வேலுமணி வசம் வருவதை யாராலும் தடுக்கமுடியாது” என்கிறார் அவர்.

 

இந்த பரபரப்பு சூழலில், இல்ல விழா ஒன்றிற்காக தமிழ்நாடு முழுமைக்கும் கட்சிக்காரர்களை தேடித் தேடி வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மற்றும் செந்தில் அழைப்பிதழ்களை வைத்து வருகின்றனர். அழைப்பிதழ் வைக்கும் போதே யார் யாரெல்லாம் வேலுமணிக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்கிற தகவல்களை ரகசியமாகத் திரட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SP Velumani to break ADMK ?

 

இதேவேளையில், மதுரை மாவட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை தினசரி சந்தித்தாலும், கூட்டணி முறிவுபற்றி தற்பொழுது வரை வாய் திறக்கவில்லை. இதேநிலை தான் ஏனைய இரண்டாம் கட்டத் தலைவர்களிடமும் உள்ளது. எப்படியாகினும் எடப்பாடி பழனிச்சாமி நம்மைத் தேடுவார் என்ற நிலையில், அவரை தவிர்க்கவே எஸ்கேப்பாகியுள்ளனர். ஒற்றைத் தலைமை வேண்டுமென கர்ஜித்த மதுரை புறநகர் கிழக்கு மா.செ.வான ராஜன் செல்லப்பாவும், மதுரை மாநகர மா.செ.வான செல்லூர் ராஜுவும். என்னைக் காப்பாற்றியது வேலுமணியே என ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்த ராஜேந்திரபாலாஜியும் பா.ஜ.க. கூட்டணி முறிவிற்கு எதிராக இருப்பது எடப்பாடியை உறுத்தியுள்ளது.

 

"வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில்தான் வருகின்றது ஈஷாவும், காருண்யாவும். ஊழல் செய்து வேலுமணி சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதி ஈஷாவிடம்தான் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலின் பொழுது கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஈஷாவிடமிருந்து தான் பணம் போனது. குறிப்பாக, வானதி சீனிவாசன் போட்டியிட்டு வென்ற கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு "ஈஷா' என முத்திரையிடப்பட்ட கவரில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். பதிலுக்கு ஈஷாவில் நடைபெறும் எவ்வித மர்ம மரணங்களையும் வேலுமணி கண்டுகொள்வதில்லை. மாறாக, காருண்யாவிற்கு எதிராக சில அமைப்புகளை தூண்டிவிட்டு "நொய்யல் ஆற்றை சுத்தம் செய்வோம்.! நீர் நிலைகளை மீட்போம்' என போராட்ட வடிவத்தை உருவாக்கி ஜக்கி வாசுதேவினை சந்தோஷப்படுத்துவது வேலுமணியின் அன்றாட வேலை. வேலுமணியின் பணம் ஈஷா மூலமாக வெளியேறி கோவையில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான அண்ணாமலையின் நெருங்கிய நண்பரான அரவக்குறிச்சி சிவக்குமாரின் சிவா இண்டஸ்ட்ரீஸ், சிவா கன்ஸ்ட்ரக்‌ஷனிலும், மற்றொரு நண்பரான கர்நாடகா கிரண் விஸ்வநாத்திடமும் சென்றடைந்து தொழில் முதலீடாக மாறியுள்ளது. ஜாம்பியாவில் செயல்பட்டு வரும் நிலக்கரிச் சுரங்கமே அதற்கு சாட்சி.! அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் பொழுது ஈஷா மையப் பொறுப்பாளர் தினேஷும், கிரண் விஸ்வநாத்தும் அண்ணாமலைக்காக நேரடியாகக் களப் பணியாற்றியது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணியை மோதவிடுகின்றனர் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி மற்றும் அண்ணாமலை டீம்” என்கிறார் வேலுமணியின் நெருங்கிய நண்பர் ஒருவர்.

 

SP Velumani to break ADMK ?

 

இதேவேளையில், “எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு தற்கொலைக்கு சமம். நமக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தாலும் ஜெயக்குமாரை வைத்து கூட்டணியில் பிளவை ஏற்படுத்துகிறார். பெயருக்காக மா.செ. கூட்டத்தினை கூட்டிவிட்டு, முன்பே அவர் எடுத்த முடிவை செயல்படுத்துகிறார். தன்னிச்சையான அவரது முடிவு நமக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, அடுத்து நாம்தான் ஆட்சி அமைப்போம். அதற்கான சூழல் நன்றாகத் தெரியும் நிலையில் நமக்கு பலமாக இருக்கும் ஒன்றிய அரசின் ஆதரவு தேவை. இப்படியிருந்தால் என்னாவது..? தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை தற்பொழுது வரை எடப்பாடி பழனிச்சாமியை யாரும் ஏற்கவில்லை. கட்சியை உடைக்க வேலுமணி துரோகி அல்ல. நமக்கு தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெ.வுமே. இருக்கின்ற எம்.எல்.ஏ.க்களை, மா.செ., நிர்வாகிகளை வைத்து தனியாகச் செயல்படுவோம். பா.ஜ.க. கூட்டணியிலேயே தொடர்வோம். உள்ளது உள்ளபடியே இப்பொழுது இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கே வரும் தேர்தலில் சீட். அனைத்து செலவுகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் செய்வது வேலுமணிக்கான ஆதரவைத் தருவது மட்டுமே என ஒவ்வொருவரிடமும் வேலுமணிக்காக கேன் வாஸ் செய்துவருகின்றனர் ஈஷா தரப்பினர்” என்கிறது உளவுப் பிரிவு.

 

ஈஷாவின் செயலால் அதிர்ச்சியிலிருக்கிறார் எடப்பாடி.

 

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.