Skip to main content

திருமணம் செய்த, செய்யப்போகும் யாரும் இதை மறக்கக்கூடாது...

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
marriage

 

இன்று நாம் சாதிவிட்டு சாதி, மதம் விட்டு மதம் என மாறி திருமணம் செய்துகொள்ளலாம். அது அரசியலமைப்பு சட்டப்படி செல்லும். ஆனால் சரியாக இன்றிலிருந்து 51 வருடங்கள் மற்றும் ஒருநாளுக்கு முன்னால் (27.11.1967) அப்படியிருக்கவில்லை... ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டால் அது சட்டப்படி செல்லாது. இப்படி ஒரு அவலநிலை ஒழிந்தது, 51 வருடங்களுக்கு முன்னால் இதே நாளில்தான்... இன்றுதான் சுயமரியாதை திருமண சட்டம் கொண்டுவரப்பட்டது. அண்ணா இருந்த குறுகிய காலத்தில் பல ஒப்பற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் இந்த சுயமரியாதை திருமண சட்டம். ஆனால் இதற்கான விதை 1928லேயே போடப்பட்டது, தந்தை பெரியாரால்... 
 

சுயமரியாதை திருமண சட்டம் வருவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே அருப்புக்கோட்டை, சுக்கிலாநத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மற்றும் மஞ்சுளாவிற்கு சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணத்தை நடத்திவைத்தார், தந்தை பெரியார். அதேநேரம் அந்த மணமகள் கைம்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் அப்படியொரு புரட்சி திருமணத்தை நடத்திவைத்தார் பெரியார். இது தெய்வகுத்தம், கலப்பு திருமணத்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் என எதிர்த்தவர்களுக்கு தனது சொற்கள் மூலம் பதிலடியை பலத்த அடியாக கொடுத்தார். அவர் அப்போது கூறியது இதுதான். ‘நான் மனித ஜாதியில் பிறந்த ஆணுக்கும், மனித ஜாதியில் பிறந்த பெண்ணுக்கும்தான் திருமணம் செய்துவைத்தேன். அது எப்படி கலப்பு திருமணமாகும். நான் என்ன மனிதனுக்கும், மாட்டிற்குமா திருமணம் செய்து வைத்தேன்.’ அதன்பின் தொடர்ந்து சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. சுயமரியாதை திருமணம் சட்டப்பூர்வம் ஆகாததால் அந்த தம்பதிகள் அனுபவித்த ஏச்சுகளும், பேச்சுகளும், கொடுமைகளும் ஏராளம். ஒரு உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் இன்று இந்த நவீன உலகத்திலேயே! பல ஆணவக்கொலைகள் நடக்கின்றன. அப்படியென்றால் 90 ஆண்டுகளுக்கு முன் என்னென்ன கொடுமைகள் நடந்திருக்கும்...

 

periyar anna


 

அதன்பின் 1954ல் சிறப்பு திருமண சட்டம் ஏற்கப்பட்டு, 1955ல் கொண்டுவரப்பட்டது. இதில் இந்து மதத்திற்குள் எந்த சாதியாக இருந்தாலும், சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்யலாம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது அந்தளவிற்கு கொண்டாடும் வகையில் இல்லை. ஏனென்றால் அதில் ஒரு குறை இருந்தது. சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்தாலும் அது சாஸ்திர, சம்பிரதாயங்களுடன்தான் நடக்கவேண்டும் என்று இருந்தது. சுயமரியாதை திருமணத்தின் நோக்கம் இதுவாக இல்லை. எந்த விதமான சடங்குகளும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதே சுயமரியாதை திருமணத்தின் நோக்கம், ஆகவே அது அப்போது நிறைவேறவில்லை.


1967ம் ஆண்டு நவம்பர் 28ம்தேதி சட்டமன்றத்தில் அண்ணாவால் சுயமரியாதை திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு திருமண சட்டத்திலிருந்த குறைகள் அனைத்தும் அதன் வழியாக களையப்பட்டது. அப்போது ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது. அந்த மசோதாவின் நகலை பெரியாருக்கு அனுப்பி வைத்தனர். அதைப்படித்த பெரியார், மாலை மற்றும் தாலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் தாலி கட்டாயம் என்ற பொருள்படுகிறது. அதனால் இதை ‘மாலை அல்லது மாலையும் தாலியும்’ என மாற்றுங்கள் என்று கூறினார். அதன்படியே அது மாற்றியமைக்கப்பட்டது.

 

periyar


 

இந்தியாவில் சமூகநீதி என்றாலே அங்குவந்து நிற்கும் முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாடு சமூகநீதியில் இந்தியாவிற்கான முன்னோடி என்றாலும் அது மிகையாகாது. அதன்படியே சுயமரியாதை திருமண சட்டமும் இந்தியாவிற்கான முன்னோடியாக நின்றது. இன்று நடைபெறும் சுயமரியாதை, சாதிமறுப்பு, மதமறுப்பு திருமணங்களிலிருந்து, மணம்முறிவு வரை அனைத்து உரிமைகளையும் கொடுக்க வழிவகை செய்தது சுயமரியாதை திருமண சட்டம். அந்த சட்டத்தை மட்டுமல்ல, அதை கொண்டுவர பாடுபட்டவர்களையும் நாம் இந்த நாளில் நினைத்து பார்க்கவேண்டும்
 

 

 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.