Skip to main content

திமுக – அதிமுகவை இணைக்க முயன்ற கடற்கொள்ளையர்!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

5.3.1916 - பிஜு பட்நாயக் பிறந்தார்!

வடநாட்டில் பிறந்து வளர்ந்த பிஜு பட்நாயக் தமிழகத்தின் எலியும் – பூனையுமான திமுக – அதிமுக என்கிற இரண்டு கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்தது.

பிஜு பட்நாயக் – ஒரிசா மாநிலம் பெல்லகுந்தா என்ற கிராமத்தில் லட்சுமிநாராயணன் என்பவரின் மகனாக 5.3.1916ந்தேதி பிறந்தார். ரவென்ஷா கல்லூரியில் படித்து முடித்தார். விளையாட்டில் ஆர்வமாக கலந்துக்கொண்ட இவர் பல்கலைகழக கால்பந்து மற்றும் ஹாக்கி அணிகளின் கேப்டனாக இருந்தார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். படித்து முடித்துவிட்டு இந்தியாவில் ராயல் வான்படையில் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
 

biju patnaik


1940 – 1942 வரை பிரிட்டிஷ் அரசின் சார்பில் இரண்டாம் உலகப்போரில் கலந்துக்கொண்டு போர் புரிந்துள்ளார். பணியாற்றினாலும், இந்தியாவிற்கான சுதந்திர போராட்டங்களில் கலந்து கொள்ள துவங்கினார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பிஜு பட்நாயக்கும் – நேருவும் நெருங்கிய நண்பர்கள். நேருவின் ஆலோசகராகவும் பிஜு இருந்தார்.
 

இந்தியாவைப்போல, இந்தோனேசியாவும் ஒரு காலத்தில் டச்சுக்காரர்களிடம் அடிமை தேசமாக தான் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்தோனேசியா சுதந்திரநாடாக செயல்பட துவங்கியது. இது டச்சுக்காரர்களை கோபம் கொள்ள வைத்தது. டச்சுக்காரர்களுக்கும் – இந்தோனேசிய ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்தோனேசியாவின் கப்பல்படை – விமானப்படை முழுவதும் டச்சுக்காரர்கள் வசமிருந்தது. இதனால் பிறநாடுகளின் உதவிகளை கேட்க இந்தோனேசியா அதிபர் சுக்ரனோ, பிரதமர் ஜஹாங்கீரை அனுப்ப முயன்றார். ஆனால் அவர் செல்ல முடியாதபடி டச்சு அரசாங்கம் கப்பல்படை, விமானப்படை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த விவகாரம் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்த நேருவின் கவனத்துக்கு செல்ல அவர் இந்தோனேசியா பிரதமரை அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர அனுப்பப்பட்டவர் பிஜு பட்நாயக்.
 

சிறந்த விமான ஓட்டியான பிஜு பட்நாயக் இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு சென்று அந்நாட்டு பிரதமரை அங்கிருந்து அவரது சொந்த குட்டி விமானத்தில் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் வந்தடைந்தார். அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்திருந்தார். ஜேம்ஸ்பாண்ட் பட சாதனை போன்றது இந்த சாதனை. இதனால் தான் அவருக்கு பூமிபுத்ரா என்கிற விருதை வழங்கி இந்தோனேசியா இன்றுவரை கொண்டாடிவருகிறது. அதே போல் காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பு விவகாரத்தில் இந்திய இராணுவ வீரர்களை காஷ்மீரில் இறக்கிவிட்ட நிகழ்வு மயிர் கூச்செரியும் நிகழ்வு.
 

இப்படி இந்தியாவை ஒட்டிய தேசங்களான நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுதந்திர போராட்டத்துக்கு தீவிரமாக ஆதரவு அளித்து வந்தார் பிஜு பட்நாயக். இதனால் இந்தியாவின் கடற்கொள்ளையர் என அழைக்கப்பட்ட பிஜு பட்நாயக் இறந்தபோது, இந்தோனேசியா அரசு தன் நாட்டு கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது.

 

biju patnaik


1946 முதல் அவர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வந்தார். 1961 ஜீலை 21ந்தேதி காங்கிரஸ் கட்சியின் ஒரிசா மாநில தலைவராக இருந்த பிஜு பட்நாயக், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவரது வயது 45 தான். 2 ஆண்டுகள் தான் அந்த பதவியில் இருந்தார். நேரு மறைவுக்கு பின் இந்திராகாந்தியின் நண்பராக இருந்தாலும் இருவருக்குள்ளும் மோதல் வந்து இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1989ல் உட்கல்காங்கிரஸ் என்கிற மாநில கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தார். அதோடு, அப்போது இந்திராகாந்தி, இந்தியாவில் கொண்டு வந்த அவசர நிலைப்பிரகடணத்தின்போது, பிஜு பட்நாயக்கும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவசர நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பின் நடைபெற்ற நாடாளமன்ற பொதுத்தேர்தலில் எம்.பி பதவிக்கு போட்டியிட்டார். அதில் வெற்றிபெற்று ஜனதா ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார்.
 

1979 செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்த முதலமைச்சராக இருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்தித்து திமுகவும் – அதிமுகவும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை வந்து கலைஞருடன் பேசினார், பின்னர் கலைஞரும் – எம்.ஜி.ராமச்சந்திரனும் சந்தித்து பேசினார்கள். வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை. ஆனால் இணைப்பு சாத்தியமாகவில்லை இதுப்பற்றி திமுக தலைவர் கலைஞர் தனது சுயசரிதையான, நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். பின்னர் ஒருமுறை, பன்ருட்டி இராமச்சந்திரன் தான் திமுக – அதிமுக இணைப்பை தடுத்தார் என பகிரங்கமாக பேசினார். பிராந்திய கட்சிகள் வலிமையாக இருந்தால் தான் தேசிய கட்சிகளை எதிர்க்க முடியும், மாநில நலனை காக்க முடியும் என்ற கருத்தை உடையவர். அதனாலே திமுக – அதிமுக இணைய முயற்சி செய்தார்.

 

biju patnaik


ஒரிசாவின் முதலமைச்சராக முதல்முறையாக 1960ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிஜு பட்நாயக். அதன்பின் மத்திய பதவிகளில் இருந்த பிஜு பட்நாயக் மீண்டும் 1990 ல் முதல்வரானார். 1995 வரை முதல்வராக இருந்தார். இவரது மனைவி கியான். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். நவீன்பட்நாயக் என்கிற மகன் அப்பாவுக்கு பின் முதலமைச்சர் பதவிக்கு வந்தார். மகள் இந்தியாவின் சிறந்த பத்திரிக்கை எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

1997 ஏப்ரல் 17ந்தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார் பிஜு பட்நாயக். அவர் மறைந்தாலும் அவரால் பலன் பெற்ற இந்தோனேசியா உட்பட எந்த நாடும் மறக்கவில்லை.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.