Skip to main content

பாசிச பாஜக ஒழிக என்றால் தேசத்துரோக குற்றமா?

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

பாஜகவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கூறுவது வழக்கமான காரியமாகிவிட்டது. தமிழ்நாடு அரசாங்கமும் மத்திய பாஜக அரசாங்கமும் மக்களின் விருப்பங்களுக்கு மாறான பல காரியங்களை தொடர்ந்து செயல்படுத்துகிறது. மக்களுடைய எதிர்ப்பை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கையை தொடர்கிறது.
 

tamilisai



சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தலைவர்  தமிழிசை பயணித்திருக்கிறார். அவருடன் பயணித்த சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி, 'பாசிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்டிருக்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய தமிழிசை அந்த மாணவியுடன் படு மோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த மாணவி தனது பேச்சுரிமை என்று கூறியதையே தவறு என்று கூறுகிறார்.

பேச்சுரிமை என்றதால்தான் அந்த மாணவியின் பின்புலம் குறித்து சந்தகேம் வருவதாக தமிழிசை கூறியிருப்பதால், உரிமைக்காக போராடுகிறவர்கள் அனைவரும் தீவிரவாத பின்னணி கொண்டவர்கள் என்ற முடிவுக்கு பாஜக போயிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில்தான் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் சதி செய்ததாக ஹைதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ் உள்ளிட்ட 5 இடதுசாரிச் சிந்தனையாளர்களை மத்திய அரசு கைது செய்தது. அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றமே மறுத்து விளக்கம் கேட்டிருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷம் போட்டிருக்கிறார் என்றால், அவருடைய ஆத்திரத்துக்கு பின்னணி என்ன என்று தமிழிசை பார்த்திருக்க வேண்டுமே தவிர பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல சின்ன விஷயத்தை பூதாகரமாக்கி, போலீஸ் கைது என்கிற அளவுக்கு போயிருக்க வேண்டியதில்லை.

 

sofia



தனது ஊரை நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூகவிரோதிகள் என்று கூறி கேவலப்படுத்திய பாஜகவை பாசிச பாஜக என்று சோபியா கோஷம் போட்டிருக்கிறார். இதை எளிதில் கடந்து சென்றிருக்கலாம். அல்லது, இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை கூறி பிரச்சனையை முடித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தமிழிசையின் சகிப்புத் தன்மையை பாராட்டியிருப்பார்கள். ஆனால், ஒரு மாணவிக்கு எதிரான தமிழிசையின் இந்த நடவடிக்கை அவருடைய பதற்றமா, மத்திய அரசு இருக்கிறது என்ற ஆணவமா? என்று விவாதிக்கிற நிலையை உருவாக்கிவிட்டது.

2011 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியவில்லை. தேர்தல் முடிவுகளை கொண்டாடிய அதிமுகவினர் கலைஞர் வீட்டு முன் வெடி போடுகிறார்கள். கலைஞருக்கு இனிப்புத் தரவேண்டும் என்கிறார்கள். கீழே சத்தத்தைக் கேட்டு இண்டர்காமில் விசாரித்த கலைஞர், நான்கு பேரை மட்டும் மேலே வரச்சொல்லி, அவர்களை உட்காரவைத்து, லட்டு எடுத்துக் கொள்கிறார். பிறகு, அந்தப் பகுதியில் உள்ள பழைய அதிமுகவினர் சிலரை விசாரிக்கிறார். கடைசியாக, அந்த அம்மாவைப் பார்த்தீங்கன்னா என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்கய்யா என்று அனுப்பி வைக்கிறார்.

இதுதான் அரசியலில் சகிப்புத்தன்மை என்பதற்கு உதாரணம். கலைஞரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தமிழிசை முன்வர வேண்டும். தமிழிசையோ அந்த மாணவியை கைதுசெய்யும்படி புகார் கொடுக்கிறார். பாஜகவின் இன்னொரு தலைவரோ, அந்த மாணவிக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார். அவர்களுடைய பதற்றம் மக்களுக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.

 

sterlite



ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாட்ஸாப்பில் பேசிய துணை நடிகை நிலானியை நீலகிரி வரை தேடிச்சென்று கைது செய்கிறார்கள். மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்களை தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர். மீத்தேன் வாயு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற வளர்மதியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஒரு ஆவணப்படம் எடுத்ததற்காக வழக்கறிஞர் திவ்யபாரதியை கொடூரமாக மிரட்டினார்கள். அவருடைய வீட்டை ரெய்டு செய்தனர். பாஜகவுக்கு எதிராக பேசுகிறவர்கள் அனைவரையும் ஆண்ட்டி இண்டியன் என்கிற அளவுக்கு மோசமான நிலையை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் சேலம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வழியில் குறுக்கிட்டதற்காக 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். எட்டுவழிச் சாலை என்ற ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கிற எல்லோரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து மிரட்டும் போக்கு நீடிக்கிறது.

அதேசமயம், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களில் பணிபுரியும் பெண்களை படுமோசமாக விமர்சனம் செய்துவிட்டு, நீதிமன்றத்தின் கண்டனங்களை அலட்சியம் செய்துவிட்டு, போலீஸ் பாதுகாப்பிலேயே சுற்றிய எஸ்.வீ.சேகரையும், பெரியார் சிலை குறித்தும், கவிஞர் கனிமொழி குறித்தும் கடுமையான கருத்தை தெரிவித்த எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் கொடுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்ததை மக்கள் மறக்கவில்லை. நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் தனிப்பட்ட வகையிலும், அரசியல்ரீதியாகவும் கருத்துத் தெரிவிக்க பாஜகவினருக்கு மட்டும்தான் உரிமை இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி நீண்டகாலம் நீடிக்காது என்பதை பாஜகவினர் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.

மத்திய பாஜக அரசு மீது டெல்லியிலிருந்து சென்னை வரை மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது. அடுத்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. அந்த தோற்றத்தை மாற்ற மோடியை கொல்ல யாரோ சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டார்கள். தமிழ்நாட்டிலோ அரசாங்கத்தைக் கவிழ்க்க சமூகவிரோதிகள் சதி செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆனால், மொத்தத்தில் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளுக்கு எதிராக மக்களின் கோபம் நீருபூத்த நெருப்பாக இருக்கிறது. அதன் சாட்சியே சோபியாக்களின் முழக்கம் என்பதை பாஜகவும் அதிமுக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஒரு மாணவியே கைது நடவடிக்கைக்கு பயப்படாத நிலை இருக்கிறது. உண்மையை உணராமல் மக்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்றால், மிகப்பெரிய எழுச்சியாக வெடித்தே தீரும்.

 

 

 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.