Skip to main content

சின்ன மம்மி ரிட்டர்ன்ஸ்! எதிர்ப்பாரா? ஏற்றுக்கொள்வாரா? மாறிவிட்டாரா? -ஏகப்பட்ட விவாதங்கள்!

Published on 04/01/2021 | Edited on 09/01/2021
ddd

 

விடுதலை நாளினை எதிர்பார்த்திருக்கும் சசிகலாவை ஜன.01 முதல் பார்க்க தினகரன், திவாகரன் மற்றும் சொந்தபந்தங்கள் அ.தி.மு.க. அரசியல்வாதிகள் அ.ம.மு.க. பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் என ஒரு நீண்ட பட்டியலே பரப்பன அக்ராகாரம் சிறைத்துறை வசம் குவிந்திருக்கிறது.

 

ஜன 27-ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா, பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். உட்பட அ.தி.மு.க. அமைச்சர்கள், சசிகலாவின் சொந்தபந்தங்கள் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்கிறார்கள். 

 

சசிகலா, பா.ஜ.க.வை எதிர்ப்பாரா? எடப்பாடியை முதல்வராக ஏற்றுக்கொள்வாரா? வரும் தேர்தலில், எடப்பாடியை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக ஒத்துக்கொள்வாரா? சசிகலாவுக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எப்படி நடந்துகொள்வார்? அவரை அ.தி.மு.க.வில் அனுமதிப்பார்களா… இல்லை அ.ம.மு.க.வின் நிறுவனத் தலைவராக அரசியல் நடத்துவாரா? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடுகிறது அரசியல் களம்.

 

ops

 

நம்மிடம் பேசிய மன்னார்குடி வட்டாரம், "சசிகலா இப்பொழுது நிறையவே மாறிவிட்டார். அவர் தனது சொந்தபந்தங்களை, குறிப்பாக… டி.டி.வி. தினகரனை ‘எதுவும் பேசக்கூடாது‘ என உத்தரவிட்டுள்ளார். சசிகலாவின் குடும்பம் மன்னார்குடி மாஃபியா என்கிற பட்டப்பெயரை தாங்கி நிற்பதை சசிகலா விரும்பவில்லை. சொந்தபந்தங்கள் தமிழகத்தை ஆட்சிசெய்யும் அடியாட்களாக இருப்பதை அவர் விரும்பமாட்டார்.

 

அவரைப் பொறுத்தவரை "நான் அக்காவுக்காகத் தான் அனைத்தையும் செய்தேன். நான் செய்த நல்லது, கெட்டது எல்லாம் அக்காவுக்கே (ஜெ) தெரியும். அதில் ஏற்பட்ட பழி பாவங்களுக்காக நான்கு வருடம் சிறையில் இருந்துவிட்டு வெளியே வருகிறேன். இன்று அக்கா இல்லாத சூழ்நிலையில்… நான் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் நானே பொறுப்பு. அதைக் கட்டுப்படுத்த அக்கா இருக்கமாட்டார். எனவே எனது செயல்கள் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நன்மை பயப்பதாக அமையும் என்பதைத் தவிர, எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் எதுவுமில்லை. அக்கா உயிரைக் கொடுத்து வளர்த்த அ.தி.மு.க.வை அழியாமல் பாதுகாப்பது மட்டும்தான் எனது லட்சியம். எனக்கு துரோகம் செய்தவர்கள், முதுகில் குத்தியவர்கள் என யார்மீதும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. அதனால் எனது சொந்தபந்தங்கள் இனிமேல் அரசியலில் தலையிட நான் அனுமதிக்கமாட்டேன்" என சசிகலா சொல்வதாக அவரது சொந்தபந்தம் சொல்கிறது.

 


விடுதலையை பெரிய விழாவாக கொண்டாடும் வகையில், பெங்களூருவிலிருந்து சென்னையில் சசிகலா தங்கப் போகும் வீடு வரை பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க சொந்தபந்தங்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கொஞ்ச நாள் அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பார்கள். அதன்பிறகு அவர்களது ஆட்டம் மறுபடியும் ஆரம்பமாகிவிடும்'' என்கிறார்கள் சசி சொந்தங்களுக்கு நெருக்கமானவர்கள்.

 

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலாவை ஏற்றுக்கொள்வதில் பெரிய தயக்கம் நிலவுகிறது. மறுபடியும் சசிகலாவின் கைப்பிடிக்குள் அ.தி.மு.க. செல்வதை இப்போது அதிகாரத்தை அனுபவிக்கும் யாரும் விரும்பவில்லை. முதல்வர் எடப்பாடி முன்பிருந்த இரண்டாம்கட்ட தலைவர் என்கிற நிலையைத் தாண்டி முதலமைச்சர் வேட்பாளர் என்கிற முதல் இடத்தைத் தொட்டுவிட்டார். பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஓ.பி.எஸ். அவரை காலைவாரிவிட எதையாவது செய்வார் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் கட்சிக்குள் இருக்கிறது.

 

இந்நிலையில் சசிகலாவை பா.ஜ.க. கையிலெடுத்துச் செயல்படு மானால், எடப்பாடிக்கு நெருக்கடி அதிகமாகும். ஒருவேளை சசிகலா மூலமாக அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிக்கலாம். அதன்மூலம் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படலாம். பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு ஓ.பி.எஸ். ஆதரவாகச் செயல்படலாம். பா.ஜ.க. -சசிகலா -ஓ.பி.எஸ். என  ஒரு அணி உருவாகுமேயானால்… அது எடப்பாடிக்கு சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். பா.ஜ.க.வுடன் சேர்ந்து அவர்களை வளர்த்துவிடும் வேலையை சசிகலா செய்யாமல் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொண்டால் சசிகலாவை அ.தி.மு.க.வின் கௌரவத் தலைவராக எடப்பாடி ஏற்றுக்கொள்வார். சசிகலா கௌரவத் தலைவரானாலும் கட்சியின் வேட்பாளர்களுக்கு அங்கீகாரம் தரும் கையெழுத்தைப் போடும் உரிமையை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.ஸும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

 

இப்படி இரண்டு தரப்பும் விட்டுக்கொடுத்தல்களுடன் செயல்பட்டால் அ.தி.மு.க.வில் ஒற்றுமை ஏற்படும். ஆனால் சசிகலா, தனது பலத்தை மறுபடியும் நிரூபிக்க முயல்வார். அவரால் எம்.எல்.ஏ. ஆக்கப் பட்டவர்கள், கட்சி நிர்வாகிகளாக உருவானவர்கள், அமைச்சர்களாக பதவி பெற்றவர்கள்… என அனைவரையும் சசியின் சொந்தம் மிரட்டும். அந்த மிரட்டலில் பலர் சசிகலாவை சந்திக்க வருவார்கள். அந்த வருகை ஏற்படுத்தும் பலம் பா.ஜ.க., சசிகலாவுக்கு கொடுக்கும் ஆதரவு இவற்றைப் பொறுத்தே சசிகலாவின் எதிர்காலம் அமையும்.

 

ரஜினியை வைத்து அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த பா.ஜ.க., இப்போது சசிகலாவைப் பயன்படுத்த திட்டம் தீட்டிவருகிறது என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். இது அ.தி.மு.க.வுக்கு நிரந்தர தலைவலியாக அமையும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

 

 


 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.