Skip to main content

நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான்...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

sivachandran


 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப்., வீரர் செல்வசந்திரன் வீரமரணம் அடைந்தார். இதனால், இவரது சொந்த ஊரான கார்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து, பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 


இவர்களில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த சிவச்சந்திரன் (33), என்ற சி.ஆர்.பி.எஃப்., வீரரும் வீரமரணம் அடைந்தார். எம்.ஏ.பி.எட்., பட்டதாரியான இவர், கடந்த 2007ம் ஆண்டு சி.ஆர்.பி.எப்., படைவீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி(27) என்ற மனைவியும், சிவமுனியன்(2) என்ற மகனும் உள்ளனர். இவரது மனைவி காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது பெற்றோர் சின்னையன்(60), சிங்காவள்ளி(55) ஆவர்.


சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். கார்குடி கிராமத்தில் பொதுமக்கள் சிவசந்திரன் வீடு முன்பு கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவசந்திரனின் வீரமரணம் கார்குடி கிராமத்தையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.    


இது குறித்து, சிவசந்திரனின் அப்பா சின்னையன் கூறுகையில், சிறு வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவனாக இருந்து வந்தான். எப்போதும் நாடு, நாடு என கூறுவான். நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான். 


விடுமுறையில் வந்திருந்தவன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் பணிக்கு சென்றான். நேற்று மதியம் இரண்டு மணியளவில் சிவசந்திரன் அவன் மனைவிக்கு போன் பேசினான். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவனை அர்ப்பணித்துக்கொண்டான். இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக பெருமைப்படுகிறேன் எனக்கூறி கதறி அழுதார்.    
 


 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.