Skip to main content

தாயைப் பற்றி பேசினால் கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை பார்த்து அந்த வார்த்தையை கூறலாமா..? - கொதிக்கும் பெங்களூர் புகழேந்தி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

fh

 

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயயலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அடுத்தடுத்த நாட்களில் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்ததோடு, கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார். இந்நிலையில், பன்னீர்செல்வமும் அவருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பொருத்து அவர்களின் வெற்றி இருக்கும். சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்பதைக் கட்சியில் கூடி பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்தான் சசிகலாவை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். எனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருந்தார். இருவரின் மாறுபட்ட கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். அவருக்கு அனைத்து விதமான அதிகாரங்களும் இருக்கிறது. திருமதி வி.கே. சசிகலா அவர்கள் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்விக்கு அவர் பெருந்தன்மையாக பதிலளித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் அதிமுகவில் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று நேரடியாக அறிவித்திருக்கலாம். ஆனால், மிக நாகரீகமாக கட்சி நிர்வாகிகள் கூடி அவர் அதிமுகவில் சேர்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெளிவாக கூறியிருக்கிறார். அதிலிருந்தே அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த ஜெயக்குமார் போன்றவர்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டிக்குப் பின்னால் ஏதோ பேசப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். 

 

விரைவில் குரு பூஜை வர இருக்கிறது. அதில் கடந்தமுறை எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டபோது பேனர் உள்ளிட்டவை கிழிக்கப்பட்டு பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. இந்தமுறை அதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தன் தாயைப் பற்றி தவறாக கூறிவிட்டார் என்று கூறி தேர்தல் நேரத்தில் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால் சசிகலா பற்றிய கேள்விக்கு, "சூரியனைப் பார்த்து... அதற்கு மேல் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்படி என்றால் சசிகலாவை நாயோடு அவர் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது அவர் சார்ந்த சமூகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்தும் குரு பூஜையில் எதிரொலிக்கும். எடப்பாடி பழனிசாமி தனது தாயைப் பற்றி பேசினால் அழுது ஆர்ப்பரிப்பார், ஆனால் அடுத்தவர்களை நாய் என்ற தொணியில் பேசுவார் என்றால் இதை தென்தமிழக மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். நிச்சயம் அவருக்கு அங்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். 

 

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் குரு பூஜையில் எதிர்ப்பு வரக் கூடாது என்ற காரணத்திற்காக இதைச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அவ்வாறு சொல்லியிருந்தால் அது பெரிய தவறு. அவர் இதை மனப்பூர்வமாக கூறியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் தலைமை பொறுப்பில் இருக்கிறார், அவருக்கு உரிமை இருக்கிறது. தற்போது பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயக்குமார் போன்றவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அவர் எடப்பாடி பழனிசாமி அரசை ஊழல் அரசு என்று கூடத்தான் விமர்சனம் செய்தார். ஆனால் அவரை ஏன் சேர்த்துக்கொண்டீர்கள். பழைய கதையைப் பேசிக்கொண்டிருந்தால் எதிர் தரப்பில் உள்ளவர்களும் பேசுவார்கள். அடுத்து கே.பி. முனுசாமி, அதிமுகவில் சசிகலா வந்தால் செத்துவிடுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். அவர் ஐந்தரை ஆண்டுகள் நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி இருக்கும்போதே சட்டமன்றத் தேர்தலில் நின்று அந்த இடத்தை திமுகவுக்கு தாரை வார்த்தவர். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதியிலும் இடைத்தேர்தல் வந்தால் அந்த மக்கள் தாங்குவார்களா? அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இன்னும் நடக்கிருக்கின்ற அரசியல் கூத்துகளை அவர் பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.