Skip to main content

கடுமையான பயணம், கரடுமுரடான பாதை; ஒரே ஒரு பெண்ணிற்காக அமைக்கப்படும் வாக்குச்சாவடி!

Published on 01/04/2024 | Edited on 02/04/2024
polling booth set up for a single voter in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. இங்கு, தமிழகம் போன்று முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 2 ஆம் தேதியும், மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதியும் எண்ணப்படுகின்றன.

இதையொட்டி, மாநிலத்தில் 2,226 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் 228 மையங்களை தோ்தல் அதிகாரிகள் நடந்து மட்டுமே சென்றடைய முடியும். அந்த அளவிற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு சவால் நிறைந்த பணி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சீன எல்லையொட்டிய அருணாச்சலப் பிரதேசம் கடுமையான நிலப்பரப்புகளைக் கொண்டது. அதிலும் 61 வாக்குப்பதிவு மையங்களுக்கு 2 நாள்களும், 7 மையங்களுக்கு 3 நாள்களும் கால் நடையாக நடந்து செல்ல வேண்டியிருக்கும்.

polling booth set up for a single voter in Arunachal Pradesh

தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களின் ஜனநாயக உரிமையையும் உறுதிபடுத்த தோ்தல் ஆணையம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் மலோகாம் கிராமத்தைச் சோ்ந்த 44 வயதான 'சோகேலா தயாங்' எனும் ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக இந்த முறையும் வாக்குப்பதிவு மையம் அவரது கிராமத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதுபோன்று கிழக்கு அருணாச்சல் மக்களவைத் தொகுதியிலுள்ள ஹயுலியாங் சட்டப்பேரவைத் தொகுதி குக்கிராமங்களில் சில குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், 'சோகேலா தயாங்' தவிர மற்ற அனைவரும் வேறு வாக்குப்பதிவு மையத்துக்கு தங்கள் வாக்கினை மாற்றிக் கொண்டுவிட்டனர். தொடர்ந்து, சோகேலா தயாங் வாக்காளருக்காக மட்டும் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி 'சோகேலா தயாங்' வாக்களிப்பதற்கு தோ்தல் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் சுமை தூக்கும் தொழிலாளிகள் உள்ளிட்ட குழுவினா் 39 கிலோ மீட்டர் கடும் நிலப்பரப்பில் நடந்து சென்று, மலோகாம் கிராமத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்க இருக்கின்றனா். இதற்கான பயணத்தை வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18 ஆம் தேதி அதிகாரிகள் தொடங்குவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மகன், மகள் கல்லூரியில் படித்து வருவதன் காரணமாக தற்போது லோஹித் மாவட்டத்தின் வக்ரோ பகுதியில் வசித்து வரும் 'சோகேலா தயாங்' மலோகாமுக்கு அரிதாகவே வந்து செல்கிறாா். எனினும், தோ்தலில் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 18 ஆம் தேதி மலோகாம் கிராம வீட்டுக்கு வந்துவிடுவேன் என சோகேலா தயாங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

polling booth set up for a single voter in Arunachal Pradesh

இதனால், சேகோலா தயாங் எப்போது வாக்களிக்க வருவாா் என்பது உறுதியாகத் தெரியாத காரணத்தால் வாக்குப்பதிவு மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேரமும் செயல்படும் எனத் தோ்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு அருணாச்சல் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் தற்போதைய எம்.பி. தபிா் கௌ மீண்டும் போட்டியிடுகிறாா். காங்கிரஸ் சாா்பில் போசிராம் சிராம் நிறுத்தப்பட்டுள்ளாா். இதையடுத்து பேசிய அம்மாநிலத் தலைமை தோ்தல் அதிகாரி பவன்குமாா் ஜெயின், ''வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது எண்ணிக்கையைப் பொறுத்து அல்ல. அனைத்து குடிமக்களும் வாக்கு செலுத்தும் உரிமை பெறுவதை உறுதிப்படுத்துவதே நமது நோக்கம். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்திற்கான எங்களின் அா்ப்பணிப்புக்கு 'சோகேலா தயாங்' அளிக்கும் வாக்கு அத்தாட்சியாக இருக்கும்..'' என்றாா். இந்திய நாட்டில் ஒரு பெண்மணிக்கு தேர்தல் அணையம் வாக்குப்பதிவு மையம் அமைப்பது வாக்கு செலுத்தும் அவசியத்தை விளக்குகிறது என குறிப்பிடத்தக்கது. 

அருணாசல பிரதேசத்தில் 44 வயது ஒற்றைப் பெண் வாக்காளருக்காக தோ்தல் அதிகாரிகள் குழு 39 கிலோ மீட்டர் கடுமையான நிலப்பரப்பில் நடந்து சென்று, மலோகாம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க உள்ளது நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

சார்ந்த செய்திகள்