Skip to main content

அனைத்து தொகுதிகளிலும் வென்றதும் உண்டு தோற்றதும் உண்டு... பாமகவின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

pmk


2019 நாடாளுமன்ற தேர்தல், யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மீதும் மாநில அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்று சொல்லப்படும் நிலையில் அதிமுக எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது. 
 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்ததற்கு ஏற்ப, பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல் கடந்த வாரம் ஒரு நாள் நள்ளிரவில் தமிழகம் வந்து, அதிமுக தொகுதி பங்கீட்டாளர் குழுவை சந்தித்துவிட்டு சென்றார். இன்று காலை பாமகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. திடீரென அடையாரிலுள்ள க்ரௌண் பிளாஸா ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசி பின்னர் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பு பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அதை உடைக்கும் வகையில் தற்போது அதிமுகவும் பாமகவும் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

பாட்டாளி மக்கள் கட்சி 1989ஆம் ஆண்டு ராமதஸால் உருவாக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்களில் 1991ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்டாலும் 1996ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.  அப்போது மதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமை வகித்த திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. சுமார் 15 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது, ஆனால் ஒரு தொகுதியில் கூட  வெற்றி பெறவில்லை. 
 

மத்தியில் தேவ கௌடாவின் ஆட்சி கவிழ்ந்தபின் 1998ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பாமக. இந்தத் தேர்தலில் பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

இந்த ஆட்சி 13 மாதங்களிலேயே கவிழ, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக இந்தத் தேர்தலிலும் அதையே தொடர்ந்தது. இத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

2004ஆம் ஆண்டு தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளிலுமே வெற்றிபெற்றது. மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

2009ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கடைசி கட்டத்தில் கூட்டணி வைத்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் போனது. அதிமுக தலைமையில் உருவான இந்த கூட்டணி, தேசிய கட்சிகளுடனான கூட்டணியில் சேராமல், தேர்தலுக்குப் பின்பே பாஜகவுக்கு ஆதரவு அளித்தது.
 

2014ஆம் ஆண்டில் பாமக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் பாஜக-தேமுதிக-மதிமுக-ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் கூட்டணி அமைத்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் பாமகவும், மற்றொன்றில் பாஜகவும் வெற்றிபெற்றன. பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். மத்தியில் பாஜகதான் ஆட்சியும் அமைத்தது, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
 

இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு. பாமக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல முறை இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறி வந்துள்ளது. அது போல ஓரிரு சட்டமன்ற தேர்தல்களில் செயல்பட்டும் உள்ளது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல்களை கூட்டணியுடன்தான் சந்தித்து வருகிறது. பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். இந்த முறை பாமக எடுத்துள்ள கூட்டணி முடிவு அதற்கு எத்தகைய பலன்களை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.