Skip to main content

ராகுல் பிரதமராவதை கட்சிகள் எதிர்க்கின்றனவா?

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
stalin

 

ராகுலை பிரதமராக முன்மொழிவதாக ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது. யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்றால் காங்கிரஸ் கூட்டணியிலேயே இல்லாத அகிலேஷ் எதிர்ப்புத் தெரிவித்தாராம். தொடக்கத்திலிருந்தே பிரதமர் வேட்பாளரை தேர்தல் முடிவுக்கு பிறகே முடிவு செய்யலாம் என்று கூறிவரும் மம்தா எதிர்ப்பு தெரிவித்தாராம்.

 

ஹய்யோ, ஹய்யோ என்று வடிவேலு மாதிரி தலையில்தான் அடித்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுக நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது, கலைஞர் பாணியில் திமுக சார்பில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக ஸ்டாலின் பிரகடனம் செய்தார்.

 

அவருடைய அறிவிப்பை கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியே தனது பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை முன்மொழியாத நேரத்தில், துணிந்து ஸ்டாலின் அறிவித்ததுதான் முக்கியத்துவம் பெற்றது.

 

அவர் அறிவித்தவுடனே, மேடையில் இருந்த பினராயியோ, சந்திரபாபு நாயுடுவோ மறுத்துப் பேசவில்லை. அவர்களுக்கும் ஸ்டாலின் கருத்தில் உடன்பாடு இருக்காதுதான். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதமர் வேட்பாளர் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய மாட்டார்கள். அதேசமயம், திமுகவின் கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. ஏனெனில் அது திமுகவின் கருத்து மட்டுமே என்று அவர்களுக்குத் தெரியும்.

 

rahul gandhi


 

இப்போதைக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளில் தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்ற கருத்துடைய கட்சிகள் என்று பார்த்தால், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும்தான். உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தமட்டில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் அணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கின்றன. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் வர மாட்டார்கள். அதேசமயம், உத்தரப்பிரதேசத்தில் அவர்களுடைய அணியை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ராகுல் கூறியிருக்கிறார்.

 

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும் எத்தனை இடங்களைப் பெறுகின்றன? தனியாக அணி அமைக்க விரும்பும் மாநிலக் கட்சிகள் எத்தனை இடங்களைப் பெற்றிருக்கின்றன? பாஜக எத்தனை இடங்களை பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்தபிறகு பிரதமர் தேர்வு குறித்து பேச்சே நடத்த முடியும்.

 

ஆனாலும், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காங்கிரஸ் தலைவர் ராகுலையே திமுக பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கும் என்பதைத்தான் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் முன்கூட்டியே பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை அறிவித்ததும் அவருடைய அறிவிப்பு நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியதும் பாஜக ஆதரவு ஊடகங்களையும், திமுக எதிர்ப்பு ஊடகங்களையும் கதறவைத்திருக்கிறது என்பதே நிஜம்.

 

நிச்சயமாக, நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தி இருக்கின்றன. தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் வெற்றிபெற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மக்கள் ஆதரவை அதிகரிக்கவே செய்யும். காங்கிரஸ் முடிவைத் தொடர்ந்து பாஜகவும் சலுகைகளை அறிவிக்கத் தொடங்குகிறது. ஆனால், அது மக்கள் மத்தியில் காங்கிரஸுக்கே சாதகமாக மாறும். காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாஜக பயந்து செய்கிறதே தவிர, மனமுவந்து செய்யவில்லை என்று சாதாரண மக்கள்கூட எளிதில் புரிந்துகொள்வார்கள்.

 

ஸ்டாலின் இன்னொரு விஷயத்தை அந்த மேடையில் அறிவித்தார். அதாவது, இப்போதுள்ள கட்சிகளுடன் மேலும் கட்சிகள் காங்கிரஸ் அணியில் இணையும் என்றார். அவருடைய அந்த வார்த்தைகள் இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளன. பாஜக கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து கட்சிகள் வெளியேறுவது இதை உறுதிப்படுத்துகிறது.

 

 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்