Skip to main content

புஸ்வானம் ஆனதா அழகிரி பேரணி!

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என்னுடன்தான் இருக்கிறார்கள் என்றும், எனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேருடன், செப்டம்பர் 5 ஆம் தேதி கலைஞர் நினைவிடத்துக்கு பேரணியாக செல்வேன் என்றும் திமுக தலைமைக்கு அழகிரி சவால் விடுத்திருந்தார்.

 

mk azhagiri

 

 

ஆனால், அதுகுறித்து திமுக தலைமை எதுவுமே கண்டுகொள்ளவில்லை. திமுகவும் ஸ்டாலினும் திமுக பொறுப்பாளர்களும் தன்னை கண்டுகொள்ளாத நிலையில், திமுகவில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார் என்றுகூட கூறி்ப்பார்த்தார்.

 

 

 

அழகிரியை திமுகவில் சேர்த்தால் மீண்டும் மதுரை திமுகவில் குழப்பம் ஏற்படும் என்று ஸ்டாலின் நினைத்தார். அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்த தென் மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள். இந்நிலையில், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தால், தங்களுடைய நிலை மோசமாகிவிடும் என்று அவர்கள் பயந்தார்கள்.

 

அதுமட்டுமின்றி, அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்குக்கூட பயந்து நடுங்கும் நிலை ஏற்படும் என்று அவர்கள் திமுக தலைமையிடம் எடுத்துக் கூறினார்கள். அழகிரியின் ஆட்களால், மதுரை மக்களிடம் திமுக மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மறைந்திருக்கிற நிலையில் மீண்டும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தலைமை முடிவெடுத்துவிட்டது.

 

thayanithi

 

எனவேதான், திமுகவிலிருந்து ஒதுங்கியிருந்த கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தன் உள்ளிட்டோரை திமுகவில் மீண்டும் இணைத்தார் ஸ்டாலின். இந்த முடிவு அழகிரிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. கலைஞர் மறைந்து ஒரு வாரத்திலேயே கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த அழகிரி முயற்சி மேற்கொண்டதை திமுகவினரோ, அழகிரி ஆதரவாளர்களோ விரும்பவில்லை. அவர்கள் அழகிரி தனிக்கட்சி தொடங்குவதையோ, திமுகவுக்கு சேதம் ஏற்படுத்துவதையோ ஏற்கவில்லை. இருந்தாலும், கட்சித் தலைமையை நிர்பந்தம் செய்வதற்காக பெரிய பேரணியை நடத்தியே தீருவது என்று அழகிரி உறுதியாக இருந்தார்.

 

அதன்படி, செப்டம்பர் 5 ஆம் தேதி காலையில் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் அழகிரியின் ஆதரவாளர்கள் கூடத் தொடங்கினார்கள். ஆனால், மீடியாக்கள் கடந்த பல நாட்களாக எதிர்பார்த்தபடி சென்னை நகர போக்குவரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில ஆயிரம்பேர் மட்டுமே காலை 11 மணி அளவில் கூடினார்கள். வாலாஜா சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே பேரணிக்காக அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. மறுபகுதியில் போக்குவரத்து வழக்கம்போல இருந்தது.

 

mk azhagiri

 

 

10 மணிக்கு பேரணி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் 11.30 மணிவரை காத்திருந்தும் 10 ஆயிரம் பேரைக் கூட தொடவில்லை. இது அழகிரி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியில் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் மன்னன், கோபிநாதன், இசக்கிமுத்து, முபாரக் மந்திரி உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்தார்கள். கட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள ஆட்கள் யாரும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பகுதியினர் கட்சி உறுப்பினர்களே இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

 

 

பேரணி முடிவில் தனக்கு பின்னால் ஒன்னரை லட்சம் திமுகவினர் குவிந்திருப்பதாக அழகிரி சொன்னாலும், பேரணியில் பங்கேற்றவர்கள் அதிகபட்சமாக 8 ஆயிரம் பேர் இருக்கலாம் என்றே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளும் அதிமுக, பாஜக ஆகியவற்றின் ஆதரவோடு அழகிரி நடத்திய இந்த பேரணி திமுகவை அதிரவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஸ்வானம் ஆனது என்பதுதான் உண்மை.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.