Skip to main content

நான்கு மணிநேர விசாரணை... நடந்தது என்ன? -நக்கீரன் ஆசிரியர்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து நக்கீரனில் செய்தியாகவும், வீடியோவாகவும் கடந்த மார்ச் 9ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து நக்கீரன் ஆசிரியருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜரான நக்கீரன் ஆசிரியர் விசாரணை குறித்து கூறியது, 
 

nakkheeran gopal


நம்மமேல ஒரு வழக்கு போடுறாங்க. ஒரு எஃப்.ஐ.ஆர். வருது. நாம உயர்நீதிமன்றம் போகிறோம். அந்த உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிவதாக நீதியரசர் சொல்கிறார். மறுபடியும் எங்களுக்கு ஒரு சம்மன் வருது, உயர்நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டதே அப்படினு சொல்றோம். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்கள் அதிகாரி சொல்றார், வரிங்களா, இல்லையா அப்படினு கேக்குறாங்க. கோவையில் இருந்து ஒரு சம்மன், இந்த எக்மோர் அட்ரஸ் போட்டு, கோவை எஸ்.பி.யிடம் இருந்து ஒரு சம்மன் வருது. அதற்கு நாங்கள் பதில் அனுப்பினோம். நீதிமன்றம்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டதே என்று. அதற்கு எந்த பதிலும் இல்லை. அதற்கு பிறகு மறுபடியும் ஒரு சம்மன், மீண்டும் கோவைக்கு 30ம் தேதி வரவேண்டும் என்று. அதை நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றோம். அவர்கள் கூறினார்கள், அவுங்க உங்களை சாட்சியாகதான் கூப்பிடுகிறார்கள். கோயம்புத்தூருக்கு ஏன் கூப்பிடுகிறீர்கள் என அவர்களைக்கேட்டுவிட்டு, சென்னையிலேயே அவர்களை விசாரியுங்கள் எனக்கூறினார்கள். அப்படியாக உயர்நீதிமன்றம் சொன்னதன் பெயரில்தான் நான் இங்கு வந்தேன். அதில் முக்கியமாக கூறப்பட்டது, கைது செய்யக்கூடாது என்பதுதான். ஆனால் இங்கு ஒரு டி.எஸ்.பி. இதையெல்லாம் சொல்லவில்லையென்றால் என்ன ஆகும்னு தெரியுமா என்று மிரட்டுகிறார். இதன் நோக்கம் என்ன? எனக்கு இப்போதான் இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பெரிய, பெரிய தலைகளையெல்லாம் காப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.  


உள்ளே விட்னஸ் எக்ஸாமினேஷன் (witness examination) அப்படினு ஒரு ரூம். ஆனால் உள்ளே போனால் இரண்டு செல் இருக்கிறது. அதற்கு எதிரே ஒரு அறை. இந்தப் படத்திலெல்லாம் காட்டுவாங்கள்ல, அந்தப்பக்கம் பேசுறத, இந்தப்பக்கத்திலிருந்து பார்க்குறமாதிரி அந்த மாதிரி இருந்தது அறை. 

 

nakkheeran gopal


அந்த வீடியோவிற்கு பிறகு நாங்கள் 5 இதழ்களை முடித்திருப்போம். உங்களுக்கு யார் இதைக்கொடுத்தார்கள், இதை யார் கொடுத்தார், பின்னாடி சொல்றிங்களே அந்த பொண்ணு யாரு. இப்படி ஒவ்வொரு வரிக்கும் கேள்விகள், கிட்டதட்ட 30, 40 கேள்விகள், இதற்கிடையில் இதெல்லாம் சொல்லைனா என்ன ஆகும் தெரியுமா என ஒரு டி.எஸ்.பி. எச்சரிக்கிறார். அதற்கு நான், ஐயா சோர்ஸை நாங்கள் ரிவில் பண்ணமாட்டோம். ஏன்னா, என்னைய நம்பி ஒரு சோர்ஸ், எனக்கு செய்தி தருகிறார். அந்த செய்தியைக் கொடுத்தவர்களை நாங்கள் காட்டிக்கொடுப்பது, இப்போது கற்பை சூரையாடினார்களே, அதைவிட மோசமான செயல், அதனால நான் அதை செய்யமுடியாது. அதனால அதற்காக என்னை என்ன நீங்கள் தண்டிக்க வேண்டுமோ, தண்டித்துக் கொள்ளுங்கள். அப்படினு சொல்லிட்டேன். 
 

இப்போது அங்கையே வைத்து ஒரு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அந்த செய்தியில் ஒன்று சொல்லிருப்போம். ஒரு பாதிக்கப்பட்ட பெண் இரண்டு வருடங்களாக பேசமுடியாம இருக்குனு, அந்த பொண்ணு யாரு? எங்க இருக்கு? அதேபோல ஒரு போலீஸ் சோர்ஸ் நமக்கு சொல்லுது. 1,100 வீடியோக்கள் இருந்ததை அவர்கள் பேரம் பேசி அழிச்சுட்டாங்க அப்படினு. யார்ட்ட என்ன பேரம் பேசுனாங்க? எவ்வளவு பேசுனாங்க? இப்படியான கேள்விகளெல்லாம் அந்த சம்மன்ல இருக்கு. ஏழு வருஷமா இது நடந்துட்டு இருக்கு அப்படினு சொன்னேன். உடனே ஏழு வருஷம்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அப்படினு கேள்வி கேட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. உடனே நான் சொன்னேன், அந்த ஒரு வீடியோ போதும்ங்க. 1100 வீடியோ இருக்குறதுக்கு சாட்சி. அந்தப் பொண்ணு கதறுது, அண்ணா காப்பாத்துங்க அண்ணானு. இவன் பின்னாடி இருக்குறவனை கூப்டுறான். அப்போ பின்னாடி ஆள் இருக்காங்க, எத்தனையோ பேர் இருக்காங்க அப்படினு சொன்னவுடனே... பின்னாடி எத்தனை பேர் இருந்தாங்க? யார், யார்னு சொல்லுங்க அப்படினு கேக்குறாங்க இதையெல்லாம் கண்டுபிடிக்கவேண்டியது அவங்க பொறுப்பு இல்லையா. அதுலயும் அந்த டி.எஸ்.பி. ஒருத்தரு இதுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் தெரியுமா? அப்படிங்குறாரு. 

 

nakkheeran gopal


அவுங்க சொல்றாங்க, இப்போ இந்த புத்தகங்களை வைத்துதான் நாங்க விசாரணைக்கு போகப்போகிறோம் என்று. அப்போ இத்தனை நாட்களாக போலீஸ் என்ன செய்தது. அதற்கு நான், பிப்ரவரி 12ம் தேதியே ஒரு நாலு பேர் பேரு கம்ப்ளைண்ட்ல இருக்கு அப்படினு சொல்றாங்க. நாங்க மார்ச் 9ம் தேதிதான் போட்டோம். அதுவரைக்கும் பொள்ளாச்சியே தகதகச்சு இருந்துச்சு. அப்போதெல்லாம் உங்களுக்கு தெரியலையா? நக்கீரன் செய்தி போட்டதுக்கு பிறகுதான் தெரியுதா அப்படினு கேட்டேன். அதற்கு அவுங்க, இல்லை நீங்க 1,500 வீடியோனு போட்டிங்க, 250 பெண்கள்னு போட்டிங்க. யார், யார் அந்தப் பெண்கள் அப்படினு கேக்குறாங்க. தெரிந்தாலும் அதை எப்படி சொல்லமுடியும். வீரப்பன் விஷயத்திலிருந்தே நாம் சொல்லிக்கொண்டிருப்பதுதான், எனக்கு காட்டிக்கொடுக்க தெரியாது.
 

ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியாகியது, ஒரு குழந்தையை கொன்று விட்டார்கள் என்று. அந்த ஆடியோவை போட்டுவிட்டு, இதுகுறித்து புலனாய்வு செய்து பார்க்கும்போது, திருநாவுக்கரசு பண்ணை வீட்டை சுற்றி எதாவது பிணம் புதைக்கப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்தோம் என ஒரு வார்த்தை வரும். உடனே விசாரணையில் ஆராய்ந்தீர்கள் என்றால் எப்படி ஆராய்ந்தீர்கள், எப்படி போய் தோண்டிப் பார்த்தீர்கள். அப்படினு கேட்டாங்க. 
 

இதில் பிரகாஷ், அருள்குமார் என இரண்டு நிருபர்கள் சம்மந்தப்பட்டிருப்பார்கள், என் தம்பிகள். அந்த இருவரின் செல்ஃபோன் நம்பர்களையும் கொடுங்கள். எதற்கு எனக்கேட்டபோது, இல்லை அவர்தானே போய் விசாரிச்சாரு, உடனே கொடுங்கள், நாங்கள் அவர்களுக்கு சம்மன் கொடுக்கவேண்டும். அப்படிங்குறாங்க. 
 

nakkheeran gopal


 
இப்போது கொடுக்கப்பட்ட சம்மனில் சில கேள்விகள் இருக்கு. அதற்கான பதிலை 3ம் தேதிக்குள் கொடுக்கவேண்டும் எனக்கூறினார்கள். அதற்கு நான், நீங்கள் கேட்டமாதிரி 3ம் தேதிக்குள் எங்களால் கொடுக்க இயலாது. முடிந்தவரை சீக்கிரம், இரண்டு, மூன்று விஷயங்கள் குறித்து கொடுக்க முயற்சி செய்கிறேன். அப்படினு எழுதி கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கிறேன்.  
 

ஒரு சாட்சி என்ன செய்யணுமோ அதை செய்துள்ளேன். எங்களிடம் இருந்த ஆதாரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்தி கொடுத்துவிட்டோம். இதற்குமேல் என்ன செய்யவேண்டும். ஆனால் அதையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு அவர்கள், புத்தகத்தில் வந்த செய்தியில் இதை யார் சொன்னார்கள், அதை யார் சொன்னார்கள் என சோர்ஸை அறிந்துகொள்வதிலையே குறியாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நாம பெயர் மாற்றப்பட்டுள்ளது என ஒரு பெயரை போட்டால், அவரின் இயற்பெயர் என்னவென்று கேட்கிறார்கள் அதை எப்படி நாம் கூறமுடியும். 
 

இப்போ வெளியே வரும்போது ஒரு பெண் எஸ்.பி., இங்க பாருங்க, இப்போ விசாரணை போய்ட்டு இருக்கு. இதுல நீங்க ரொம்ப கவனமாக இருக்கணும். அதனால இதை யார்ட்டையும் சொல்லிராதிங்க அப்படினு சொல்றாங்க. 
 

 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.