Skip to main content

காஞ்சி ஜெயேந்திரர் என்னிடம் தொலைபேசியில் பேசியது என்ன? - நக்கீரன் கோபால்

Published on 12/02/2018 | Edited on 12/02/2018

22.1.2018 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில்  நடைபெற்ற அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் படத்திறப்பு மற்றும்  நூல் ஆய்வு நிகழ்வில் ‘நக்கீரன்’ கோபால் அவர்கள் உரையாற்றினார்.


 

Nakkheeran Gopal Jeyendhrar Conversation

அவரது உரை வருமாறு:

திருவரங்கம் தந்தை பெரியார் படிப்பகம் 5  ஆம் ஆண்டு விழா - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - அக்னிகோத்திரம்  இராமானுஜ தாத்தாச்சாரியார் படத் திறப்பு - நூல் ஆய்வுரை பொதுக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் மானமிகு அய்யா ஆரோக்கியராஜ்  அவர்களே, எனக்கு முன் வரவேற்புரையாற்றிய மானமிகு மோகன்தாஸ் அவர்களே,  இந்நிகழ்வில் அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின்  படத்தினைத் திறந்து வைத்து, அவரது நூல் ஆய்வினை செய்யவிருக்கும் தமிழர்  தலைவர் அருமை அய்யா மானமிகு ஆசிரியர் அவர்களே, மேடையில் இருக்கும் கழகத் தோழர்களே, இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் பெரியோர்களே, நண்பர்களே!
முக்கியமாக ‘நக்கீரன்’ வாசகர்களே, ஊடகவியலாளர்களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனைவரையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன். ‘நக்கீரன்’ பப்ளிகேஷன் என்கிற ஒரு பதிப்பகம் நாங்கள் ‘நக்கீரன்’ பப்ளிகேஷன் என்கிற ஒரு  பதிப்பகம் வைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட 1333 நூல்களை  வெளியிட்டிருக்கிறோம். அதில் சொல்கிற மாதிரி நூல் எது என்று கேட்டவுடன்,  முதல் நூலாக நம்முடைய வாயில் வருவது அக்னிகோத்திரம் இராமானுஜ  தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய  ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ நூல்தான்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்கிற தொழில் இருக்கிறது. அந்தத் தொழிலை நடத்தி வரும்பொழுது, நாம் என்ன செய்தோம் என்று நம்மை நாமே திரும்பிப் பார்க்கின்றபொழுது, ‘நக்கீரனை’ப்பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 30 ஆவது ஆண்டு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நக்கீரனுக்கு. நிறைய விலை கொடுத்திருக்கிறோம். இந்தப் புண்ணியவதி போகும்பொழுது, என்மீது 261 எஃப்.அய்.ஆரைப் போட்டு விட்டுத்தான் சென்றார்கள். இன்றைக்கும் அது எனது தலைக்குமேல் இருக்கிறது. மூன்று கொலை வழக்கு; நான்கு கடத்தல் வழக்கு; ஒரு பொடா வழக்கு; ஒரு ஆயுத வழக்கு. இதுமட்டுமல்லாமல், நூற்று சொச்சம் டிபர்ட்மெட்ரி வழக்கு. இவையெல்லாம்  இருக்கிறது. இதையெல்லாம் கடந்துதான் நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பாதை என்பது, நல்ல தார்ச்சாலை அல்ல என்பது எங்கள் எல்லோருக்கும்  தெரியும். என் தம்பி ‘நக்கீரன்’ பொறுப்பாசிரியர் லெனின் வந்திருக்கிறார்; எங்களுடைய செய்தியாளர் ஜே.டி.ஆர். வந்திருக்கிறார்; இன்னொரு தம்பி மகேஷ்  வந்திருக்கிறார்; எங்களுடைய முகவரும் வந்திருக்கிறார்.

இந்தப் பணியே வேண்டாம் என்று  எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாம் ஊருக்குச் சென்றாலும், இவ்வளவு நாள் நீ சென்னையில் இருந்தாயே, என்ன செய்தாய்? என்று என்னிடம் யாராவது கேட்டால், ‘‘பெரியார் விருது’’ வாங்கியிருக்கிறேன்  இரண்டு முறை. தமிழக அரசிடமிருந்து - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின்  கைகளினால் ஒன்று. நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களிடம் ஒருமுறை  வாங்கியிருக்கிறேன். இதைவிட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும். ஏனென்றால்,  சாதாரண ஒரு கடைநிலை ஊழியராக வேலை பார்த்த, ஒரு இராமநாதன் என்கிற  ஒருவருக்கும், படிப்பறிவே இல்லாத இராஜமாணிக்கம்மாள் என்கிற ஒரு  அம்மையாருக்கும் பிறந்தவன்தான் இந்த ‘நக்கீரன்’ கோபால். பெரிய லட்சியத்தோடு நான் வரவில்லை. சென்னை வந்த பிறகு, ‘நக்கீரன்’ இதழை ஆரம்பித்தோம்.  ஆரம்பித்த பிறகு ‘நக்கீரனாக’ வாழ்வதற்குக் கஷ்டப்பட்டோம். இது  எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

‘நக்கீரன்’ ஒரு விஷயத்தைச்  சொல்லும்பொழுது, ‘‘இவர்களுக்கு வேறு வேலையில்லை’’ என்று சொல்வார்கள். ஒரு  நான்கு மாதமோ, ஆறு மாதமோ ஓடிய பிறகு, ‘‘இதை ‘நக்கீரன்’ அன்றைக்கே  சொன்னார்களே என்பார்கள். அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள்  இறக்கும்பொழுது 102 வயது. அவர் ‘நக்கீரனில்’ எழுதுவதற்கு  ஒப்புக்கொள்ளும்பொழுது 95 வயது. ஒரு பெரியவர்; இதற்கு முன் எல்லோருக்கும் தெரியும், 2004 செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 5.45 மணி - காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜபெருமாள் கோவிலில், சங்கரராமன் என்பவரை வெட்டிக் கொல்கிறார்கள். எங்களுடைய புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த தம்பிகள் அப்பொழுது எல்லோருக்கும் ஒரு கேள்வி  இருந்தது. அந்தக் கோவில் பெரியதாக இருக்கும். மாலை நேரத்தில் அந்தக் கோவிலுக்குள் ஒருவரை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். அது யாராக இருக்கும்?  என்று எங்களுடைய புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த தம்பிகள் எல்லோரும் அந்த விஷயத்திற்குள் செல்கிறோம். புலனாய்வு செய்து செய்தியை 6 பக்கத்தில்  வெளியிடுகிறோம். அந்தச் செய்தி வெளிவந்தவுடன், தீயாகப்  பறந்தது. அந்தச் செய்தியைப் படித்து முடிக்கும்பொழுது, அந்தக் கொலையை யார்  செய்ததாகத் தெரிய வரும் என்றால், இப்பொழுது பதவியில் இருக்கிற காஞ்சி  பெரியவர் ஜெயேந்திரர்தான் என்று அந்தச் செய்தி முடியும்.

காலையில், எனக்கு பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘‘என்ன இப்படி செய்துவிட்டீர்களே?’’ என்று கேட்கிறார்கள். ‘‘நாங்கள் எழுதிய ஆறு பக்கக் கட்டுரையைப் படித்தீர்களா?’’ என்று நான் கேட்டேன். ‘‘படித்தோம்’’ என்றார்கள். ‘நக்கீரன்’ அட்டையில் என்ன படம்  போட்டிருந்தோம் என்றால், காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி அவர்கள்  குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்; அவருக்குப் பக்கத்தில் சங்கரராமன்  அவர்களும் குளித்துக் கொண்டிருப்பார். இதுதான் அட்டைப் படம்.

ஒரு அட்டைப் படம் ஒரு கதை சொல்லும்  என்பார்களே, அதுபோன்று, சங்கரராமன் எவ்வளவு முக்கியமானவர் என்பதை அந்தப் படம் சொல்லும். ஏனென்றால், இவ்வளவு பெரிய சாமிகளாக இருக்கிறவர்கள், தான்  குளிக்கும்பொழுது, யாரையும் பக்கத்தில் அண்டவிடமாட்டார்கள் என்பது  எல்லோருக்கும் தெரியும். இந்த அளவிற்கு அன்னியோன்னியமாக இருக்கிற ஒருவர்,  அவர் கொல்லப்படுகிறார். புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்; புரியாதவர்கள்  விட்டுவிடுங்கள் என்று சொல்லியாயிற்று. சங்கரராமன் வீட்டில், அவர்களுடைய  அம்மா, துணைவியார், மகன், மகள் அவர்களிடம் உரையாடி, அவருக்கு என்ன என்ன  போட்டிகள் இருந்தன என்பதையெல்லாம் வைத்துதான் நாங்கள் அந்தக் கட்டுரையை  எழுதியிருந்தோம். சங்கரராமன் கொலைக்குமுன் நடந்ததை நான் சொல்லாமல்  விட்டுவிட்டேன். அதை சொல்கிறேன்.


சோமசுந்தர கனபாடிகள் என்கிற  ஒருவரிடமிருந்து எங்களுக்குக் கடிதம் வந்துகொண்டே இருக்கும். ஜெயேந்திரர்  செய்கிற அட்டூழியங்களை எல்லாம் கடிதமாக எழுதிக் கொண்டிருப்பார் அவர்.  அந்தக் கடிதங்களை எல்லாம் பைல் செய்து வையுங்க  என்று தம்பிகளிடம்  சொல்வேன். கடைசியாக ஒரு கடிதம் வருகிறது ஆகஸ்ட் 30 ஆம் தேதியிட்ட கடிதம்.  அதில், இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் என்னுடைய உயிருக்கு ஆபத்து  இருக்கிறது. நான் உங்களுக்குப் பல முறை கடிதம் எழுதியிருந்தேன். ஆனால்,  நீங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்று அதில் எழுதியிருந்தது. அந்தக் கடிதம்  எங்களுக்கு ஒன்றாம் தேதி கிடைக்கிறது. 3 ஆம் தேதி அந்தக் கொலை  நடைபெறுகிறது. சோமசுந்தர கனபாடிகள் பெயரில் கடிதம் எழுதியதே, சங்கரராமன் அவர்கள்தான் அந்தக் கடிதங்கள் வைத்திருந்த பைலை  எடுத்துப் பார்த்த பிறகுதான், 6 பக்கக் கட்டுரையை எழுதினோம். சோமசுந்தர  கனபாடிகள் பெயரில் கடிதம் எழுதியதே, சங்கரராமன் அவர்கள்தான். அவர் இறந்த  பிறகு, எங்களுடைய புலனாய்வில் தெரிந்தது.

அவர்தான் அந்தப் பெயரில், ஜெயேந்திரர்  செய்யும் அத்துணை அட்டூழியங்கள் குறித்தும் எழுதியிருந்தார். இந்தச் செய்தி  வந்தவுடன், இந்தக் கொலையை செய்தது இவர்கள்தான் என்று சொல்லி, ஐந்து பேரை  சரண்டர் செய்கிறார்கள். அவசர அவசரமாக அந்த ஐந்து பேரும் சரண்டர்  ஆகிறார்கள். எங்களுக்கு உடனே பொறி தட்டியது; இதில் சந்தேகம் இருக்கிறது;  இன்று மாலையே எப்படி ஐந்து பேர் சரண்டர் ஆவார்கள்? எங்கேயோ இடிக்கிறதே,  அதை முதலில் கண்டுபிடியுங்கள் என்று சொன்னேன்.

அந்த ஐந்து பேரைப்பற்றி விசாரித்ததில்,  அந்தக் கொலை நடந்தபொழுது, இவர்கள் 5 பேரும் சிறைச்சாலையில்  இருந்திருக்கிறார்கள். அவசர அவசரமாக அவர்கள் வெளியே எடுக்கப்பட்டு, அவசர  அவசரமாக சரணடைய   வைத்தார்கள். இந்த 5 பேரும் என்ன குற்றம் செய்துவிட்டு  சிறைக்குச் சென்றார்கள்; என்றைக்கு வெளியே வந்தார்கள் என்பதையெல்லாம்  அவர்களுடைய படங்களைப் போட்டு செய்தி வெளியிட்டோம். அந்த இதழ்  வெளிவந்தவுடன், எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. என்னை பார்க்கவேண்டும் என்றார் ஜெயேந்திரர்!

‘‘கோபால்’’ என்றது அந்தக் குரல்.
‘‘யார்?’’ என்றேன் நான்.
‘‘நான்தான், ஜெயேந்திரர் பேசுறேன்’’ என்றார்.
நான் உடனே ‘‘சாமி, எங்கே இருக்கிறீர்கள் சாமி’’ என்றேன்.
‘‘நான் இங்கேதான் இருக்கிறேன்; நீங்கள் எங்கே இருக்கேள்’’ என்றார்.
‘‘சாமி நான் சென்னையில் இருக்கேன்’’ என்றேன்.
‘‘உங்களைப் பார்க்கவேண்டுமே’’ என்றார்.
‘‘உடனே பார்க்கணுமா சாமி’’ என்றேன்.
‘‘ஆமாம்! இன்னைக்குப் பார்த்தா நல்லா இருக்கும்’’ என்றார்.
"அங்கே என்னுடைய தம்பி பிரகாஷ் இருக்கார்;  உடனே அவரை அங்கே வரச் சொல்கிறேன்; நீங்கள் என்னிடம் என்ன பேசவேண்டும் என்று  நினைக்கிறீர்களோ, அதை அந்த தம்பியிடம் சொல்லுங்கள்; நீங்கள் என்ன  வேண்டுமானாலும் பேசுங்கள்; நான் அதனை அப்படியே வெளியிட்டு விடுகிறேன்’’  என்றேன்.
‘‘சரி, கொஞ்சம் அவசரம், அனுப்புங்கள்  கோபால்’’ என்றார்.

இந்தப் புலனாய்வுக்காக அங்கே ஒரு டீம் இருந்தது. பிரகாஷ்  என்ற தம்பி இருக்கிறார், ஒரு போட்டோ கிராபரும் இருக்கிறார். கேள்விகள் எல்லாம் சங்கரராமன் சாவைப்பற்றியே இருக்கவேண்டும். இங்கே உள்ள தம்பியிடம், ‘‘பிரகாஷ்  தம்பிக்குப் போன் செய்து, சாமி எனக்குப் போன் செய்தார்; உடனே வரச்  சொல்லுகிறார் என்று அவரிடம் சொல்லி, உடனே மடத்திற்குப் போகச் சொல்லுங்கள்;  போவதற்கு முன், அவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் சங்கரராமன் சாவைப்பற்றியே  இருக்கவேண்டும். 20, 30 கேள்விகள் இருந்தாலும் பரவாயில்லை’’ என்று  பொறுப்பாசிரியரிடமும், இணை ஆசிரியரிடமும் சொல்லியவுடன், அவர்கள் அதேபோன்று  செய்தார்கள். அந்தக் கேள்விகளை பிரகாஷ் தம்பியிடம் கொடுத்துவிட்டு  ‘‘தம்பி, கேமிரா  இருக்கிறதா?’’ என்றேன்.
‘‘சின்ன கேமிரா இருக்கிறது’’ என்றார்.
கேமிராமேனையும் அழைத்துக் கொள்ளுங்கள்;  டேப் வைத்துக்கொள்ளுங்கள்; கேமிரா முக்கியம், மைக்ரோ டேப் மிக முக்கியம்.  அவர் பேசுவதெல்லாம் எனக்கு டேப்பில் பதிவு செய்ய வேண்டும்; போட்டோவும்  வேண்டும்.

இரண்டு மணிநேரமாகப் பேசியிருக்கிறார். அவர் பேசியது நம்முடைய இதழில் வெளிவந்ததும், அடுத்த போன் வருகிறது. "என்ன கோபால், இப்படி பண்ணிட்டேள்’’ என்று.
‘‘சாமி, நீங்கள் சொன்னதைத்தான் வெளியிட்டிருக்கிறோம்’’ என்றேன். அவர் என்ன சொல்லியிருந்தார் என்றால், என்னுடைய கால் பெருவிரல் நகத்தில் ஏதேனும் சின்ன காயம் பட்டால்கூட என்னுடைய  பக்தர்கள் பொறுத்திருக்கமாட்டார்கள் என்று. அப்படி பொறுக்கமாட்டாமல், ஒருவர் கொன்றுவிட்டான் சங்கரராமனை. இதைத்தான் அவர் சொல்ல வருகிறார். இதுதான் அவருக்கு எதிராக அமைந்த விஷயம். அவர் நம்மை அழைக்காமல்  இருந்திருக்கலாம். பதிவான டேப்பிலும் அந்தத் தகவல் இருந்தது. எல்லோரும் அவரைத் திட்டினார்கள்; ஏன் நீங்கள் அவர்களை அழைத்து பேட்டி கொடுத்தீர்கள் என்று. தொடர்ச்சியாக மூன்று இதழில் செய்திகள் வெளிவந்துவிட்டது. குறிப்பாக  இவர்தான் கொலைக்குக் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்ட ஒன்றுதான். ஒரு  தீபாவளி அன்றைக்கு நல்ல நாளாகப் பார்த்து - அவருக்கு அன்றைய தீபாவளி இருண்ட தீபாவளியாகப் போயிற்று. அவரை கைது செய்தார்கள்.

உங்களால்தான் கைது செய்தார்கள் என்று  எல்லோரும் சொன்னார்கள். வாழ்க்கையில் நல்ல விஷயத்தை அன்றைக்குத்தான் செய்திருக்கிறோம் என்று நினைத்தேன். இந்தியாவுக்கே காஞ்சி மடம்தான் ஒரு தலைமையிடமாக இருந்தது. சங்கரராமன் கொலைக்கு முன், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்துப் பெரிய தலைவர்கள் என்று சொல்கிறவர்கள் எல்லாம் காஞ்சி மடத்திற்கு வந்து தரையில் அமர்ந்து பார்த்துவிட்டுப் போவார்கள். இந்தப்  பிரச்சினை வந்த பிறகு, அது தலைகீழாக மாறிவிட்டது.

பிறகு தான் நாங்கள், காஞ்சி மடத்தைப்பற்றிய சில தகவல்களை வெளியில் கொண்டு வரவேண்டும் என்று எங்களுடைய ஆசிரியர்கள் குழுவில் ஆலோசனை செய்தோம். இதை யார் சொன்னால் சரியாக இருக்கும் என்று  ஆலோசித்தோம். அப்பொழுதுதான் அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள், இந்து பேமிலியினுடைய ஆஸ்தான குருக்கள். அவர்களைப் பிடிக்கலாம்  என்று நினைத்தோம். என்னுடைய ஆசான் அய்யா சின்னக்குத்தூசி அவர்களுடைய நண்பர் சம்பத் அவர்கள், எனக்கு தாத்தாச்சாரியாரைத் தெரியும்; நான் அழைத்துப்  போகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார்.  நாங்கள் அவரைச் சந்திக்கையில், அவருக்கு  95 வயது இருக்கும். ஜெயேந்திரர் செய்த விஷயங்களையெல்லாம் தெரிந்துகொண்ட  அவர், ‘‘நான் அன்றைக்கே பெரியவாள் கிட்டே சொன்னேன்’’ என்றார்.

நம்மிடம் ஆரா என்கிற தம்பி இருந்தார்.  இவர்தான் வருவார் சாமி, நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள்; நாங்கள்  வெளியிடுகிறோம் என்றேன். டேய், உனக்கு தைரியம் இருக்கிறதாடா இதை  எழுதுவதற்கு என்று கேட்டார். நீங்கள் என்ன சொல்கிறீர்களே, அதனை  எழுதுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்; எங்களால் முடியும். ஆனால்,  யாராவது சொன்னார்கள் என்று எழுதுவதை நிறுத்திவிடக் கூடாது என்றேன்.
அடப் போடா! நான் இனிமேல் இருந்து என்ன  செய்யப் போறேன்; எழுதிவிட்டுத்தான் போவேன் என்றார். அந்த வயதில் அவர்  எப்படி உட்கார்ந்திருப்பார்; எப்படி பேசுவார் என்பதை நம்முடைய தமிழர்  தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சொன்னேன். இன்றைக்கு அவருடைய படத்தைத்தான்  திறந்து வைத்துள்ளார் அவர்.

இந்தப் படத்திறப்பு விழா - பாராட்டு  விழாவிற்கு எப்படி வந்தேன் தெரியுமா உங்களுக்கு. மூன்று நாள்களுக்குமுன்,  கவிஞர் அவர்கள், ஆசிரியர் பேசுகிறார் என்று போனைக் கொடுத்தார். ‘‘நீங்கள்,  வருகிற 22ஆம் தேதி பாராட்டு விழா வைத்திருக்கிறோம்; வந்துவிடுங்கள்’’  என்றார். ஆணைதான்; பாராட்டு விழாவிற்கே ஒரு ஆணை போடுவது. இல்லீங்க அய்யா,  அன்றைக்கு என்றேன். ‘‘வர்றீங்க, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு  வாருங்கள்’’ என்றார்.

வா, முதலில் பாராட்டை வாங்கிக் கொண்டு போ என்பது போன்றுதான். இது வாழ்க்கையில் கிடைக்காத பாராட்டு. இதற்காகத்தான்  நிறைய பேர் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆணையிட்டு பாராட்டு தெரிவிக்கிற  இந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் நக்கீரனுக்குக் கிடைத்திருக்கிறது. ஏனென்றால்,  இது எனக்குக் கிடைத்த பாராட்டல்ல; என்னுடைய தம்பிகள், நக்கீரன்  குடும்பத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.

எனக்கு தமிழக அரசு சார்பில், கலைஞர் அரசு சார்பில் ‘பெரியார் விருது’ 2010 ஆம் ஆண்டு அறிவித்தது. முதல் நாள் என்னுடைய தம்பி வந்து, அண்ணே,  பெரியார் விருது ஒரு உயரிய விருது என்பதால், அந்த விழாவிற்கு அழைத்துச்  செல்வதற்காக அரசு வாகனத்தில், ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரத்தில் உள்ளவர் அல்லது  அதற்கு இணையாக உள்ளவர்கள் உங்களை அழைத்துச் செல்வார்கள். விருது  வாங்கியவுடன், உங்களை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விடுவதாக  சொல்லியிருக்கிறார்கள். உங்களிடம் சொல்லச் சொன்னார்கள் என்றார். நான் உடனே கலைஞர் அவர்களின் உதவியாளர் சண்முகநாதன் அண்ணனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, "நான் அண்ணனைப் பார்க்கவேண்டும்" என்றேன். உடனே வரச் சொன்னார்கள். சென்றேன்.
"வாங்க" என்றார் கலைஞர் அவர்கள். "நன்றி அண்ணே" என்றேன். "வாழ்க்கையில் என்னடா சாதித்தாய்" என்று கேட்டால், இது ஒன்று போதும் அண்ணே என்றேன்.

ஏனென்றால், ஒரு தமிழனாகப் பிறந்து,  தமிழனாக வாழ்ந்து, தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்ததற்கான ஒரு பெரிய அடையாளம் ‘‘பெரியார் விருது’’வாங்கி விட்டால் போதும் என்றேன். ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் என்றேன். என்ன? என்றார் கலைஞர் அவர்கள்.
விழாவிற்கு என்னை அழைத்துக்கொண்டு வருவதற்காக மரியாதை செய்து, மறுபடியும் அழைத்துக்கொண்டு வருவதாக சொன்னார்கள்.  என்னுடைய அப்பாவை அழைத்துக்கொண்டு வரச் சொல்லுங்களேன் என்றேன். உடனே சண்முகநாதன் அவர்களை அழைத்தார்; ‘‘கோபால், என்ன சொல்லுதோ அதேபோன்று செய்து விடுங்கள்’’ என்றார். இதற்குப்  பின்னால் என்னவென்றால், நான் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு  படிக்கும்பொழுது, பள்ளிக்கூடத்தில் 20 ரூபாய் பீஸ் கட்டவேண்டும் என்றால்,  நான் என் அம்மாவிடம் சொல்வேன்; இரவு என் அப்பாவிடம் சொல்வார். காலையில்  எங்கள் அப்பா, 9 மணிக்கு ஆபீசுக்கு வந்துவிடு என்பார். அப்பா அய்வேசில்  பியூனாக பணியாற்றிக் கொண்டிருந்தார். காலையில் 9 மணிக்கு என்றால், 8.30  மணிக்கு பள்ளிக்கூடம் ஆரம்பித்துவிடும். இரண்டு பீரியடை கட் அடித்துவிட்டு,  எங்கள் அப்பா அலுவலகத்திற்குச் செல்வேன்.

அப்பொழுது அலுவலக வாசலில் ஒரு கார் வந்து  நிற்கும். என்னுடைய அப்பா வேகமாக வந்து, காரின் கதவைத் திறப்பார். உள்ளே  இருந்து உயரதிகாரி ஒருவர் இறங்குவார்; சாப்பாட்டுப் பை, பைல்  எல்லாவற்றையும் என்னுடைய அப்பாவிடம் கொடுப்பார். எல்லாவற்றையும் கொண்டு  போய் உள்ளே வைத்துவிட்டு, என்னிடம் வந்து, ‘‘கொஞ்சம் இருடா!’’ என்பார். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு கார் வரும். அதில் இன்னொரு அதிகாரி வருவார். அதேபோன்று கார் கதவைத் திறந்து விட்டு, அவருடைய பைல்களையெல்லாம் உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வருவார்.  இன்னொருவர் வெள்ளை சட்டையுடன் வருவார்; கொஞ்சம் நில்லுங்கள்; இவன் என்னுடைய  பையன். பள்ளிக்கூடத்திற்கு 20 ரூபாய் கட்டவேண்டும். அவன் காலையில் இருந்து  நின்று கொண்டிருக்கிறான் என்பார். அவர் பாக்கெட்டிலிருந்து ரூபாய்  எடுப்பார்; என்னுடைய அப்பா 50 ரூபாயைப் பிடுங்கி, ‘‘இந்தாடா, 20 ரூபாயை  பள்ளிக்கூடத்தில் கட்டி விட்டு, 30 ரூபாவை அம்மாவிடம் கொடு’’ என்பார். இது  முன் நடந்தது.

நான் ‘பெரியார் விருது’ வாங்குவதற்காக  மாலையில் புறப்படவேண்டும். மத்தியானம் என் அப்பாவை அழைக்க கார் வந்தது.  நான் என்னுடைய அப்பாவிடம், ‘‘அப்பா, விருது வழங்கும் விழா முதலமைச்சர்  கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெறும். உங்களை அழைப்பதற்காக கார்  வந்திருக்கிறது’’ என்றேன். அவர் உடனே, ‘‘என்னை ஏனடா கூப்பிடுகிறார்கள்?’’  என்றார். ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி காரின் கதவைத் திறக்க  என்னுடைய அப்பா காரிலிருந்து இறங்கினார். நீங்கள் இப்பொழுது புறப்படுங்கள்; நான்  பிறகு வருகிறேன் என்று சொல்லி, என்னுடைய அப்பாவுடன் என் அத்தானும்  சென்றார். என்னுடைய அப்பா பட்டு வேட்டி, பட்டு சட்டை போட்டுக்கொண்டு  காரிலிருக்கிறார். ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி காரின் கதவைத் திறந்துவிட, காரிலிருந்து இறங்கி, என்னுடைய அப்பா விழா நடைபெறும் அரங்கத்திற்குள்  செல்கிறார். இந்தக் காட்சியை நான் ஒரு ஓரத்தில் நின்று பார்க்கிறேன்.

வாழ்க்கையில் நான் என்ன சாதித்தேன் என்று  யாராவது கேட்டால், எந்த அப்பா அதிகாரிகளின் காரின் கதவைத் திறந்து  விட்டாரோ, அந்த அப்பாவிற்கு, ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி கதவைத் திறக்கிறார்  என்றால், இதுதான் நான் சாதித்தது. அதற்கடுத்ததாக, இன்றைக்கு இந்த இடம்,  இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது என்று ஆசிரியர் அவர்கள்  சொன்னார்.

அவருடைய கைகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு, ஒரு பாராட்டுதலையும் வாங்கி, அந்தப் பாராட்டை இவ்வளவு பெரிய  சமூகத்திற்குமுன் வாங்குவது என்பது, நான் என்ன சம்பாதித்தேன் என்பதற்கு, எனக்கு கூடுதலான ஒரு வைரக்கல் கிடைத்தது போன்றதுதான். இந்த சாதனை, எனக்கல்ல, ‘நக்கீரனு’க்கு. அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் என்ன  எழுதியிருந்தார் என்பதை, நான் சொல்வதைவிட, ஆசிரியர் அவர்கள் சொல்வது  சாலச்சிறந்தது. தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு நன்றி! இந்த இனிய விழாவிற்கு எம்மை அழைத்து,  ‘நக்கீரனை’ அழைத்துப் பாராட்டிய அனைவருக்கும், தமிழர் தலைவர் அய்யா  அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி கூறி, இந்த நிகழ்வை  சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி கூறி,  விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!

- இவ்வாறு ‘நக்கீரன்’ கோபால் அவர்கள் உரையாற்றினார்.

நன்றி: விடுதலை நாளிதழ்