Skip to main content

சிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7

Published on 21/08/2018 | Edited on 21/07/2020


 

kalaignar ramesh kanna


சிவாஜி சார்... மிகப் பெரிய மனிதர். நான் சினிமாவுக்கு வரும் முன்பு, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடத்தில் இருந்து பாதியில் வெளியே வந்து என சாகசங்கள் செய்து அவரது படங்களை திரையரங்குகளில் பார்ப்பேன். சினிமாவுக்கு வந்த பின்னருமே கூட எனக்கெல்லாம் அவரைப் பார்ப்பது பெரிய விஷயமாகத்தான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் சார் ஆஃபிஸ்ல நாங்க டிஸ்கஸ் பண்ணும்போது, வேலை முடிஞ்சதும் கிளம்பிவிட மாட்டோம். உட்கார்ந்து சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள் எல்லாம் பெரிய ஸ்க்ரீன்ல போட்டுப் பார்ப்போம். அதுதான் எங்கள் ரெஃப்ரெஷ்மெண்ட், எங்கள் உத்வேகம். அப்படி ஒரு பெரிய மனிதரான சிவாஜி சார் கூடயும் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது சினிமா.

 

sivaji ramesh kanna

சிவாஜி சார் மாதிரி இருக்கேனா? (ஹி... ஹி...)


1998ஆம் வருஷம், 'படையப்பா' ஷூட்டிங்... கர்நாடகால மாண்டியா தாண்டி மேல்கோட்டை கோவில்ல படப்பிடிப்பு. அந்த ஏரியாவை சுத்தி பல நாட்கள் எடுத்தோம். சிவாஜி சார், ரஜினி சார்லாம் மைசூர்ல தங்கியிருக்காங்க. நாங்க அஸிஸ்டண்ட்ஸ், ப்ரொடக்ஷன் டீம் ஆளுங்களெல்லாம் வேற எடத்துல தங்கியிருந்தோம். தினமும் காலையில நடிகர்களை அழைத்துப் போகும் பொறுப்பு எங்களோடதுதானே? முதல் நாள், காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங். அங்க போகணும்னா அஞ்சு மணிக்கே கிளம்பணும். 'அவர் எங்க அஞ்சு மணிக்கு எந்திரிப்பார், எப்படியும் லேட் ஆகும்'னு நினைச்சுக்கிட்டே நானும் தேனப்பனும் அஞ்சே முக்கால் போல சிவாஜி சார் தங்கியிருந்த லலிதா பேலஸ்க்கு போனோம். அங்க போனா, பேலஸ் வாசல்ல விக், மேக்-அப் எல்லாம் போட்டு பேலஸ் ஓனர் மாதிரி சிவாஜி சார் முன்னாடி ரெடியா நிக்குறாரு.

 

melkote kaatchi

மேல்கோட்டை கோவில்

 

எனக்கு அவரைப் பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சு. நான் ட்ரைவர்கிட்ட, 'வண்டியை நிறுத்தாம முன்னாடி தள்ளி போ'னு சொல்லிட்டு, தேனப்பனைப் போய் சிவாஜி சாரை கூட்டிட்டு வர சொன்னேன். கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறேன். தேனப்பன் அவர்கிட்ட போனதும், அந்த சிம்மக் குரலில் கரகரன்னு கேக்குறார், "ஏன் லேட்டு?". இத்தனைக்கும் லேட் எல்லாம் ஆகல. நாங்க மேல்கோட்டை போய் சேருவதுக்கும் ஷூட்டிங்கில் மற்ற விஷயங்கள் தயாராவதுக்கும் சரியா இருக்கும். இருந்தாலும் அதை ஈஸியா எடுக்காம கேட்டார். இப்போ நினைக்கும்போதும் அவருடைய அந்த சின்சியாரிட்டி ஆச்சரியப்படவைக்குது. ஒன்னு உறுதியா புரியுது, திறமை எவ்வளவு இருந்தாலும் அர்ப்பணிப்பும் சேர்ந்துதான் நம் உயரத்தைத் தீர்மானிக்கிறது. நீங்களே உங்க திறமையையும் அர்ப்பணிப்பையும் கூட்டி, கழிச்சு, பெருக்கி, வகுத்துப் பார்த்து உங்க உயரத்தை கணக்குப் பண்ணிக்கலாம், வாழ்க்கையின் உயரத்தை...

 

சிவாஜி சாரை ஒரு காரில் ஏத்திக்கிட்டு, நாங்க இன்னொரு காரில் போனோம். மேல்கோட்டைக்குப் போய்ட்டோம். அங்க கோவிலுக்குப் போக படிப்படியா ஏறிப் போகணும். அவரது உயரத்துக்கு என்னையெல்லாம் அப்போது அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லைன்னு நான் எதுவும் பேசாம வந்தேன். சிவாஜி சாரை முன்னாடி விட்டுட்டு நாங்க பின்னாடி போனோம். ஒரு படி ஏறுவாரு, நின்னு திரும்பி என்னைப் பார்த்து முறைப்பார். 'என்னடா இது, லேட்டா வந்தது இவ்வளவு பெரிய குற்றமா, விட மாட்டேங்குறாரே'னு நான் தலையைக் குனிந்துகொள்வேன். கொஞ்ச தூரம் ஏறுவார், திரும்ப நின்று ஒரு முறை முறைப்பார். நான் முடிவு பண்ணிட்டேன், 'ஸ்பாட்டுக்குப் போனதுக்கு அப்புறம் இவர் கண்லயே படக்கூடாதுடா சாமி'ன்னு. இப்படியே ரெண்டு மூணு முறைப்புகளுக்குப் பிறகு மேலே போயிட்டோம். போனதும் சிவாஜி சார் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட போனார். 'போச்சுடா.. லேட்டா வந்ததை அங்கேயும் சொல்லி பிரச்சனை பண்ணப் போறாரோ'னு நினைச்சேன். எனக்கு லைட்டா கோபமும் வந்தது. 'என்னடா இவர் இப்படி பண்ணுறார்'னு தோணுச்சு.

 

padaiyappa

படையப்பா

 

ரவிக்குமார்கிட்ட என்னைக் காட்டி கேட்டார், "இந்தப் பையன் யாரு?" என்று. நான் எது வந்தாலும் பாத்துக்கலாம்னு நினைச்சு நின்றேன். லலிதா பேலஸ்ல எப்படி என் எதிர்பார்ப்பை உடைச்சாரோ அதே மாதிரி இங்கேயும் உடைக்கப் போறார்னு நான் நினைக்கல. "நம்ம கோ-டைரக்டர்தான் சார். என்ன ஆச்சு?"னு ரவிக்குமார் கேட்டார். "இவன்தான முத்துராமன் பையன் படத்துல நடிச்சவன்?"ன்னு கேட்டார். எனக்கு அதுவரைக்கும் அடிவயிற்றில் இருந்த சூடெல்லாம் அப்படியே ஜில்லுன்னு மாறுச்சு. "ரொம்ப சூப்பரா காமெடி பண்ணியிருக்கான்"னு அவர் சொல்ல, எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. யார் யார் வீட்டு வாசலில் காத்திருந்தேன், எத்தனை பேர்கிட்ட அவமானப்பட்டிருப்பேன், அடுத்தடுத்து படம் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு டிராப் ஆயிருக்கு, இது எல்லாமே இந்த ஒரு தருணத்துக்காகத்தானோனு தோணுச்சு. சிவாஜி சார் என்னை கவனிச்சிருக்கார். எனக்கு கஷ்டம் இருந்தப்போ கடவுள் மேல கோபப்பட்டுருக்கேன், இந்த கிஃப்டுக்காகத்தான் என்னை அந்த அடி அடிச்சுருக்காருன்னு நினைச்சுக்கிட்டேன்.

 

சிவாஜி சார் அதோட நிக்கலை. ரஜினி சார் வந்ததும் அவர்கிட்டயும், "இவன் யார் தெரியுமா?ன்னு கேட்டார். "தெரியுமே, நம்ம ரமேஷ்கண்ணா"னு சொன்னார் அவர். "முத்துராமன் பையன் கூட இவன் நடிச்ச படம் பாரு. சூப்பரா நடிச்சிருக்கான்"னு சொன்னார். ரஜினி சார் என்கிட்டே சொன்னார், "யோவ்...முப்பது வருஷமா நடிக்கிறேன்யா நான். என்னைப் பத்தி இவர் யார்கிட்டயும் சொன்னதே இல்லய்யா. உன் டைம் ஒர்க்-அவுட் ஆகிடுச்சுய்யா"னு. அடுத்து மணிவண்ணன் சார் வந்தார். அவர்கிட்டயும் சிவாஜி சார் என்னைப் பற்றி சொன்னார். மணிவண்ணன் சார் என்னிடம் சொன்னார், "டேய் என்னடா சிவாஜி சார் உனக்கு பி.ஆர்.ஓ (PRO - மக்கள் தொடர்பு அலுவலர்) வேலை பாக்குறார். ரொம்பப் பெரிய விஷயம்டா இதெல்லாம்" என்று. உண்மைதான் எனக்கு அதெல்லாம் அப்போ ரொம்பப் பெரிய விஷயம். இப்போவும் எனக்கு அது ரொம்பப் பெரிய விஷயம்.

 

sivaji


இப்படி சிவாஜி சாரோட அந்த அன்பினாலும் பண்பினாலும் எனக்கு அவர் மேல இருந்த பிரமிப்பு போய் மரியாதையும் பாசமும் அதிகமாச்சு. முடிந்த பொழுதெல்லாம் போய் பார்ப்பேன் அவரை. அவர் இறந்தபொழுது என்னால் அதைத் தாங்கிக்கவே முடியல. அன்னை இல்லத்தில் நாங்க எல்லோரும் இருக்கோம். என்னை டிவி செய்தியாளர்கள் வந்து சிவாஜி சார் பற்றி கேக்குறாங்க. பேசிக்கொண்டிருக்கும்போதே தாங்கமுடியாமல் அழுதுட்டேன். பேச்சு குழறியது. சுற்றி இருந்தவங்க பயந்துட்டாங்க. என்னை இழுத்து உக்கார வச்சுட்டாங்க. அப்படி ஒரு மனநிலை, சோகம் அப்போது. பின்னாடி பிரபு சாரே சொன்னார், "எங்க குடும்பத்துல இருக்கவங்க எப்படி கலங்கிப் போனாங்களோ, அந்த அளவுக்கு கலங்கிட்டாரு ரமேஷ்கண்ணா"னு.

 

http://onelink.to/nknapp

 

அவ்வளவு சோகத்துல சிவாஜி சார் உடலை பெசன்ட்நகர் மயானத்துக்குக் கொண்டு போறோம். ரஜினி, கமல்... இப்படி முக்கியமானவர்கள் நெருக்கமானவர்கள் எல்லோரும் சிவாஜி சார் இருந்த வண்டியில் வர்றாங்க. மீதி நடிகர்கள் எல்லோரும் ஒரு லாரி, நடிகைகள் எல்லோரும் ஒரு லாரி. நான், சேரன், வடிவேலு இப்படி பல நடிகர்கள் லாரியில் இருந்தோம். லாரி மெல்ல நகர்ந்துச்சு. லாரிக்குப் பின்னாடியே ஒருத்தர் வந்தார். லாரியை விட அவர் அதிகமா அசைஞ்சு குலுங்கி வந்தார். சிவாஜி சார் மரணம் அவரையும் பாதிச்சுருக்கும்போல... ஃபுல்லா குடிச்சிருந்தார். எங்க லாரிக்குப் பின்னாடியே வந்தவர் திடீர்னு எங்களைப் பார்த்து, "டேய்... உங்களுக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா?"னு கேட்டார். எங்களுக்கு ஒன்னும் புரியல. "நீங்கெல்லாம் நடிகனாடா டேய், அவரு நடிகருடா" என்றார். அவர்  பேசிய தோரணை, போட்ட ஆட்டம்லாம் பார்த்து சிரிப்பு வந்தாலும் 'உண்மையதான சொல்றாரு'ன்னு அமைதியா இருந்தோம். அந்த ஆள் விடல. பின்னாடியே வந்து, "ஏண்டா அப்பேர்ப்பட்ட நடிகரே போய்ட்டாரு, நீங்கெல்லாம் எதுக்குடா. நீயெல்லாம் நடிகனாடா டேய்..."ன்னு விடாம கேட்டுகிட்டே வராரு. பொதுமக்களும் பாக்குறாங்க, எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியல, சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்.

 

death


அந்த ஆள் விடாம பெசன்ட் நகர் வரைக்கும் கூடவே வர்ராரு. எங்களை டிவியில் வேற காட்டுறாங்க. அதைப் பார்த்தவங்க ஃபோன் பண்ணி திட்டுனாங்க, "என்னடா சிவாஜி சார் சாவுல அப்படி சிரிக்கிறீங்க?"ன்னு. அவுங்களுக்கு என்ன தெரியும், அங்க நடந்த கூத்து? எல்லோருக்கும் சோகம்தான் சோதனையா வரும். எங்களுக்குப் பாருங்க, சிரிப்பே சோதனையா வந்துச்சு. என்ன ஒரு வேடிக்கை? அதுமாதிரி, அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் நான் அதீத சோகத்துல அழுதுக்கிட்டு இருந்தேன், வாழ்க்கை கொஞ்ச நேரத்துலயே, கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒருவர் மூலமா என்னை சிரிக்கவச்சது. இதுதான் வாழ்க்கை...இல்ல? இப்போ அழுதா அதுவே நிரந்தரம்ன்னு நினைக்காதீங்க, அடுத்த நொடியே கூட வாழ்க்கை உங்களை சிரிக்கவைக்கலாம்.    



அடுத்த பகுதி:
"அய்யய்யோ... ஆளை விடுப்பா" - செல்வராகவனிடம் கெஞ்சினேன்! ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #8 

 

முந்தைய பகுதி:
விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6             



                                                                                              

Next Story

மவுசு குறையாத நடிகர் திலகம்; ரீ-ரிலீஸான படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

the unrepentant actor sivaji; Fans celebrated the rerelease of the film

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குநர் ஆர்.மாதவன் இயக்கி 1972ம் ஆண்டு இப்படம் வெளியானது. வெள்ளி விழா கண்ட இப்படத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 

the unrepentant actor sivaji; Fans celebrated the rerelease of the film

 

பெரிய நடிகர்களின் புதிய படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு மீண்டும் திரையிடப்பட்ட இப்படத்திற்கும் இருந்தது. ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்துச் சென்றனர். சிவாஜி கணேசன் ரசிகர்கள் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலையும் நடனமாடிக் கொண்டாடினர். 

 

நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் மற்றும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

y

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாள் நாளை உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, "  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு நாளை (1.10.2021) காலை 10.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர்.

 

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். "நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்" என்று மிகத் தெளிவாக தன்சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும், உலகப் புகழ் பெற்றவராவர். குழந்தைப் பருவம் முதற்கொண்டு நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடகக் குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையாப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

 

காமராஜர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும், அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். கருணாநிதி 'பொங்கு தமிழர் கண்டெடுத்த புதையல், புத்தர் வழிவந்த காந்தி மகான் பக்தர்' நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று பெருமையோடு குறிப்பிட்டதோடு, அவர் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் திலகம் திரைவானிலே புதிய உச்சம் தொட்டார். கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் அவருடைய நினைவு நாளில் 21.07.2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை கடற்கரை காமராசர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி ''நான் எழுதிய கவிதை வரிகளுக்கும், வசனங்களுக்கும் உயிர்கொடுத்தவர்; தமிழாக வாழக்கூடியவர்; தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர்; எனதருமை  தோழர், எனதாருயிர் நண்பர் என்றும், என்னுள்ளே உறைந்திருப்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் குறிப்பிட்டதோடு, ''எனது நண்பரின் சிலை மட்டும் இங்கே அமையாது போயிருக்குமேயானால், நானே இங்குச் சிலையாகியிருப்பேன்'' என்று நெகிழ்ந்து குறிப்பிட்டார். 

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடக்கக் காலத்தில் எண்ணற்ற நாடகங்கள், 300க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், 2 இந்தி திரைப்படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து தமிழ்த் திரையுலக வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்தார். "நடிகர்திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் போற்றி அழைக்கப்பட்டார். இவர் நடித்த கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தலைமுறைகள் பல கடந்தும் காண்போரின் மனதில் நின்று நிலைப்பதே சரித்திரச் சான்றாகும். நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாகப் பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் நம் தாய்நாட்டின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். 

 

நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாருடைய அருமை பெருமைகளை போற்றுகின்ற வகையில் அவரின் பிறந்த நாளானது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எது நடிப்பு, எது இயல்பு எனக் காண்போர் அறிந்திடா வண்ணம், ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித் திரையில் கொட்டி வெற்றி வீரராகவே வலம் வந்தவர். இந்த பூமிப் பந்தில், மனிதக் குலத்தின் கடைசி ரசிகன் உயிர்வாழும் வரை, சிவாஜி கணேசன் என்கிற சகாப்தத்துக்கு மரணமுமில்லை..காலமுமில்லை...!" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.