Skip to main content

திருக்குறளை தப்பும் தவறுமாகச் சொன்னால் உங்களை நம்ப வேண்டுமா..? - கமல் கேள்வி!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

n



சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடப்பு அரசியல் குறித்து அதிரடியாகப் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே வந்திருக்கு அனைவரின் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். அதற்கான கால சூழல் விரைவில் வரும். அதனை மெய்ப்படுத்த வேண்டியது உங்களின் கடமை. என்ன இவர், வாக்களியுங்கள் என்று கெஞ்ச மாட்டேன் என்கிறாரே, அதட்டி வாக்களியுங்கள் என்று கேட்கிறாரே என்று கூட நீங்கள் நினைக்கலாம். நாம் நம்மையே அதட்டிக் கொள்ளும் நேரம் இது. நாம் செய்த தவற்றை திருத்திக்கொள்ளும் நேரம் இது. அதையும் தாண்டி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு பேச இருக்கிறேன். ஏனென்றால், இங்கே கூட நாம் கடமை தவறாதவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேர்தல் வந்துவிட்டது, இலவசங்களை அறிவிப்பார்கள், மதத்தின் பெயரால் நெருங்குவார்கள், சாதியின் பெயரால் வளைக்கப் பார்ப்பார்கள். எந்தெந்த முறையில் உங்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்பதை தொடர்ந்து யோசித்து வருபவர்கள், உங்களை எப்போதும் சுற்றிச் சுற்றி வருவார்கள். விலைக்கு வாங்கி விடலாம் என்று சில வியாபாரிகள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் வியாபாரி அல்ல, அரசியல் எனக்குத் தொழிலும் அல்ல. 


இங்கே நான் சிறுவனாகப் பல தலைவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அந்தப் பேச்சையெல்லாம் கண்டு மயங்கியிருக்கிறேன். அப்போது இந்த இடத்திற்கெல்லாம் நாம் வர வேண்டிய அவசியம் இருக்காது. அவர்களே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூட நான் நினைத்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் தற்போது இல்லை. அந்த இடத்தில் தற்போது தகுதியில்லாதவர்கள் பலர் வந்துள்ளார்கள். அதை, நாம்தான் மாற்ற வேண்டும். தமிழர்கள் எல்லாம் சற்று மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்துக்கொண்டு எங்கிருந்தோ வந்து என்னால் தமிழ் பேச முடியவில்லையே என்று நடிக்கிறார்கள். அவர்களின் நடிப்பு சில சமயம் நம்மையே விஞ்சுகிறது. தமிழ் மொழி சிறந்தது என்று எங்களுக்குத் தெரியாதா? இத்தனை ஆண்டு காலம் கழித்து நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியுமா? தமிழ் மொழி சிறந்தது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தெரியாதவர்களே அதனை உணர்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் பேசி விடுவார்களோ என்பதே நம்முடைய வருத்தம். தமிழ்க் கலாச்சாரம் உயர்ந்தது என்று இந்த தேர்தல் நேரத்தில் தான் உங்களுக்குத் தெரியவந்துள்ளதா? இவ்வளவு நாள் அந்த கலாச்சாரம் உயர்ந்தது என்று உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது. தேர்தல் வந்தால் தமிழ்க் கலாச்சாரம் தெரிந்து விடும் போலும். 
 

காஷ்மீர் போய் குல்லா வைத்துக்கொண்டால் காஷ்மீர் மக்கள் எல்லாம் நம்மை நம்பி விடுவார்கள் என்ற காலம் எல்லாம் முடிந்து போய்விட்டது. அந்த மாதிரி எண்ணம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். அது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் வாக்குகளாக மாறியிருக்கும். தற்போது உங்கள் வித்தைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். எனவே வித்தை காட்டும் வேலைகளை நிறுத்திக் கொள்ளுங்கள். அது ஒரு போதும் வாக்குகளாக மாறாது. எங்கள் மொழியைப் பற்றி பேசிவிட்டால் நாங்கள் வாக்களித்து விடமாட்டோம். திருக்குறளை தப்பு தப்பாகப் பேசி விட்டால் நாங்கள் நம்பி விடுவோமா? திருக்குறளை தப்பு தப்பாகச் சொன்னால் மார்க் போடுவோம். அது மட்டும் தான் உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. வேறு எதுவும் உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் இப்படி எல்லாம் பேசி எங்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. நாங்கள் விவரம் தெரியாதவர்கள் இல்லை. எங்கள் மொழியும் பண்பாடும் விற்பனைக்கு அல்ல. திருவள்ளுவருக்குக் குடுமி எல்லாம் வைத்து எங்களிடம் நீங்கள் விளையாடுகிறீர்கள். இந்த விளையாட்டு எங்களிடம் ஒருபோதும் செல்லுபடியாகாது" என்றார்.  


 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்