Skip to main content

"கமலுக்குள் ஒரு அமீர்... அமீருக்குள் ஒரு கமல்..." - எவிடன்ஸ் கதிர் சீற்றம்    

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

ட்விட்டரில் ஒருவர், 'சாதி என்ற ஒன்றை அடுத்த தலைமுறைக்கு என்னவென்று எடுத்துச் செல்வீர்கள்? கல்வி நிலையங்களில் சாதி விபரங்கள் கொடுப்பது தொடருமா?' என்று கேட்க, அதற்கு பதிலளித்த கமல், 'நான் எனது இரு மகள்களுக்கும் பள்ளியில் சாதியைக் குறிப்பிடவில்லை. அடுத்த தலைமுறைக்கு சாதியைக் கொண்டு செல்லும் ஒரே விஷயம் இதுதான். அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும்' என்று பதிலளித்தார். இந்த பதில் பல்வேறு தளத்திலும் விவாதத்தையும் எதிர்ப்பையும் உருவாகியுள்ளது. சமூக செயல்பாட்டாளரும் சாதிய ஆணவப் படுகொலைகளை எதிர்த்து செயல்பட்டு வருபவருமான எவிடன்ஸ் கதிரிடம் இது குறித்து பேசினோம்.

 

evidence kathir



"இதை சிறுபிள்ளைத்தனமாக நான் பார்க்கிறேன். சாதிச் சான்றிதழ் என்பது ஒரு 50 வருட காலமாகத்தான் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், சாதி என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. சாதிச் சான்றிதழ் ஒழிந்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பது பாமரத்தனமான கருத்து. சாதிச் சான்றிதழ் என்பதை இடஒதுக்கீட்டுக்காகத்தான் வைத்திருக்கின்றனர், துவேஷத்திற்காக அல்ல. இந்த நாட்டில் சாதி என்பது உளவியல் நோய், அது ஒரு நிறுவனம் கிடையாது. ஆகவே மக்கள் மத்தியில் மனமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

ஊரையும் சேரியையும் ஒன்றாக்க வேண்டி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடக்கக்கூடிய  தீண்டாமையை  எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதன்மூலமாகத்தான் சாதியை ஒழிக்க முடியுமே தவிர சாதிச் சான்றிதழை ஒழிப்பதன் மூலமல்ல. சாதியைக் கடைபிடிக்கின்றவர்கள் மத்தியில் இது ஒரு தவறான விஷயம் என்பதை உணரவைக்க வேண்டும். இது ஒரு லாங் டர்ம் பிராசஸ். அதைவிட்டுவிட்டு சாதிச் சான்றிதழை ஒழித்தால் மட்டும் போதும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். அவர் ஒரு மிகவும் மேம்போக்கான தலைவர். 

 

 

இப்படியெல்லாம் பேசுகிற கமல்ஹாசன்தான் 'தேவர் மகன்' படம் எடுத்திருக்கிறார், 'விருமாண்டி' படம் எடுத்திருக்கிறார். இரண்டுமே  சாதிய படம்தானே?  இதையேதான் அமீரையும் கேட்கிறேன். 'பருத்திவீரன்' படம் அவர்தானே எடுத்தார்? இவர்கள் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்கிறார்கள். கமல்ஹாசனுக்குள் ஒரு அமீர் இருக்கிறார். அமீருக்குள் ஒரு கமல்ஹாசன் இருக்கிறார். இவர்கள் இரண்டுபேரையும் மாற்ற முடியாது. இது ஒரு மேம்போக்கான மற்றும் அரைவேக்காடான பதிவு.

 

 


சமூக நீதி என்பது மிகப்பெரிய பிராசஸ், அதற்காக நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டி இருக்கிறது, குரல் கொடுக்க வேண்டி இருக்கிறது. சாதிச் சான்றிதழைக் கிழித்து எறிவதனால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைத்துவிடாது. தமிழ் சமூகத்தையும், இந்திய சமூகத்தையும் கடுமையாகப் பிடித்திருக்கும் சாதி நோயை ஒழிக்க வேண்டுமென்றால் தலித் மக்களுக்கு அதிகமான உரிமைகளைக் கொடுக்க வேண்டும், தலித்தல்லாத மக்களை மனமாற்றம் செய்யவேண்டும். இதுபோன்று பல பிரச்சனைகள் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு சாதிச் சான்றிதழை குறை சொல்வதில் அரசியல் தளத்திற்கு வரும் கமலஹாசனின் சிறுபிள்ளைத்தனம்தான் தெரிகிறது.             
 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.