Skip to main content

எல்.ஐ.சி ஊழியர் டூ விஷ்ணு அவதாரம்..! கல்கி ஆசிரமம் கடந்து வந்த பாதை...

Published on 17/10/2019 | Edited on 18/10/2019

நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், ஒரு ஆசிரமம் மற்றும் அதற்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொள்கின்றனர். கணக்கில் காட்டாத பணம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குறித்து விசாரணை செய்கின்றனர். ஆந்திராவில் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் நிலம் என நீண்டுகொண்டே போகிறது அவர்களின் விசாரணை கேள்வி பட்டியல். இப்படி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுடன் மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ள இந்த கல்கி ஆசிரமத்தின் தொடக்கம் என்ன..? எப்படி தனது வாழ்க்கையை தொடங்கினார் கல்கி ஆசிரமத்தின் முதன்மையானவரான கல்கி பகவான்..?

 

kalki ashram and kalki bhagavan history

 

 

1949 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஜயகுமார் தான் பிற்காலத்தில் கல்கி பகவானாக தன்னை அறிவித்துக்கொண்டார். தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார். டான் போஸ்கோ பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி என தனது இளமை பருவம் முழுவதையும் சென்னையிலேயே கழித்த இவர்தான் இன்று ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். 

சென்னையில் தனது படிப்பை முடித்த விஜயகுமார், 1971 ல் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஒரு பணியில் சேர்கிறார். அவர் எல்.ஐ.சி யில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு அறிமுகமான தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள்தான் இன்றைய கல்கி பகவானிற்கு விதை என்றே கூறலாம். ஜே.கே வின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஜே.கே வின் அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் ஒன்று விடாமல் செல்ல ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால், ஆந்திராவில் ஜே.கே பவுண்டேஷன் நடத்தும் `ரிஷி வேலி ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. 

 

kalki ashram and kalki bhagavan history

 

சிறிதுகாலம் இதில் பணியாற்றிய அவர், 1980 களின் மத்தியில் அந்த அறக்கட்டளையில் இருந்து வெளியேறி சொந்தமாக அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். அதன்மூலம் 1984 ல் ஜீவாசிரமம் என்ற பள்ளி ஒன்றையும் ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்த இந்த பள்ளி நடத்திய காலகட்டத்தில்தான், விஜயகுமார் என்ற மனிதர் கல்கி பகவான் அவதாரம் எடுப்பதற்கான ஆழ்ந்த ஆன்மீக அறிவை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. 1989, பள்ளி நிர்வாகம் நன்றாக சென்றுகொண்டிருந்த காலம் அது, அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாக அறிவித்துக்கொள்கிறார் விஜயகுமார். தான் விஷ்ணுவின் அவதாரம் என்றும், தனது பெயர் கல்கி பகவான் என்றும் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள தொடங்கினார். 

பின்னர் கல்கி பகவானுக்கு என ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆசிரமம் ஒன்றும் அமைக்கப்பட்டு, அது பக்தர்கள் வருகையால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அன்றிலிருந்து தொடங்கியதுதான் இந்த கல்கி ஆசிரமத்தின் அசுர வளர்ச்சி. விஜயகுமார் கல்கி பகவான் ஆன காரணத்தினால் அவரது மனைவி பத்மாவதி ”அம்மா பகவான்” ஆனார். வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த பள்ளி 1994 ஆம் ஆண்டு மூடப்பட்டது. தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கப்பட்டன. கல்கி பகவான் மீதான பக்தர்களின் நம்பிக்கை நாளுக்குநாள் வளர்ந்த நிலையில் உலகம் முழுவதும் ஆசிரமங்களும் வளர ஆரம்பித்தன. இந்த சூழலில் ஆன்மீக கல்வியை மையமாக வைத்து 1999 ஆம் ஆண்டு சென்னையின் முடிச்சூர் அருகே ஒன்னெஸ் பல்கலைக்கழகம் என்ற திட்டத்தை தொடங்கினார் கல்கி பகவான். 

 

kalki

 

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஷில்பா ஷெட்டி, ரித்திக் ரோஷன் என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நட்சத்திரங்களுக்கு கல்கி பகவான் ஆஸ்தான குருவாகிப்போனார் என்றே கூறலாம். பக்தர்கள் எண்ணிக்கை வளர்ந்த அதே நேரத்தில், கல்கி ஆசிரமத்தை பற்றிய சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் கூட வளர்ந்துகொண்டே இருந்தன. கல்கி பகவானை பார்க்க வேண்டுமென்றால் ரூ.50,000, அவரது பாதத்தை மட்டும் தரிசிக்க ரூ.10,000 என அனைத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும், ஆசிரமத்தில் பூஜைகள் செய்ய எக்கச்சக்க பணம் வாங்குகிறார்கள், வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள் கொடுக்கிறார்கள் என பல குற்றசாட்டுகள் எழுந்தன. வழக்குப்பதிவு, நீதிமன்ற வழக்குகள் என அடுத்தடுத்து பல சர்ச்சைகளை கடந்தாலும், இன்று வரை ஆயிரக்கணக்காக பக்தர்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர்.

இப்படிப்பட்ட பக்தர்கள் நம்பும் கடவுள் அவதாரத்தின் மகனான மகன் என்.கே.வி கிருஷ்ணா கோடிக்கணக்கான முதலீட்டில் பல தொழில்களை செய்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை அவதாரமான நிலையில், மகனோ ஆயிரக்கணக்காக கோடிகள் புரளும் பல தொழில்களை சிறப்பாக செய்து வருகிறார். 2012 முதலே வருமானவரித்துறையினர், கிருஷ்ணா மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், தற்போது இவரது அலுவலகம், ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்கள் என 40 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

 

kalki ashram and kalki bhagavan history

 

ஆந்திராவில் 5 ஆயிரம் ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் சொத்துகள், ஒன்னெஸ் பல்கலைக்கழகம் என கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சொந்தமாக 1000 கோடிக்கு மேல் சொத்து, அவை இல்லாமல் அவரது மகனின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நிறுவனம், பெங்களூருவில் உள்ள கட்டுமான நிறுவனம் என பக்தர்களின் நம்பிக்கை மற்றும் கல்கி பகவான் குடும்பத்தினரின் உழைப்பால் சேர்ந்துள்ள இந்த சொத்துக்கள் குறித்த விவரங்களையே தற்போது வருமானவரித்துறையினர் சோதனை மூலம் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.