Skip to main content

நீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை - கபிலன் வைரமுத்து

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

சமிபத்தில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் தமிழாற்றுபடை அரங்கேற்ற விழாவில் ஒரு குட்டிகதை சொல்லி, ஒளவையார் தமிழாற்றுபடை கட்டுரையை அறிமுகம் செய்தார் வைரமுத்துவின் மகன் கவிஞர்.கபிலன் வைரமுத்து. அரங்கில் இருந்த பலரின் கைதட்டலை பெற்ற அந்த குட்டிகதை பின்வருமாறு...

 

kabilan story

 

இந்த கதையில் வருவதெல்லாம் கற்பனையே, இதில் பறவைகள், விலங்குகள், மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை.

 

ஒரு அதிகாலை நட்சத்திரத்தை விட்டு வெளியேறி, கையில் கைத்தடியோடு,
வள்ளுவர்கோட்டத்தில் வந்து விழுகிறார் ஔவை. கே.பி.சுந்தராம்பாளைவிட சுமாரான தோற்றம்தான்.

 

முந்தைய இரவு நடந்த போராட்டத்தில், தான் உயர்த்தி பிடித்த கருப்புக்கொடியை
தலைக்கு வைத்து உறங்கி கிடந்தான் இளைஞன் ஒருவன்.

 

"அப்பனே" என்று அழைப்பு குரல் கேட்டது. கண்களை திறந்து கிழவியை கண்டவன்
"சில்லறை இல்ல" என்று திரும்பி கொண்டான்.

 

"அப்பனே, மரிக்காத புலமை எனக்கு, உன் மதிப்பிழக்கும் சில்லறை எதற்கு, ஔவை நான்.
நான் பாடிய தமிழுலகை மறுபடி காண வந்தேன். உன் வாகனத்தில் எனக்கொரு உலா கிடைக்குமா?"
மன்னிப்புகலந்த வணக்கம் சொல்லியவன், ஔவையை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டான்.

 

"எவ்விடம் செல்கிறாய் அப்பனே?"
"பாட்டி, சுட்ட இடம் போகவா, சுடாத இடம் போகவா?"
"அது என்ன குமரா?"
"சுட்டு களைக்கப்பட்டது தூத்துக்குடி, சூழ்ச்சியால் களைக்கப்பட்டது மெரினா. இவை தமிழர் வீரத்தின் நவீன நினைவகங்கள். எங்கே போகலாம்?"

 

"வீரத்தை பொறுமையாக பார்க்கிறேன். வயிறு பசிக்கிறது, உணவளி அப்பனே"
"என்ன உணவு வேண்டும் பாட்டி?"
"பூக்களை வேகவைத்தது போல் ஒரு பதார்த்தம் உண்டாமே, இட்லி என்று சொன்னார்கள்".
இளைஞன் யோசித்தான், தெருவுக்கு தெரு இட்லி கடைகள் இருந்தாலும் முருகன் இட்லி கடையில் ஔவைக்கு விருந்து வைத்தான்.

 

ஊரெல்லாம் சுற்றிய ஔவை கடற்கரை சாலையில் தன் சிலைக்கு கீழே ஓய்வெடுத்தார்.
"நல்லது அப்பனே, தமிழின் எதிர்காலம் குறித்து பேசவேண்டும், உன் அரசரிடம் என்னை அழைத்து செல்."
"அவசியம் இல்லை ஔவையே. கோடை காலத்தில் தேர்தல் வருகிறது, அரசர்களே வீடு வீடாக வந்து மக்களை சந்திப்பார்கள். தமிழின் எதிர்காலம் குறித்து பேச நீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை. என்னோடு வா."

 

அன்னிபெசன்ட் நகருக்கு ஔவை வருகிறார். கவிஞரின் இல்லத்தில் அடியெடுத்துவைக்கிறார்.
இருசக்கர இளைஞன் விடைபெறுகிறான். தன் வீட்டு புல்வெளியில், ஒரு கையில் தேனிரோடும் மறுகையில் பேனாவோடும் கவிஞர் காட்சியளிக்கிறார். ஔவை தன்னை அறிமுகம் செய்கிறார். கவிஞர் எழுகிறார்.

 

காலில் விழுந்து பழகாத கவிஞர், கண்களில் நீர்கட்ட ஔவையின் கைதொட்டு வணங்குகிறார்.
"ஔவையே..! தாய்நாடு திரும்பிய தாயே..! தமிநாட்டின் வணக்கம் உனக்கு."
"கவிஞனே, தமிழ்நாடெல்லாம் வேண்டாம், உன் தமிழாற்றுப்படையில் இடம் கிடைக்குமா"
கவிஞர் சிரிக்கிறார். "நூற்றாண்டுகள் கடந்து வந்த பெண்பாற் புலவரே, பாட்டியின் புகழ் பாடாத பேரன்கள் உண்டா? உன் வாழ்வும் தமிழால் ஆனது என் வாழ்வும் தமிழால் ஆனது. உன்னுடைய அதியமானும் மாய்ந்துவிட்டார், என்னுடைய அதியமானும் மாய்ந்துவிட்டார். இனி நமக்கு நாம்தானே ஆதரவு."
கவிஞர் ஔவையோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். மாண்டுபோன புலமைகள், தமிழ் தாண்டவேண்டிய தடைகள் என நீண்டநேரம் உரையாடுகிறார்கள்.

 

கவிஞர் தந்த நெல்லிக்கனி தேனீரை மெல்ல பருகிய ஔவை, கைத்தடிபற்றி எழுகிறார்.
"கவிஞனே, உன் தமிழாற்றுப்படை சபையில் ஏதோ ஒரு வரிசையில் நானும் அமர்திருப்பேன். தாயிருக்கும்வரை கலக்கமில்லை, எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை" என ஆசிகூறி மறைந்தார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.