Skip to main content

சம்பவக்காரர் சங்கரய்யாவின் திகைப்பூட்டும் வரலாறு!

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

History of N Sankaraiah

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் நரசிம்மலு - ராமானுஜம் தம்பதியர். இந்த தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள். அதில் இரண்டாவதாக பிறந்தவர் பிரதாப சந்திரன். பிரதாப சந்திரனுக்கு ஒரு அண்ணன் மூன்று தம்பிகள் மற்றும் நான்கு தங்கைகள் உண்டு. நரசிம்மலு கோவில்பட்டியில் இயங்கிவந்த ஜப்பான் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்கல் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். 1922 ஜூலை 15 ஆம் தேதி பிறந்த பிரதாப சந்திரன்தான் பின்னாளில் சங்கரய்யாவாக மாறினார். சங்கரய்யா என்பது நரசிம்மலுவின் அப்பாவின் பெயர். அதாவது பிரதாப சந்திரனின் தாத்தாவின் பெயர். இந்த பெயர் மாற்றப் பின்னணி இரண்டு விதமாக சொல்லப்படுகிறது. ஒன்று.. பிரதாப சந்திரன் சிறுவயதிலேயே அடம்பிடித்து தாத்தா பெயரான சங்கரய்யாவை வைத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று, தாத்தாவே அடம்பிடித்து தனது பெயரை பேரனுக்கு வைக்கவேண்டும் என பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ.. பிரதாப சந்திரன் சங்கரய்யாவாக மாறினார்.

 

தூத்துக்குடி மேலூரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார் சங்கரய்யா. அவரது தந்தை நரசிம்மலு, பணி நிமித்தம் காரணமாக மதுரை நகரசபையில் நீரேற்று நிலைய சூப்பிரெண்டாக பணி ஏற்றார். இதனால், அவரது குடும்பமே மதுரைக்கு இடம் பெயர்ந்தது. பின்னர், மதுரையிலேயே பள்ளிப் படிப்பை முடித்த சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரலாறை விருப்பப் பாடமாக தேர்வு செய்து BA படிப்பை மேற்கொண்டார். கல்லூரி காலத்தில் மாணவர் பேரவைத் தலைவராக செயல்பட்ட சங்கரய்யா, சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதன் விளைவாக.. 1938ல் கொழுந்துவிட்டு எரிந்த இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டும் அளவுக்கு துணிந்து செயல்பட்டார். மாணவர் சங்கம் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்தினார். சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தார். இப்படி, சங்கரய்யாவின் புரட்சிகர செயல்பாடுகளை விரும்பாத கல்லூரி நிர்வாகம் அவரைக் கல்லூரியிலிருந்து நீக்க முடிவு செய்தது. இதையடுத்து சங்கரய்யாவுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் மாணவர்கள் களமிறங்க, தனது முடிவை கல்லூரி நிர்வாகம் மாற்றிக்கொண்டது வரலாறு. 

 

இதே காலகட்டத்தில் நடைபெற்ற, தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம், அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வர்க்க வேறுபாடு பற்றிய புரிதலுடனும், வர்ண வேறுபாடு பற்றிய தெளிவுடனும் சங்கரய்யா செயல்படத் தொடங்கினார். அதேசமயத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சங்கரய்யாவின் தொடர் போராட்டங்கள் ஆங்கிலேய அதிகாரிகளை எரிச்சலூட்டியது. இதன் காரணமாக, இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சங்கரய்யா கைது செய்யப்பட்டார். BA இறுதித் தேர்வுக்கு இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில், சங்கரய்யா கைது செய்யப்பட்டதால் அவரது கல்லூரி படிப்பே நின்றுவிட்டது. இது தனது மகன் எப்படியாவது படித்து முடித்துவிட்டு வழக்கறிஞர் ஆகிவிடுவான் என கனவு கண்டு கொண்டிருந்த தந்தை நரசிம்மலுவின் தலையில் இடியாய் இறங்கியது. ஆனாலும், சங்கரய்யா தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். கைது செய்யப்பட்ட சங்கரய்யா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு காமராஜர் உள்ளிட்ட பெரும் பெருந்தலைவர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. சிறைக்குள்ளும் சங்கரய்யா சும்மா இருக்கவில்லை. ஆங்கிலேய அரசின் சிறைக் கொடுமைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். இதனால் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். அவருடன் கைதான மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

 

சும்மாவே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆடும் சங்கரய்யாவுக்கு, சிறை வாழ்க்கை சலங்கையை கட்டிவிட்டது. சொல்லவா வேண்டும்.. முன்பை விட இப்போதுதான் சங்கரய்யா அதிக வீரியத்துடன் வெளிப்படத் தொடங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மாணவர்களை ஒன்று திரட்டி மாணவர்கள் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கிறார். அப்போது நடத்தப்பட்ட போலீஸ் தடியடியில் காயம் ஏற்படுகிறது. மீண்டும் கைது.. மீண்டும் போராட்டம்.. மீண்டும் காயம்.. இதுதான் சங்கரய்யாவின் வாழ்க்கையாக மாறிப்போனது. 1944ஆம் ஆண்டு மாணவர் அமைப்பிலிருந்து விலகிய சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர், 1947 ஆம் ஆண்டு நவமணி எனும் கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். நவமணி கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சங்கரய்யா குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை கொஞ்சமும் பொருட்படுத்தாத சங்கரய்யா, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தேடுத்த சங்கரய்யா, சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். பின்னர், தடை நீக்கப்பட்டவுடன் மீண்டும் துடிப்புடன் கட்சிப்பணி செய்து வந்த சங்கரய்யா தேர்தல் பணியிலும் ஈடுபட்டார்.

 

1957 ஆம் ஆண்டு மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சங்கரய்யா அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆனாலும் மனம் தளராத சங்கரய்யா மீண்டும் தேர்தல் களம் கண்டார். விளைவாக, 1967ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்தும், 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் பதினைந்து ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டபோது 35 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிந்து சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியது வரலாறு. அந்த 35 பேரில் கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மற்றும் சங்கரய்யாவும் ஒருவர். சங்கரய்யா தமிழ்நாடு முன்னாள் முதல்வர்களான கலைஞர் மற்றும் எம்ஜிஆரிடம் தீவிர நட்பு கொண்டிருந்தார். முன்பெல்லாம், மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற கிராமத்திலிருந்து நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதை கவனித்த சங்கரய்யா, இனி அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளைத் திறப்பது பற்றி ஆளுநர் உரையில் சேர்க்க வேண்டுமென அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கோரிக்கை வைத்தார். எம்.ஜி.ஆரும் இதை ஏற்றுக் கொண்டார். இதுபோல பல சமயங்களில் எம்ஜிஆருக்கு அறிவுரை கூறியவர் சங்கரய்யா. அதேபோல, திமுக முதல் முறையாக 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது போக்குவரத்து துறையில் கடும் பிரச்சனைகளை சந்தித்தது. அப்போது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கலைஞருடன் கலந்துபேசி சுமூக தீர்வை ஏற்படுத்தியதில், முக்கியப் பங்காற்றியவர் சங்கரய்யா. சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கிய கலைஞருக்கு உற்ற துணையாகவும் இருந்தவர் சங்கரய்யா. 

 

சாதி மத தீண்டாமைகளுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வந்தவர் சங்கரய்யா. சாதிமறுப்பு திருமணங்களை மேடைகளில் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தன் குடும்ப வாழ்விலும் செயல்படுத்திக் காட்டியவர் சங்கரய்யா. அவர் தொடங்கி, அவரின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் வரை பலரும் சாதி மறுப்பு திருமணங்களையே செய்தனர். அதற்கு விதை போட்டவர் சங்கரய்யா. இப்படி பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது மு.க. ஸ்டாலின் அரசு. மேலும், தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்தார். விடுதலைப் போராட்ட வீரருக்கு கவுரவ டாகடர் பட்டம் வழங்க அரசு அனுப்பிய கோப்பில் கவர்னர் ரவி கையெழுத்திட வேண்டும் என அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்து வந்தன.

 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கரய்யா, தற்போது உயிரிழந்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த சங்கரய்யா நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம்.. ஆனால், மக்களுக்காகத்தான் வாழ்வேன் என்று பல்வேறு வலிகளையும், தடைகளையும் தாண்டி மகத்தான வாழ்வை வாழ்ந்து காட்டியுள்ளார் சங்கரய்யா.

 

 

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.