Skip to main content

கிராம மக்களை காக்க தவறிய அரசு : ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்த இளைஞர்கள்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டப்பட்டினம் ஊராட்சியில் அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுகாட்டூர், கீழகுண்டலபாடி கிராமங்கள் உள்ளது. இது ஜெயங்ககொண்டப்பட்டினம் - அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்திற்கு இடையே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் அக்கரையில் உள்ளது. இந்த கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
 

 

 

இயற்கை வளம் உள்ள இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஊரைவிட்டு வெளியே வரவேண்டும் என்றால் கொள்ளிடம் ஆற்றை கடந்து தான் வரவேண்டும். ஆற்றில் குறைவாக தண்ணீர் இருந்தால் அனைவரும் ஆற்றில் இறங்கி வந்துவிடுகிறார்கள். மழைகாலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது 5 கீ.மீ தூரம் சுற்றிகொண்டு பெராம்பட்டு கிராமத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக வெளியுலகிற்கு சென்று வருகிறார்கள்.
 

மேலும் இந்த கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு வரவேண்டும் என்றாலும் துணிகளை கையில் எடுத்துகொண்டு ஆற்றில் இறங்கி கரைக்கு வந்து துணிகளை போட்டுகொண்டு பள்ளிக்கு சென்று வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் பல உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி செல்லும் போது உயிரை கையில் பிடித்து செல்வது போல் தினம் தினம் உயிர் பயத்தில் சென்று வருகிறார்கள். முதலைகளிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் இறங்கி நடந்து வரும் போது கையில் குச்சியை வைத்துக்கொண்டு தண்ணீரை அடித்தவாறு சத்தமிட்டுகொண்டு ஆற்றை கடந்து சென்று வருகிறார்கள்.
 

 

 

ஜெயங்கொண்டபட்டினத்திற்கும் - அக்கரைஜெயங்கொண்டபட்டினத்திற்கும் இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சிமெண்டால் தரைபாலம் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் இந்த பாலம் அடித்துசென்றுவிட்டது. அதன் பின்னர் பாலம் அமைத்து தரக் கோரி குமராட்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் வலியுறுத்தி மனுகொடுத்துள்ளனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. இதனால் அரசின் மீது விரக்தி அடைந்த அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தில் உள்ள மக்களிடம் ரூபாய் 25 ஆயிரம் நிதி திரட்டி மூங்கில் கழியால் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இளைஞர்களின் செயல்பாட்டை அந்த கிராம மக்கள் மட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
 

இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (27) என்ற பெண் கூறுகையில், நான் சின்னபிள்ளையாக இருந்தபோது ஆற்று தண்ணீரில் இறங்கி தான் கிராம மக்க போய் வந்தாங்க. அதன் பிறகு தரை பாலம் போட்டாங்க. அதுவும் தண்ணீல அடிச்சுட்டு போயிடுச்சு. அதன் பிறகு 10 வருஷசத்துக்கு மேல அரசிடம் பாலம் கட்டிதரகோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதனால் ஆத்துல தண்ணீர் கொஞ்சமா இருக்கும் போது இறங்கி போவோம். முதலை எப்ப கடிக்குமோ என்ற பயத்திலேயே போவோம்.

எங்க ஊரில் இயற்கை முறையில் காய்கறிகளை விளைய வைத்தோம். எங்க ஊரில் விளையும் காய்களுக்கு தனி மவுசு இருக்கும். விளைந்த காய்கறிகளை எடுத்து செல்ல சரியான வழி இல்லாததால் விவசாயிகள் காலை 5 மணிக்கு காய்கறிகளை தலையில் தூக்கிகொண்டு ஆற்றில் இறங்கி சென்று சிதம்பரம், கொள்ளிடம் பகுதியில் வித்துட்டு வருவாங்க.

இப்படி இயற்கை வளமிக்க எங்க ஊரில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறியுள்ளது. குடிக்க 4 கி.மீ தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஊரில் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அதில் உப்பு தண்ணீயை தான் ஏற்றி கொடுக்கிறார்கள். உப்பு தண்ணீரால் அந்த குடிநீர் தொட்டியும் பழுதடைந்து எப்ப இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.

கடல் நீர் உட்புகுவதற்கு அரசின் மெத்தனபோக்கு தான் காரணம் இந்த பகுதியில் உள்ள மக்கள் உப்புநீர் புகாமல் இருக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டகோரி பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அரசு தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்க ஊர் வாழ்வாதரத்தை இழந்து குடி தண்ணீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்கவும், உடனடியாக காங்கிரீட்சிமண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என்றார்.
 

 

 

இதுகுறித்து குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியனை தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. அதற்கு முன் மனு கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளோம். நான் அலுவலகம் வந்தவுடம் அதுகுறித்து மனு உள்ளதா? என்று பார்கிறேன் என்றார்.

 

 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.