Skip to main content

ஈ.சி.ஆர். அட்ராசிட்டிஸ்! - மிரண்டு போன போலீஸ்! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

ECR women issue police arrested eight persons

 

சென்னைவாசிகளின் கிளுகிளு ஏரியா என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது ஈ.சி.ஆர். சாலை தான். வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரிலோ, கிளாஸ் முதல் ஹைகிளாஸ் வரை பல விதத்தினரும் சங்கமிக்கும் பகுதி அது என்பதால், அங்கே அரங்கேறும் சட்டவிரோத சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை. அப்படியொரு ஆபாச லீலையை அரங்கேற்றிய ஒரு கும்பலைத்தான் காவல்துறை மடக்கியது அதிர்ச்சி கலந்த திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் இருக்கிறது பனையூர். அங்கிருக்கும் ஒரு பண்ணை வீட்டை, பிறந்த நாள் பார்ட்டிக்கு வேண்டும் என்று வாடகைக்கு எடுத்திருக்கிறது, தங்களைக் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்ட ஒரு நடுவயது டிப்டாப் ஜோடி. இதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கணவன் -மனைவிபோல் எட்டு தம்பதிகள் அங்கே வர, அவர்களுடன் பேச்சிலர்கள் 10 பேரும் வந்துள்ளனர். கொஞ்ச நேரத்தில் பார்ட்டி ஆரம்பித்திருக்கிறது. அந்தப் பண்ணை வீட்டிற்குள் ஆட்டம், பாட்டம் என ஒரே ஆரவாரக் கூச்சல் கிளம்பியிருக்கிறது. இந்த பர்த்டே பார்ட்டி மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்திருக்கிறது. அப்போது மேலும் 7 பேச்சிலர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். இதனால் ஆரவாரமும் கூடுதலாகி இருக்கிறது.

 

ECR women issue police arrested eight persons

 

இது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, தகவல் போலீஸுக்குப் போனது. உடனே போலீஸ் டீம் ஒன்று அந்த பனையூர் பண்ணை வீட்டை முற்றுகையிட்டது. இது தெரியாமல், உள்ளேயிருந்து ஆரவாரச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. உடனே போலீஸ் டீம் கதவைத் தட்டியது. உள்ளே இருந்த ஒரு நபர் கோபத்துடன் கதவைத் திறந்தார். திபுதிபுவென போலீஸ் டீம் உள்ளே நுழைந்ததும் அந்த நபர் மிரண்டுபோய் பின்வாங்கினார்.

 

பண்ணை வீட்டிற்குள் அரை நிர்வாணக் கோலத்தில் ஆடிக்கொண்டிருந்த பெண்கள், போலீஸைக் கண்டு அறைகளுக்குள் ஓடிப்பதுங்கினர். ஆண்களோ தப்பியோடப் பார்த்தனர். அவர்கள் அத்தனை பேரையும் போலீசார் மடக்கினர். இப்படியாக அங்கே 8 பெண்களுடன் 15 ஆண்களும் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்தது, அப்போதுதான் பல அதிரவைக்கும் கிளுகிளு சமாச்சாரங்கள் வெளியே வந்தன.

 

இது தொடர்பாக அங்கே சென்ற காவல்துறையினரிடம் நாம் கேட்டபோது, “தம்பதிகள் என்ற பெயரில் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் செந்தில்குமார், ஜெயலட்சுமி என்கிற ஜோடி. இவர்கள் உண்மையில் தம்பதி இல்லை. பலான தொழிலைச் செய்து வந்தவர்கள். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், 2018 முதல் பலான தொழிலை நடத்திவருகிறார்களாம். அதாவது, முகநூலில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து மற்றொரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் பாலியல் இன்பத்துக்காக ஏங்கும் சபலிஸ்டுகளுக்கு வலை விரித்திருக்கிறார்கள். ஸ்பெஷல் செக்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்யப்படுவதாகவும், நாள் முழுக்க அதில் பங்கேற்று மகிழலாம் என்றும், அப்போது மதுவிருந்தும், ஆட்ட பாட்டமும் உண்டு என்றும் அழைப்பு விடுத்ததோடு, இந்தப் பார்ட்டியின் போது ஆணும் பெண்ணும் நீச்சல் குளத்தில் சேர்ந்து குளித்து ஜலக்கிரீடை மூலம், இன்பக் கடலில் நீந்தலாம் என்றும் ஆசை காட்டியிருக்கிறார்கள். இது தவிர ஜோடி ஜோடியாய் வருபவர்கள், தங்கள் மனைவிகளை மாற்றிக்கொண்டும், உல்லாசத்தில் சஞ்சரிக்கலாம் என்றும் தூண்டில் போட்டிருக்கிறார்கள். இன்பாக்ஸில் கிக்காகப் பேசி, சிக்கும் நபர்களை எல்லாம் வளைத்திருக்கிறார்கள்.

 

ECR women issue police arrested eight persons

 

இப்படி சகல விதத்திலும் இன்பம் அனுபவிக்க, ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ரேட் பிக்ஸ் செய்து ஏகத்துக்கும் வசூலித்திருக்கிறார்கள். இப்படி ஆட்களைத் திரட்டி, பர்த் டே பார்ட்டி என்ற பெயரில் பண்ணை வீடுகளை புக் செய்து, அங்கே செக்ஸ் பார்ட்டிகளை நடத்தி வந்திருக்கிறார்கள். பிடிபடும்போது உண்மையான பர்த்டே பார்ட்டி என்று காட்டுவதற்காக உண்மையிலேயே அந்த சமயத்தில் பர்த்டே வரக்கூடிய ஒருவரையும் ஏற்பாடு செய்து, கூடவே அழைத்துச் செல்வார்களாம். இப்படி நூதன முறையில் 5 ஆண்டுகளாக பர்த்டே பார்ட்டி என்ற பெயரில் ஆபாசத் தொழிலில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டிதான் இப்போது பிடிபட்டு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது” என்றவர்கள், இன்னும் சில தகவல்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

 

“கணவன் -மனைவி என்ற பெயரில் வந்த ஜோடிகளில் பலரும், டுபாக்கூர் ஜோடிகள்தான். வறுமையாலும், குடும்பச் சூழ்நிலையாலும் இந்தத் தொழிலுக்கு வந்ததாக பிடிபட்ட பெண்கள் எல்லோரும் கண்ணீர் விட்டனர். இப்படி தம்பதிகள் என்ற பெயரில் வந்தவர்கள் மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆண்களில் சிலர் தங்கள் குடும்பத்திற்குத் தெரியாமல் வந்திருந்தனர். அப்படிப்பட்டவர்களின் குடும்பத்திற்குத் தகவல் கொடுத்து வரவழைத்து, இனி இப்படி நடக்க மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அவர்களைக் குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தோம். அதேபோல் 8 பெண்களையும் அனுப்பி வைத்தோம். அவர்களின் கணவர்களாக நடித்தபடி வந்திருந்த 8 பேர் மீதும் விபச்சாரத் தடுப்பு பிரிவில் வழக்கு போடப்பட்டிருக்கிறது. பிடிபட்டவர்களிடம் இருந்து பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகள், மது பாட்டில்கள், சிறிய அளவிலான போதைப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இவர்கள் மன்மத வலைவிரித்த முகநூல் கணக்கையும் முடக்க முயற்சி எடுக்கப் பட்டிருக்கிறது. மனைவிகளை மாற்றிக்கொள்ளும் பார்ட்டி என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த இல்லீகல் பலான பிசினஸ், சமூகச் சீரழிவை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்த விசயத்தில் அதிக கவனத்தைச் செலுத்துகிறோம்” என்றார்கள் விரிவாகவே.

 

கிழக்குக் கடற்கரைச் சாலையை கிளுகிளு சாலையாக மாற்றி வரும் பண்ணை வீடுகளை, தீவிரமாக காவல்துறை கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.