Skip to main content

கொங்கு மண்டலத்தில் கிடைத்த வெற்றியை பறிகொடுக்கிறதா திமுக... அதிர்ச்சி தகவல்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

கொங்கு மண்டலத்தில் பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த தி.மு.க.வின் செல்வாக்கு சரிவை, கடந்த எம்.பி. தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிமூலம் தடுத்து நிறுத்தினார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இப்போது அந்த ஏரியா கட்சிக்குள் நடந்துவரும் கூத்துக்களைப் பார்த்தால், மீண்டும் சரிவை நோக்கிப் போகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. திருப்பூர் நகர தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ராஜ்மோகன் (எ) வில்லன்ராஜ், போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் தி.மு.க.விற்கு வந்து மா.செ.வை கவனித்து, கட்சியில் பதவியும் வாங்கியவர் ராஜ்மோகன்.

 

dmk



இப்போது கோவையிலும் கையில காசு, கட்சியில போஸ்டிங் என்ற புகார் சூறாவளி, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீது சுழன்றடிக்கிறது. அந்தப் புகாரைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்கு முன், தென்றல் செல்வராஜ் அரங்கேற்றிய மினி போராட்டம் பற்றிய செய்தி.

கடந்த வாரம் கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பார் லைசென்ஸ் வாங்குவதற்கான டெண்டர் விண்ணப்பங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. விண்ணப்பம் வாங்குவதற்காக தென்றல் செல்வராஜும் அவரது ஆட்களும் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணனும் அவரது ஆட்களும் போயிருக்கிறார்கள். சில காரணங்களால் இன்று விண்ணப்பம் வழங்க முடியாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்ததும், இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியதால், டாஸ்மாக் கண்காணிப்பாளர் திருக்குமார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.

இதில் நவநீத கிருஷ்ணன் ஆட்கள் மீது மட்டும் பொள்ளாச்சி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துவிட்டனர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, டி.எஸ்.பி.சிவக்குமாரிடம் பெர்மிஷன் கேட்கப் போனார் தென்றல் செல்வராஜ். "டாஸ்மாக்கை கண்டிச்சுத்தானே ஆர்ப்பாட்டம் பண்ணணும், எங்களைக் கண்டிச்சு ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்க?'’என டி.எஸ்.பி. கேட்க, "போலீசை கண்டிச்சுத்தான் ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்' என்றிருக்கிறார் தென்றல். ந.செ. டாக்டர் வரதராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, அதில் 65 பேர் கைதாகி, நான்கு நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

நகர உ.பி. ஒருவரோ,’பொதுப்பிரச்சனைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணாம டாஸ்மாக் பார் பிரச்சினைக்கு ஆர்ப்பாட்டம் பண்ணிருக்காரு தென்றல் செல்வராஜ். அதுவும் தலைமையிடம் பெர்மிஷன் வாங்காம. இப்ப லோக்கல் பார் முதலாளிகள் தரப்புக்கும் தென்றல் செல்வராஜ் தரப்புக்குமிடையே சுமுகமாயிடுச்சு. நவநீதகிருஷ்ணன் நிலைமை தான் இப்ப பரிதாபம்''’என புலம்பியபடியே ஒரு வாட்ஸ்-ஆப் ஆடியோவை நமக்குப் போட்டுக் காட்டினார் அந்த உ.பி.

அதில் இருக்கும் சில துளிகள்...

நம்ம தென்றல் இப்படி பண்ணுவாருன்னு எதிர் பார்க்கவே இல்லைன்னு காலம் காலமா நம்ம கட்சியில இருக்குற ஆளுங்க புலம்பித் தள்றாங்கப்பா''’’

"அப்படி என்னங்க பண்ணிப்போட்டாரு நம்ம தென்றல்''’’

"தம்பி, இப்ப நம்ம கட்சியில நெசவாளர் அணி மாநில இணைச் செயலாளராக இருக்கும் கே.எம்.நாகராஜ் யாரு தெரியுமா, பெங்களூரு சிறையிலிருந்து ஜெயலலிதா ஜாமீன்ல வந்தப்ப பட்டாசு வெடிச்சு, லட்டு கொடுத்தவன். அவனுக்கு நம்ம கட்சியில போஸ்டிங் வாங்கிக் கொடுத்தது தென்றல்தான். இதே மாதிரி வெள்ளலூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவரா இருந்த ஈ.வி.பி.பாலகிருஷ்ணன், நம்ம கட்சிக்கு வந்து ஒரு வருஷம் கூட ஆகல, இப்ப நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாள ராயிட்டாரு.''


"ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளரா இருந்த மாணிக்கராஜ், சின்ஸியரான கட்சிக்காரனப்பா. அந்த தம்பிய தூக்கிட்டு, புதுசா வந்த தேவேந்திரனுக்கு அந்தப் போஸ்டிங்கை கொடுத்துட்டாரு தென்றல். அதேபோல் மதுக்கரை, பேரூர்னு எல்லா இடத்துலயும் இதே விளையாட்டுத்தான்’''

-இப்படியே நீள்கிறது அந்த ஆடியோ.

"ஏனுங்க இதெல்லாம் உண்மையா?'' என தென்றல் செல்வராஜிடம் கேட்டோம்.’

"பார் டெண்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தலைமையிடம் அனுமதி வாங்கித் தான் ஆர்ப்பாட்டம் நடத்தினேன்''’என்றார் உறுதியாக.
 

 

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.