Skip to main content

கேரளாவைப் போல தமிழகத்தில் பெண்களை ஒருங்கிணைக்குமா திமுக?

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
vanitha2


இது சாதாரண சாதனை இல்லை. உலகமே வியந்து பார்க்கிற சாதனை. 620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். 
 

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்று கருதப்படும் இந்த நிகழ்வு, சபரிமலையில் பெண்களின் வழிபாட்டு உரிமைகளை ஆதரித்து நடைபெற்றுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால், பாஜகவும், காங்கிரஸில் ஒரு பிரிவினரும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 

ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பக்தர்களை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் பெண்களுக்கே இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை என்றும், அரசின் நடவடிக்கைக்கு பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 

ஆனால், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சபரிமலையைச் சுற்றியுள்ள இரண்டு வார்டுகளில் பாஜக 7 வாக்குகளும், 12 வாக்குகளும்பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.
 

இந்நிலையில்தான், கேரளா கம்யூனிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைக்கு பெண்களின் ஆதரவு இருப்பதை பறைசாட்டும் வகையில் பெண்கள் மதில் என்ற போராட்ட உத்தியைக் கையில் எடுத்தது. ஏற்கெனவே 25 ஆண்டுகளுக்கு முன் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆண்களும் பெண்களும் கலந்த மனிதச் சங்கிலியை கேரளா கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருந்தது.
 

ஆனால், இப்போது பெண்கள் மட்டுமே பங்கேற்ற மனித சுவரை எழுப்பி சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் வரிசைக்கு எதிர்புறம் ஆண்களும் வரிசையில் நின்றனர். போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. அதைச் சமாளிக்கவே ஆண்கள் வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 

பெண்களை இதுபோன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தனித்து பயன்படுத்துவது இந்தியா முழுமைக்கும் நல்ல பயன்தரும் என்ற கருத்து இப்போது உருவாகி இருக்கிறது. கேரளாவைப் போல எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பெண்களை இப்படி அரசியல்ரீதியாக கற்பிப்பது நல்ல பயனளிக்கும் என்ற எண்ணம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
 

vanitha-3


தமிழகத்தில் திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் பெண்களை இதுபோல அணிசேர்த்து அரசியலை கற்பிக்க முடியும் என்று கூறுகிறார்கள். சமீப காலத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாதர் அமைப்புகளைத் தவிர்த்து, திமுக மகளிரணி அரசியல் விழிப்புணர்வு பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
 

அதிமுகவில் மகளிர் அமைப்பில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அது அமைப்பு ரீதியாக இல்லை. அதேசமயம், திமுக மகளிரணி அமைப்பு ரீதியாக கட்சிக்கு கட்டுப்பட்ட அமைப்பாக உருவாகி இருக்கிறது. கற்றறிந்த மகளிர் ஏராளமாக திமுக மகளிர் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.
 

ஆனால், மகளிரணி தலைவரான கனிமொழிக்கும் சரி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கும் சரி உறுப்பினர்களைச் சேர்க்கக்கூட அனுமதி இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள், கிளைக்கழக திமுக செயலாளரின் அனுமதி இல்லாமல் பெண்களைக்கூட உறுப்பினராக இணைக்க முடியாது.
 

மகளிரணி தலைமைக்கு கட்டுப்பட்டதுதான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்ற தனி அமைப்பாகக்கூட இல்லாமல், தனித்து உறுப்பினர்களை சேர்த்து, தலைமைக் கழக அனுமதியோடு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டங்களை நடத்தவேனும் அனுமதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்றங்களில் 33 சதவீத ஒதுக்கீடு என முழக்கம் தொடர்கிறது. அப்படி அதுவும் கிடைத்துவிட்டால், பெண்களுக்கு அரசியல் கல்வி மிகவும் அவசியம். பெண்களின் பெயரால் ஆண்களே அதிகாரம் செலுத்தும் அரசியலைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால், கேரளாவைப் போல பெண்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
 

திமுக மகளிரணி தரப்பில் இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதுகுறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.