Skip to main content

திமுக, அதிமுக கனவு நனவாவது அவ்வளவு எளிதல்ல... ம.நீ.ம. கடும் தாக்கு... 

Published on 28/12/2019 | Edited on 30/12/2019

 

மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாதது பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே?
 

பேரணியில் கலந்து கொண்டாலும் ஒரு விவாதம் இருக்கத்தான் செய்யும். அது வேறொரு விவாதமாக வரும். திமுக நடத்தியப் போராட்டம் நல்ல போராட்டம். வலிமையான போராட்டம். திமுகவுக்கு கொடுத்த கடிதத்திலேயே, ''இந்த மசோதாவை எதிர்க்கிற எல்லோருக்கும் எங்களது ஆதரவு உண்டு. அதேபோல் உங்களுக்கும் எங்களது ஆதரவு உண்டு'' என்றுதான் சொல்லியிருப்போம்.


கடைசி வரியில் ''ஒற்றைக் குரலாக ஒலிப்போம்'' என்று எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். அந்த பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இல்லை. கலந்து கொள்ளக்கூடிய சூழல் இல்லை என்பதுதான் உண்மை. 


 

 mnm


 

தொடர்ந்து குடியரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மக்கள் நிதி மய்யத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

 

தொடர்ச்சியாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு போராட்டம் நடத்தி அதனை பதிவு செய்துவிட்டு போவதற்கான சூழல் இல்லை. அதேபோல எத்தனைப் போராட்டங்கள் என்பதற்கும் கணக்கு இல்லை. 
 

மக்களை வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவதைவிட மத்திய அரசை கோர்ட்டுக்கு வரவழைத்துள்ளோம். அங்கு நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும். ஒன்று சட்டத்தின் நியாயத்தை விளக்க வேண்டும், விதிமுறைகளை மாற்ற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். இருப்பதிலேயே வலிமையான போராட்டமாக அதைத்தான் நினைக்கிறோம். 
 

இரண்டாவது மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்த திட்டம் இருக்கிறது. தற்போது இந்த நிமிடம் எங்கள் தலைவர் ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் அடுத்தக் கட்டப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். 


 

 

உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்கலாம் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்திற்கு தோன்றுகிறதா? 
 

உள்ளாட்சித் தேர்தல் தொண்டர்களுக்கு மிகவும் பங்களிப்புள்ள தேர்தல் என மனசுக்கு தெரிந்தே ஒதுங்கி வந்தோம். உள்ளாட்சித் தேர்தல் முக்கியமான தேர்தல்தான். ஆனால் அவர்கள் சரியாக நடத்தவில்லை. பாதி நடத்துகிறார்கள், பாதி நடத்தவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பில் குளறுபடி என நீதிமன்றத்திற்கு போகிறார்கள். இதனால்தான் அந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை. 
 

அரசியல் கட்சி என தொடங்கிவிட்டால் அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ சீமான் தேர்தலை சந்திக்கிறார். ஆனால் கமல் உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது...
 

அரசியல் கட்சி என தொடங்கிவிட்டால் அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அதே நேரம் ம.நீ.ம. எதற்கு தொடங்கப்பட்டது என்றால், இங்கு உள்ள கட்சிகள் போதாது என்றோ, எங்கள் தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவோ தொடங்கிய கட்சி அல்ல. இப்போதுள்ள அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும். இன்று உள்ள ஆட்சி அமைப்பை மாற்றவேண்டும். இப்போதுள்ள அரசியல் கலாச்சாரத்தையே மாற்ற வேண்டும். அதற்கு வலிமையான இடத்தில் உட்கார வேண்டும். அப்படியென்றால் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அதற்கான காலம் 2021. அதற்கான போருக்கு போகும்போது முழுமையாக போக வேண்டும். பலவீனமாக இருந்து களத்தில் குதிப்பது அர்த்தம் கிடையாது. கடந்த தேர்தலை சந்தித்தபோது ஒரு இடத்தில் 13 சதவீத வாக்குகள் பெற்றிருந்தோம். ஒரு இடத்தில் ஒரு சதவீதம் வாக்கு பெற்றிருக்கிறோம். சில பூத்துக்களில் 35 சதவீதம் வாங்கியிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆதரவை எந்தக் கட்சிக்கும் மக்கள் கொடுத்தது இல்லை.
 

எங்களது கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்குள் தேர்தலை சந்தித்ததுதான் பலவீனமாக போய்விட்டது. நாளை வரும் தேர்தலை சந்திக்கும்போது அப்படிப்பட்ட பலவீனம் இருக்கக்கூடாது. கட்சியை வலுப்படுத்த வேண்டும், களத்தை பலப்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாக்காளரையும் ம.நீ.ம. நிர்வாகிகள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஓய்வு. இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தின் கடைசி பூத் வரை நிர்வாகிகளை நியமித்துவிடுவோம். 
 

சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சி வெற்றிக்கான கணிப்பில் உள்ள கட்சியாக இருக்கும். அப்படி இருக்க கட்சியை தயார் படுத்திக்கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலை முக்கியமாக கருதுகிறோம். 


 

 

கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு வங்கி இல்லை. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் எடுத்த வாக்கு சதவீதத்தற்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று விமர்சனம் செய்கிறார்களே...
 

நாங்கள் எங்கள் திட்டத்தில் தெளிவாக இருக்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 சதவீத வாக்குள் பெற்ற ம.நீ.மய்யமாக இருக்கக்கூடாது. மாற்று வாய்ப்புக்குள்ள கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு எங்களது கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். மீண்டும் சொல்கிறேன் இருக்கும் கட்சிகளில் இன்னொரு கட்சியாக வந்த கட்சி ம.நீ.ம. அல்ல. குறிக்கோளுடன் வந்திருக்கிறோம். அதனை நிறைவேற்ற போராடுகிறோம். 
 

கடந்த 50 வருடங்களாக திமுக, அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. கிராம பஞ்சாயத்துக்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள், கைக்குள் இருக்க வேண்டும் என்று திமுக, அதிமுக ஆசைப்படுகிறது. மத்திய அரசிடம் சுயாட்சி கேட்கிற மாநில அரசு, கிராமப் பஞ்சாத்துக்களுக்கு முழுமையான அதிகாரங்களை கொடுப்பதில்லை. அதைக் கொடுப்பதற்குக்கூட நாங்கள்தான் வரவேண்டும். 

 

Murali Appas


 

இந்த உள்ளாட்சித் தேர்தலே குறைபிரசவம். நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இந்த தேர்தலை யாராவது நிறுத்திவிடமாட்டார்களா என்று ஆசைப்பட்டார்கள். இந்தத் தேர்தல் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதில் வெற்றிபெறுபவர்களின் பதவி காலம் என்ன? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள் இங்கு உள்ள கட்சிகள். 
 

ம.நீ.மய்யத்தை பொறுத்தவரை 2021 பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவோமானால் எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கிறது. எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கவோ, அந்த வாய்ப்பை நழுவ விடவோ தயாராக இல்லை. எங்களிடம் இத்தனை வாக்கு சதவீதம் இருக்கிறது என்று யாரிடமாவது சென்று எம்பி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. மிகத் தெளிவாக சொல்கிறோம் வரும் 2021 தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்த்து நிற்கப்போகிறோம். 2021 தேர்தலில் திமுக, அதிமுக தங்களது கனவை நனவாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறும் காலம் வரும். 
 

2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா?  
 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற இரண்டு பேரின் நோக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நட்பு சென்று கொண்டிருக்கிறது. தேவைப்படுமானால் வாய்ப்பு இருக்கத்தான் செய்யும். திமுக, அதிமுகவை வீழ்த்துவதற்கு அது தேவை என்றால் அதுவும் நடக்கும். 


 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.