Skip to main content

மோடி செஞ்சாக... கனடா பிரதமர் செஞ்சாக... நாமளும் செய்வோம்! தல தீபாவளிக்கு மட்டுமல்ல... எல்லா தீபாவளிக்கும் இதை செய்வோம்!  

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

   

DIWALI FESTIVAL PEOPLES WEAR PATTU VESTI HANDLOOM WEAVERS

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆடைகள் உடுத்துவர். அந்த வரிசையில் தமிழகத்தில் வேஷ்டி மற்றும் சேலைகள் மிகவும் பாரம்பரியமானது. தமிழகத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகள், காதணி விழா, தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட முக்கியமான நாட்களில் மக்கள் பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சேலைகளை உடுத்தி மகிழ்வர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உடுத்தும் வகையில் வேட்டிகள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் தீபாவளி பண்டிகை அன்று 'தலை தீபாவளி'யை கொண்டாடும் புதுமண தம்பதிகள் பட்டு சேலை மற்றும் பட்டு வேஷ்டி உடுத்தி தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதை தமிழக மக்கள் பாரம்பரியமாக கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்களும் வேஷ்டி மற்றும் சேலையை உடுத்தி மகிழ்கின்றனர். அதேபோல் இந்தியாவில் பல்வேறு மாநில மக்களும் வேஷ்டிகள் மற்றும் சேலைகள் உள்ளிட்ட ஆடைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

DIWALI FESTIVAL PEOPLES WEAR PATTU VESTI HANDLOOM WEAVERS

கடந்த காலங்களில் வேஷ்டி மற்றும் சேலைகள் கைத்தறி மூலம் தயார் செய்யப்பட்டு வந்தது. இதனால் ஆடைகள் நீண்டநாள் வரை உடுத்தும் அளவிற்கு தரமானதாக இருக்கும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது விசைத்தறி மூலம் இத்தகைய ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் தரம் கைத்தறி ஆடைகளை ஒப்பிடும் போது சற்று குறைவாகத்தான் இருக்கும்.

 

விசைத்தறி காரணமாக கைத்தறி நெசவாளர்கள் நலிவடைந்துள்ளனர். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர் நெசவாளர்கள். கரோனா காலத்தில் திருமண விழா உள்ளிட்டவை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாலும், சில நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்பட்டிருப்பதாலும் பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சேலைகளின் விற்பனை முற்றிலுமாக நின்று போனது.

DIWALI FESTIVAL PEOPLES WEAR PATTU VESTI HANDLOOM WEAVERS

தமிழகத்தில் பட்டுச்சேலைக்கு புகழ்பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம். பட்டு வேஷ்டி மற்றும் காட்டன் வேஷ்டி உள்ளிட்ட ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்வது சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களே! இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு வேஷ்டி உள்ளிட்ட ஆடைகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு உலக அளவில் கரோனா பரவல் காரணமாக உற்பத்தி இருந்தும், அதனை விற்பனை செய்ய முடியாத சூழலில் வியாபாரிகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.

DIWALI FESTIVAL PEOPLES WEAR PATTU VESTI HANDLOOM WEAVERS

இது குறித்து நெசவாளர்கள் கூறுகையில், "ஏற்கனவே எங்கள் நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. தற்போதைய கரோனா பொதுமுடக்கம் எங்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தத் தலைமுறை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விஷேச நாட்களில் நமது பாரம்பரிய ஆடைகளான வேஷ்டிகள் மற்றும் சேலைகள் வாங்கி உடுத்த வேண்டும். அப்போதுதான் நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரும். மேலும் நமது பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்ற முடிவும்". என்று கூறினர்.

DIWALI FESTIVAL PEOPLES WEAR PATTU VESTI HANDLOOM WEAVERS

கடந்த ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்திருந்தபோது, சீன அதிபருடனான சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேஷ்டி அணிந்திருந்தார். அதேபோல் கனடா பிரதமரும் வேஷ்டி அணிந்து பொங்கல் பண்டிகையை கனடாவில் வசிக்கும் தமிழர்களுடன் கொண்டாடினார் என்பது நினைவுக்கூறத்தக்கது. உண்மையில் 1990-2000 காலகட்டத்தை ஒப்பிடுகையில் வேஷ்டி மீதான நாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. அதற்கான அடையாளங்களே, வித விதமான வண்ணங்கள், டிசைன்களில் வேஷ்டி, பாக்கெட் வைத்த வேஷ்டி, சிறுவர்களுக்கான வேஷ்டி உள்ளிட்ட தயாரிப்புகள். நம் பாரம்பரியம், கலாச்சாரம் மீதான ஈர்ப்பும் ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளும் இதற்குக் காரணம். இது இன்னும் அதிகரிக்க வேண்டும். பெரும் நிறுவனங்கள் பெறும் வருவாயை போல நெசவாளர்களும் பெற்று மகிழ வேண்டும். எனவே நெசவாளர்களுக்கு கைக்கொடுக்கும் வகையில் இந்தாண்டு தீபாவளியை நாம் அனைவரும் பாரம்பரிய ஆடைகளை வாங்கி உடுத்தி நெசவாளர்களோடு கொண்டாடுவோம். நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

 

வேஷ்டியைக் கட்டுவோம்! தீபாவளியைக் கொண்டாடுவோம்! கைத்தறி நெசவாளர்களுக்கு கைக்கொடுப்போம்!

 

 

Next Story

சர்வோதய சங்க ஊழல்! சிக்குகிறார் சிவக்குமார்! -'அதிகாரிகளின் அந்த தேவைகளை பூர்த்தி செய்தது அம்பலம்'

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!! "Ambalam fulfilled those requirements of the authorities"

கோவை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் நடந்துள்ள பல கோடி ரூபாய் ஊழலை மத்திய அரசின் கேவிஐசி துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்க, அவர்களுக்கு சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார்  மது மற்றும் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து குஷிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கோவை மாவட்டம் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 28 கிளைகள் உள்ளன. கிராமப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், அவர்களுக்கு பட்டு பாவு, ஊடு நூல் கொடுத்து, அதன்மூலம் பட்டுச்சேலைகள் நெய்து, விற்பனை செய்வதுதான் சர்வோதய சங்கங்களின் முதன்மைப் பணி ஆகும். 

மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எனப்படும் கேவிஐசி துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த சங்கங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், கோவை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பல கோடி ரூபாய் ஊக்கத்தொகையை போலி நெசவாளர்கள் பெயரில் வரவு வைத்து, மோசடி செய்ததாக புகார்கள் கிளம்பின. 

இதுகுறித்து சிபிஐ போலீசார், கடந்த இரண்டு ஆண்டாக நடத்திய தீவிர விசாரணையில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் ஜக்கம்பட்டி கிளையில் மட்டும் முதல்கட்டமாக 3 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை உறுதிப்படுத்தி இருக்கிறது. 

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமார்தான் இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டிருப்பதும், ஜக்கம்பட்டி கிளை முன்னாள் மேலாளர் பாலாஜி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அத்தராம்பட்டியைச் சேர்ந்த பட்டுச்சேலை புரோக்கர்கள் சதாசிவம், கவுதமன், இளையராஜா ஆகியோர்  உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது, இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!! "Ambalam fulfilled those requirements of the authorities"

இதுகுறித்து 2023, டிச. 12 - 15 மற்றும் டிச. 20 - 22 நாளிட்ட நக்கீரன் இதழ்களில் விரிவாக எழுதியிருக்கிறோம். ஊழல் புகாரில் சிக்கிய சிவக்குமார், சிபிஐ போலீசாருக்கே விபூதி அடிக்கப் பார்த்தது, ஊழலை மறைக்க அதிகாரிகளை மது மற்றும் பாலியல் தேவைகளை கொடுத்து குளிப்பாட்டியது உள்ளிட்ட மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் நக்கீரன் கள விசாரணையில் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக சிபிஐ போலீசார் வட்டாரங்களில் விசாரித்தோம்.

''மோசடி புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக சிபிஐ இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல், எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரை சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி கூறியுள்ளனர். அவரோ, சங்க பொருளாளர் பழனிசாமி, மேலாளர் சுருளிநாதன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளார். 

இதனால் உஷ்ணம் அடைந்த சிபிஐ, 'என்ன செய்வீர்களோ தெரியாது. ஆகஸ்ட் 16ம் தேதி காலை 10:00 மணிக்கெல்லாம் நீங்களே நேரில் ஆஜராக வேண்டும். நீங்கள் வராவிட்டாலோ, மீண்டும் வேறு யாரையாவது அனுப்பி வைத்தாலோ அடுத்த 10 நிமிடத்தில் உள்ளூர் போலீசார் மூலம் உங்களை தூக்கி 'உள்ளே' வெச்சிடுவோம்,' என சிவக்குமாரிடம் செல்போனிலேயே காய்ச்சி எடுத்துள்ளது.

இதனால் 'டரியல்' ஆன சிவக்குமார், கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்துள்ளார். சொன்ன தேதி, சொன்ன நேரத்தில் ஆஜரானார். அன்று மாலை 5:45 மணி வரை துருவி துருவி விசாரித்ததில், அந்த ஏ.சி., அறையிலும் அவருக்கு 'குப்'பென்று வியர்த்துப் போனதாம். சிவக்குமார் யாரையும் தன் இடத்திற்கு வரவழைத்துதான் பேசுவாராம். அவரே நேரில் சென்றது இதுதான் முதல்முறை என்கிறார்கள். 

மோசடிகள் குறித்து சிபிஐ கேட்டதற்கு, 'ஒவ்வொரு ஊழியரும் என்ன செய்கிறார்கள் என நான் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது,' எனக்கூறி உள்ளார். போலி நெசவாளர்களைச் சேர்த்துவிட்ட தாரமங்கலம் சதாசிவத்தை, 'மாஸ்டர் வீவர்' என்று சொல்லி இருக்கிறார். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடிய நிலையில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் மட்டும் எப்படி 58 கோடி ரூபாய்க்கு பட்டுப்புடவை விற்பனை செய்தீர்கள்? எனக்கேட்டு, அவரை சிபிஐ 'லாக்' செய்தது. 

அதற்கு சிவக்குமார், கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்று விற்பனை செய்தோம் எனக்கூறவே, அதற்கான அனுமதி கடிதத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கு உதட்டைப் பிதுக்கியுள்ளார் சிவக்குமார்.  

பட்டு பாவு நூல், ஊடை நூல் சப்ளை இல்லாதபோது, ஜக்கம்பட்டி கிளையில் 160 தறிக்காரர்களுக்கும் மாதம் 6 முதல் 9 பாவு கொடுக்கப்பட்டதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் ஆகும்? என்ற கேள்விக்கும் அவரிடம் பதில் இல்லை. 

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தின் தலைமையகம் மற்றும் கிளைகளில்  இருக்கும் 1000 நெசவாளர்களுமே போலிதான் என்பதை உறுதி செய்திருக்கிறோம். ஜக்கம்பட்டி கிளைக்குத் தேவையான பட்டுக்கூடுகளை எங்கிருந்து வாங்கினீர்கள்? என்று கேட்டதற்கு, அந்தக் கிளை மேலாளர் பாலாஜி வாங்கியதாக சிவக்குமார் கூறியுள்ளார். 

நீங்கள் சொன்னது அனைத்தும் பொய். உண்மையை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் என சிபிஐ குரலை உயர்த்தியபோது, 'சார்... மேலாளர் தப்பு செய்திருந்தால் அவரை கைது செய்து கொள்ளுங்கள்,' என்று பவ்யமாக சொல்லி இருக்கிறார் சிவக்குமார். 

அத்தராம்பட்டி புரோக்கர் சதாசிவம்தான், சிவக்குமாருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார். ஜக்கம்பட்டி கிளையில், ஒரே ஆண்டில் 16 கோடிக்கு விற்பனை நடந்ததாக போலி கணக்கு காட்டியுள்ளார் மேலாளர் பாலாஜி. இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பவும் அவர் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஓடிவிட்டார். 

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!! "Ambalam fulfilled those requirements of the authorities"

கேவிஐசி துறையின் உதவி இயக்குநர்கள் சந்திரபால், சித்தார்த்தன், சதீஸ்குமார், ஹூப்ளி சித்தார்த், கணக்காளர் ஏ.ஜி.சுப்ரமணியன், முன்னாள் மாநில இயக்குநர்கள் தனபால், தன்ராஜ், ஜவஹர், டி.எம்.பாண்டியன், லட்சுமி நாராயணன், நல்லமுத்து, சின்னதம்பி, கணேசன் மற்றும் தற்போதைய மாநில இயக்குநர் பி.என்.சுரேஷ் ஆகியோரும் சிவக்குமாரால் 'பலாப்பலன்களை' அனுபவித்தவர்கள்தான். இதனால் இவர்கள் அனைவருமே, சிபிஐ நெருக்கிப் பிடித்தபோதும் கூட சிவக்குமாருக்கு ஆதரவாகவே செயல்படுவதாகச் சொல்கின்றனர்.  

ஒரு கைத்தறி நெசவாளரால் வாரத்திற்கு அதிகபட்சமாக இரண்டு பட்டுப்புடவைகள்தான் நெய்து முடிக்க முடியும். ஆனால் ஒவ்வொருவரும் வாரம் 10 புடவைகளை நெய்ததாகவும், நெசவுக்கூலியாக புடவைக்கு 3300 ரூபாய் வீதம் வழங்கியதாகவும் போலி கணக்கு எழுதியிருப்பதையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,'' என்கிறது சிபிஐ வட்டாரம்.

விசாரணையின்போது, 2021, செப். 11 - 14 நாளிட்ட நக்கீரன் இதழில், சர்வோதய சங்க ஊழல் குறித்து முதன்முதலில் வெளியான கட்டுரையில் இருந்தும் குறிப்புகள் எடுத்துக் கொண்டதாக சோர்ஸ் தரப்பில் நமக்குச் சொல்லப்பட்டது.  

சர்வோதய சங்க முன்னாள் ஊழியர்களிடம் பேசினோம். 

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!! "Ambalam fulfilled those requirements of the authorities"

'ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் இருந்து 2012 முதல் 2022 வரையிலான அனைத்து 'கேஷ் வவுச்சர்', எடை ஏடு, டே புக், தணிக்கை ஆவணங்களை சிபிஐ போலீசார் விடிய விடிய ஆய்வு செய்தனர். 2012-2013ம் ஆண்டில் மட்டும், கேவிஐசி அலுவலக கணக்காளர்கள் மனோகரன், சுப்ரமணி ஆகிய இருவரும் தணிக்கைப் பணிக்காக ஆவாரம்பாளையம் சங்கத்திற்கு வந்து சென்ற வகையில் 13 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பதிவு செய்திருந்ததைப் பார்த்து சிபிஐ டீம் அதிர்ந்து போனது. அவர்கள் இருவரையும் சொகுசு விடுதிகளில் தங்க வைத்து, உயர் ரக மதுபானங்கள், பாலியல் தேவைகளை பூர்த்தி செய்துள்ளார் சிவக்குமார். 

தணிக்கைக்கு வரும் அதிகாரிகளை சொகுசு கார்களில் மூணார், ஊட்டி, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று குளிர வைத்து விடுவார் சிவக்குமார். மும்பையில் இருந்து வரும் கேவிஐசி அதிகாரிகளையும் இதேபோல 'கவனித்து' கவிழ்த்தி இருக்கிறார். இந்த 'கவனிப்புகளால்' கேவிஐசி அதிகாரிகள், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கத்தில் நடந்து வரும் ஊழல்களை கண்டுகொள்வதில்லை.

இது ஒருபுறம் இருக்க, ஜக்கம்பட்டி கிளை மேலாளர் பாலாஜி பட்டுச்சேலைகளை  கொள்முதல் செய்ததற்காக சேலம் தாரமங்கலம் சதாசிவத்துக்கு 7 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவரங்களையும் சேகரித்துள்ளது சிபிஐ. பாலாஜியால் ஜக்கம்பட்டி கிளைக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவரை சிவக்குமார் சிக்க வைக்கப் பார்க்கிறார்,'' என்கிறார்கள் முன்னாள் ஊழியர்கள்.

Sarvodaya Sangh scandal! Sivakumar gets caught!! "Ambalam fulfilled those requirements of the authorities"

ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம், சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க விதிகளின்படி செயலாளர் பதவியில் ஒருவர் அதிகபட்சம் 60 வயது வரை மட்டுமே இருக்க முடியும். ஆனால் சிவக்குமாரோ, சங்க விதிகளை திருத்தம் செய்து, 65 வயது ஆகியும் தன்னை நிரந்தர செயலாளராக அறிவித்துக் கொண்டார். 

தற்போது அவர் 1.80 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார். இதே சங்கத்தில் அவருடைய மனைவி மல்லிகா, மகள் திவ்யபிரபா ஆகியோரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார். இப்படி மொத்த குடும்பமுமே இந்த சங்கத்தை சுரண்டிப் பிழைக்கிறது. 

கோவையில் பல இடங்களில் வீடுகள், நிலபுலன்களை வாங்கிப் போட்டுள்ள சிவக்குமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளை பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்துள்ளதாகவும், வட்டித்தொழில் செய்து வருவதாகவும் சொல்கின்றார்கள். 

இதுகுறித்து ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது ஜாலியாக சிரித்துக் கொண்டே பேசினார். 

''சேலம் தாரமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ மாரிமுத்து, சங்கத்தின் முன்னாள் ஊழியர் முருகேசன் ஆகியோர் என் மீது பொய் புகார் அளித்துள்ளனர். சிபிஐ விசாரணை முடியட்டும் பார்த்துக்கலாம். என்னிடம் பல கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாகச் சொல்வோர் தாராளமாக பங்கு போட்டுக் கொள்ளலாம். 

என் மனைவி, மகள் ஆகியோர் சங்க விதிகளின்படிதான் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகிவிட்ட பிறகு, எப்படி ஊழல் செய்ய முடியும்? பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் பண்ணுவதில்லை. சங்கத்தில் யாராவது கேட்டால் கடன் கொடுப்பேன். நேரம் இருந்தால் ஒருமுறை நேரில் வாங்களேன்,'' என்றார் சிரித்துக் கொண்டே. 

சிபிஐ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சிக்கிக் கொண்டார் சிவக்குமார்' என்று மூன்றே சொற்களில் முடித்துக் கொண்டார். இந்த விவகாரம், சர்வோதய சங்க வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

தீபாவளியில் ‘சியாமா பூஜை’ : காளி வழிபாடு!

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Diwali Shyama Puja 

 

தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் வங்காளத்தில் (கொல்கத்தா) காளி பூஜை மிகப் பிரபலம். நவராத்திரி காலங்களில் கொண்டாடப்படும் காளி பூஜையைப்போல, வங்கத்தில் தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டிலும் வண்ண வண்ணக் கோலங்களிட்டு, வரிசையாக விளக்குகளை அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.

 

இதுவொரு சமூக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திறந்த வெளியில் பெரிய மைதானத்தில் சுமார் இருபது அடி உயரத்தில் நீலநிறக் காளியை எழுந்தருளச் செய்து பூஜை செய்வர். தீபாவளிப் பண்டிகையையொட்டி ஐப்பசி அமாவாசையன்று நள்ளிரவில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி காளி பூஜையில் கலந்துகொள்வார்கள். அன்றிரவு முழுவதும் பட்டாசு வெடிகள் வெடிக்கும். வண்ண வண்ண வாண வேடிக்கைகளும் நடைபெறும். இந்த வாணவெடிகளின் ஒளியில் அமாவாசை இரவு பகல்போல் பிரகாசமாகத் திகழும். இதுகுறித்து அவர்கள் கூறும் காரணம் சற்று வித்தியாசமானது.

 

(தை- ஆனி மாதங்கள்) பகல் காலம்; தட்சிணாயனம் (ஆடி- மார்கழி மாதங்கள்) இரவுக் காலம் என்று இரு பிரிவுகளாகக் குறிப்பிடப்படுகிறதோ அதேபோல் மறைந்த முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) ஐப்பசி அமாவாசையன்று இரவு நேரம் துவங்குகிறதாம் அதாவது மறைந்த ஆத்மாக்களுக்கு அன்று முதல் (ஐப்பசி அமாவாசை) ஆறு மாதங்கள் தூக்கத்தைத் தரும் இரவுக் காலமாகக் கருதப்படுகிறது. இதனால் வீடுகளில் வரிசையாக அலங்கரிக்கப்படும் தீபங்களும், உயரமான இடத்தில் ஏற்றிவைக்கும் பெரிய அளவிலான தீபங்களும் இரவில் வழி தெரியாமல் தவிக்கும் பிதுர்களுக்கு வழிகாட்டுகிறதாம். அதனால்தான் உயரமான மூங்கில் கம்பங்களை ஊரின் பல இடங்களில் நட்டு, அவற்றின் உச்சியில் தீபமேற்றி ‘ஆகாச தீபம்' அமைக்கும் வழக்கம் உள்ளது. இன்றும் இந்த வழக்கம் வங்க கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நடைபெறும் காளி பூஜையால், வரவிருக்கும் ஆபத்துகள் தவிர்க்கப்படுகிறதாம். அந்தநாளில் காளி தேவியை பயபக்தியுடன் பிரார்த்தனை செய்வதால் வருடம் முழுவதும் எந்தவித ஆபத்துகள், தடைகள் நேராவண்ணம் காளிதேவி காப்பாற்றுவதுடன், நல்லதே தருவாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும். ஆரோக்கியமுடனும், வளமுடனும் வாழ காளிதேவி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

 

அனைவரும் ஒன்றுகூடி வழிபடும் காளிதேவியின் மூர்த்தங்கள் நீலநிறத்தில் அமைந்திருக்கும். இந்தக் காளி, சாந்தமான திருமுகத்துடன் காட்சியளிப்பாள். நவராத்திரிக் காலங்களில் வழிபடப்படும் காளி கறுப்பு நிறத்தில் காட்சி தருவாள். முகத்தில் சற்று உக்கிரம் தெரியும்.

 

இதனை ‘சியாமா பூஜை' என்று போற்றுவர். இந்த பூஜையே வங்காளத்தில் தீபாவளியாகும். அன்று விடியற்காலையில் நீராடி, புத்தாடை அணிந்து வீடுகளிலும் பூஜை செய்வர். ஐந்து நாட்கள் கழித்து மைதானத்தில் எழுந்தருளச் செய்திருக்கும் பெரிய காளியின் திருவுருவை அருகிலுள்ள நீர்நிலையில் விசர்ஜனம் செய்வர்.

 

- டி.ஆர். பரிமளரங்கன்