Skip to main content

‘திக்திக்’ தீபாவளி! குட்டி ஜப்பான் அல்ல! குட்டி சீனா! -சீனப் பட்டாசுகளால் சிவகாசிக்கு களங்கம்!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
fire works

 

‘சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம். இவர்களின் குற்றச்சாட்டு என்னவென்றால்,  ‘அதிக அளவில் கள்ளத்தனமாக இந்தியாவில் சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன’ என்பதுதான். 
 

நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர் “சீனப் பட்டாசுகள் என்றால் சீனாவில் தயாராவது என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. சீனாவிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, அந்த நாட்டில் உபயோகிக்கும் கெமிக்கலை வைத்து, அதே சீனப் பட்டாசுகளை சிவகாசியில் தயாரிக்கிறார்கள். பட்டாசுத் தயாரிப்பில் உபயோகிக்கவே கூடாதென்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட கெமிக்கலைப் பயன்படுத்தி,  கள்ளத்தனமாக சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், சீனப் பட்டாசுகள் தயாராகின்றன. இந்தப் பட்டாசுகள் குறிப்பிட்ட சில வட மாநில வாடிக்கையாளர்களுக்கு சத்தமில்லாமல் அனுப்பப்பட்டு வருகின்றன.” என்று தான் நேரில் பார்த்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 
 

சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பனிடம் இதுகுறித்துப் பேசினோம். “சிவகாசியில் சில பட்டாசு ஆலைகள் சீனப் பட்டாசுத் தயாரிப்பில் இறங்கியிருப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. ஆனாலும், தடை செய்யப்பட்ட கெமிக்கலை அவர்கள் உபயோகிப்பது குறித்த ஆதாரம் இல்லாததால், உரிய முறையில் புகார் அளித்து, குறிப்பிட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையில் உடனே இறங்க முடியவில்லை. சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் தடை உள்ளது. சீனப் பட்டாசுகளை இந்தியாவிலேயே தயாரிப்பது குற்றமா? இல்லையா? என்பதற்கு பதில் இல்லை. அதனால்,   வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையிடம்,  தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம்.” என்றார். 
 

fire works


 

புதுச்சேரியில் சீனப் பட்டாசு விற்பனைக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் போராடியிருக்கும் நிலையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் நம்மிடம் “பாப் பாப், கோல்டு பைரோ, கான்பெட்டி, மேஜிக் ட்ரிக் சோட்டா பீம், ஆங்ரி பேர்ட்ஸ் என்ற பெயர்களில் சீனப் பட்டாசுகளை சிவகாசியிலேயே சில பட்டாசு ஆலைகள் தயாரிக்கின்றன. இந்தியாவில் பெட்டிக் கடைகளிலிருந்து பேன்சி ஸ்டோர்கள் வரை இதனை விற்கின்றன. ‘இது பட்டாசு கிடையாது; மாசு ஏற்படாது.’ என்று அந்தப் பட்டாசுப் பெட்டிகளில் அச்சிட்டிருக்கின்றனர். அதில்,  உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயரோ, ஊர்ப் பெயரோ, எதுவும் இல்லை. பாப் பாப் ரக பட்டாசுகள் கீழே போட்டாலே வெடித்து விடக்கூடியவை. தவறி காலில் மிதிபட்டாலோ, கையால் அழுத்தம் தந்தாலோ வெடித்துவிடும். இந்த சீனப் பட்டாசுகளில், தடை செய்யப்பட்ட கெமிக்கல்களான பொட்டாசியம்  குளோரேட், சில்வர் பல்மினேட்  போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.  அபாயகரமான இந்தப் பட்டாசுகளை, குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டுப் பொருள் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். பல நெருக்கடிகளுக்கு இடையே,  வெகு சிரமப்பட்டு,  பட்டாசுத் தொழிலை சிவகாசியில் நடத்தி வருகிறோம். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தொழிலை சீனப் பட்டாசுகள் ஒரேயடியாக அழித்துவிடும் என்பதாலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதாலும், போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்..” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் “உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள ஊராக இருந்ததால் சிவகாசியை குட்டி ஜப்பான் என்று புகழ்ந்தார் நேரு. அந்த நற்பெயரை இழந்து ‘குட்டி சீனா’ ஆகிவிடுமோ? என்ற கவலை வந்துவிட்டது. தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ளன. திக்திக் என்று மனது அடித்துக்கொள்கிறது.” என்றார்.   
 

பட்டாசு விஷயத்தில், நம் விரலைக்கொண்டே, நம் கண்களைக் குத்துவதற்கு  ‘ரூட்’ போட்டுக் கொடுத்திருக்கிறது சீனா. பணத்தின் மீதான பேராசையில், சிவகாசியிலேயே சிலர், தகாத இந்தக் காரியத்தில் ஈடுபடுகின்றனர். மக்களின் உயிர்ப் பிரச்சனை என்பதால், மத்திய-மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டும் பட்டாசு ஆலைகளில்  உடனடியாக ஆய்வு மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.