Skip to main content

ப்ளூ சட்டை, ஸ்மைல் சேட்டை, கோபி-சுதாகர் இன்னும் பலர்... - காவிரி போராட்டத்தில் புதிய டீம்! 

Published on 15/04/2018 | Edited on 15/04/2018

தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும், அதைப் பொதுமக்கள் கையில் எடுத்துவிட்டார்கள் என்று தெரிந்தாலோ, அல்லது பொதுமக்கள் அந்த பிரச்சனையால் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தால் பல்வேறு தரப்பும் அதற்காக அடையாள போராட்டங்களை நடத்துவதுண்டு. சமீப காலமாக அந்தப் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஜல்லிக்கட்டுக்கு பொது மக்கள் காட்டிய பெரும் எழுச்சியின் விளைவு இது.

 

digital media



அரசியல் கட்சிகள், அமைப்புகளைத் தாண்டி வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கம் ஆகியவை இதில் அடக்கம். அந்த வகையில் மக்களுக்கு நாளுக்கு நாள் நெருக்கமாகிக் கொண்டிருக்கும் ஒரு அணியும் புதிய சங்கத்தை உருவாக்கி மக்கள் பிரச்சனைக்காக போராட்டத்தை நடத்தியுள்ளது. சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளும் சேர்ந்து பெரும் போராட்டம்  நிகழ்த்திய  அன்று தான் இவர்களின் போராட்டமும் நடந்தது.   

யூ-ட்யூப் சேனல் போன்ற ஆன்லைன் மீடியாக்களை சேர்ந்தவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் மீடியா சங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரியும் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

gopi

கோபி
 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ப்ளூ சட்டை மாறன், கோபி-சுதாகர், பிரசாந்த், விக்னேஷ் உள்ளிட்ட பல யூ-ட்யூப் பிரபலங்கள் மற்றும் விஜேக்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் சினிமா விமர்சனத்தில் பிரபலமானவரும் இந்த டிஜிட்டல் மீடியா சங்கத்தின் தலைவருமான 'ப்ளூ சட்டை' மாறன் பேசுகையில், "எங்களுடைய நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பலரும், 'ஏன் நீங்கள் மக்கள் பிரச்சனையை பேசக்கூடாது?' என்று கேட்டார்கள். இந்த டிஜிட்டல் மீடியா சாதாரணமான ஒன்றல்ல, ஒரே க்ளிக்கில் கோடி பேர்களை ஒரு விஷயத்தை கவனிக்க வைக்கும் வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது. அதைக் கொண்டு மக்கள் பிரச்சனைகளைப்  பேசத் தயாராகியிருக்கிறோம். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணிக்குத்தான் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தார்கள். அதுவும் ஒரு மணி நேரத்திற்குதான். ஏன் ஒரு மூன்று மணி நேரம் கொடுத்திருக்கலாமே? எங்கள் மீது யாருக்கு என்ன பயமோ? இருந்தாலும் இது வெறும் தொடக்கத்தோடு முடிந்துவிடாது. கண்டிப்பாக மக்கள் விஷயங்களில் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

'பரிதாபங்கள்' கோபி பேசுகையில், "நாங்க சின்ன வயசுல இருந்து பார்த்துட்டோம். எல்லாரும் கூட்டணி வைக்கிறாங்க, தீர்வு தர சொல்றாங்க. இதெல்லாம் கேட்டு காது புளிச்சுப்போச்சு. தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று தெரிஞ்சுக்க நீங்க நெட்ல சவுத் ஆப்பிரிக்கால இருக்க கேப் டவுன் அப்படிங்கிற இடத்த பத்தி படிச்சுப் பாருங்க, தண்ணீரோட அவசியம் தெரியும். ஐபிஎல் போங்க, அது உங்க விருப்பம். ஆனா இவ்வளவு நாள் எந்த கட்டுப்பாடும் இல்லை. இப்போ ஜட்டி கூட கருப்பா அணியக் கூடாதாம். நான் கேட்கிறேன்,  நான் என்ன கலர் உள்ளாடை அணியனும்னு என் அம்மா அப்பாவே சொல்ல முடியாது, இவங்க யாரு? மொபைல் போன் எடுத்துட்டு வரக் கூடாதாம். கல்லூரிக்கு மொபைல் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொன்னாவே கேட்கமாட்டோம். இதுல ஐபிஎல்க்கு மொபைல் எடுத்து  வரக்கூடதாம்.

 

prashanth

பிரசாந்த்

பொருளாளர் 'ஸ்மைல் சேட்டை' விக்னேஷ், "ஐபிஎல் மேட்ச்க்கு உள்ள போறவங்கள நெனச்சு பயப்படுறோம். கருப்பு உள்ளாடைக்கு தடையாம். இப்போலாம் பேன்சி ஸ்டோர்ல கூட கருப்பு ரிப்பன், கருப்பு பலூன் விக்கக்கூடாதாம். ஏன்னா மோடி வரும்போது அதை  காட்டி எதிர்ப்பு தெரிவிப்போமாம். அப்டினா எரும கருப்புதான? நாங்க 10 எருமைய வரிசையா மேச்சிட்டு போனா தடுக்க முடியுமா? எல்லார் வாயையும் மூடிறலாம், உள்ள கமெண்ட்ரில இருக்காரு எங்காளு. அவர் வாய மூட முடியுமா? ரெண்டு வார்த்தை காவிரி பத்தி பேசமாட்டாரா? கண்டிப்பா ஜல்லிக்கட்டு மாதிரி இதுவும் நடக்கும்" என்றார். அவர் குறிப்பிட்ட கமென்டேடர் ஆர்.ஜே.பாலாஜி சென்னையில் அன்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் பணியாற்ற மறுத்து அதற்கான காரணத்தை விளக்கி வீடியோவும் வெளியிட்டார்.   

போலீஸார் அனுமதிப்படி ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த கண்டன போராட்டத்தை கோஷங்களுடன் நிறைவு செய்தனர். இந்த புதிய சங்கத்தின் போராட்டமும் ஒரு அடையாளமாக மட்டும் நின்றுவிடாமல், வேறு நோக்கங்களுக்காக சென்று விடாமல் மக்களுக்கானதாக தொடர வேண்டும். தொடருமா என்று பார்ப்போம்.    

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.