Skip to main content

தமிழ்நாட்டில் கலவர அரசியலை முன்னெடுக்கிறதா இந்துத்துவ அமைப்புகள்!!!

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தனித்துவமானது. பிரச்சாரத்திலும் சரி, வாக்குறுதிகளிலும் சரி இந்தியா முழுமைக்கும் ஒரு அரசியல் வேண்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டும் வேறொரு அரசியல் செய்யவேண்டும்.

 

periyar

 

எடுத்துக்காட்டிற்கு இந்தியா முழுமைக்கும் இந்து மதத்தையோ, இந்துக்கடவுள்களையோ, இந்துமத பழக்கவழக்கங்களை வைத்தோ அரசியல் செய்துவிடலாம். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த அரசியல் எடுபடாது. இந்த தனித்துவத்தை உடைப்பதற்கு பல தேசிய கட்சிகளும்கூட முயற்சி செய்கின்றன. குறிப்பாக வன்முறை பிரச்சாரத்தை மேற்கொள்ள சில இந்துத்துவ கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. 
 

நாகாலாந்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டபோது, எச்.ராஜா லெனின் சிலை உடைக்கபட்டதுபோல் தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனப்பேசினார். இதைத்தொடர்ந்து அது மிகுந்த சர்ச்சையாகி போராட்டக்களமானது. இதுபோலவே தொடர்ந்து அவர் பல கருத்துகளை தெரிவித்துவந்தார். அதுபோலவே தற்போதும் நடந்துள்ளது. முன்பு ஒருமுறை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, புராணத்திலுள்ள கிருஷ்ண அவதாரம் குறித்து பேசினார். அதை இப்போது பரப்பி சர்ச்சைக்குள்ளாக்கினர்.
 

periyar


கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேச வீரமணி வந்திருந்தார். அப்போது அங்கிருந்த இந்து முன்னணியினர் மேடைமீது கற்களையும், செருப்பையும் வீசி எறிந்தனர். இதில் இருவர் காயமுற்றனர். அதைத்தொடர்ந்து மர்மநபர்கள் அறந்தாங்கியிலுள்ள பெரியார் சிலையை உடைத்தனர். தற்போது வீரமணி சென்ற காரில் கற்களை எறிந்துள்ளனர். 
 

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள்தான் ஆட்சியிலிருந்து வருகின்றன. தேசிய கட்சிகள் எவ்வளவு முயன்றும் அது பலிக்கவில்லை. இந்த திராவிட கட்சிகளுக்கு மூலமாக இருப்பது பெரியாரும், திராவிடர் கழகமும் இருக்கிறது. ஒரு இடத்தின் பலமான நம்பிக்கையை உடைத்து அதன்மூலம் அந்த இடத்தில் பாஜக காலூன்ற தொடங்கும், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பலமான நம்பிக்கை பெரியாரும், திராவிட கருத்துகளும்தான். ஒருவேளை அதனால்தான் அதன்மீது தாக்குதல் நடத்துகிறார்களோ? ஒருவேளை வடநாடுகளில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், லெனின் சிலை உடைப்பு போன்று இங்கும் பிரச்சாரம் நடத்துகிறார்களோ?  என்றும் கேள்வியெழுந்துள்ளது.

 

 

 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.