Skip to main content

தடுமாறும் தமிழ்நாடு அரசு! ஒவ்வொரு நிகழ்விலும் இரட்டை முடிவு... -ஆளூர் ஷா நவாஸ் கட்டுரை

Published on 14/04/2020 | Edited on 15/04/2020

கட்டுரை: ஆளூர் ஷா நவாஸ்

கரோனா நோய் தொற்று, நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஜனவரி இறுதியிலேயே வந்துவிட்டது. பிப்ரவரி 3-ஆம் தேதியே கரோனாவை  மாநிலப் பேரிடராக கேரளா அரசு அறிவித்துவிட்டது. அதன்பிறகு ஒரு மாதம் கடந்த நிலையில், மார்ச் இரண்டாவது வாரம் வரையில்கூட இதை ஒரு பெரிய பிரச்சனையாக தமிழ்நாடு அரசு கருதவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நடந்து வந்தது. கரோனாவின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய போதும், அரசு அதை மேம்போக்காகவே அணுகியது.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



கரோனா தொற்று குறித்து அச்சம் தெரிவித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியபோது, ''கரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. வயதானவர்களை எளிதில் தாக்கும் என்பதால், 70 வயது கடந்துவிட்ட துரைமுருகன் அச்சப்படுகிறார் போல!'' என்று கிண்டல் செய்து சிரித்தபடி பேசினார் முதல்வர். பின்னர், அதே முதல்வர் அடுத்த வாரமே ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது. 

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



ஊரடங்கை அறிவித்த பிறகும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஊரடங்கிற்கு ஒரு வாரம் முன்பே, சட்டமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தன. ஆனாலும் பிடிவாதமாக நடத்தியது அரசு. வேறு வழியின்றி கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன எதிர்க்கட்சிகள். எனினும், தொடர்ந்து நடந்தது சட்டமன்றம். பின்பு ஓரிரு நாளிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கூட்டத்தொடரை முடித்து வைத்தது அரசு.
 

 nakkheeran app



ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், +2 தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்வு நடந்தே தீரும் என நடத்தியது அரசு. ஆனால், பேருந்துகள் இல்லாததாலும், கரோனா அச்சம் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதவே வரவில்லை. வராதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று வேறு வழியின்றி அறிவித்தது அரசு. நடத்தப்பட்ட தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தவும் முடியாத நிலையில் அந்தப் பணியையும் ஒத்தி வைத்தது அரசு. ஊரடங்கு தொடர்ந்தாலும் 13 வகையான தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று திடீரென அறிவிப்புச் செய்தது அரசு. பின்பு சில மணித்துளிகளிலேயே அந்த அறிவிப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



''தன்னார்வலர்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் என யாரும் பொதுமக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்யக்கூடாது'' என்று தடை விதித்தது அரசு. அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக. இதையடுத்து, தமது அறிவிப்பை திரும்பப் பெற்று விளக்க அறிக்கை கொடுத்தது அரசு. இதற்குமுன் வந்த பேரிடர்களிலிருந்து பெருமளவில் மக்களை மீட்டது தன்னார்வலர்கள்தான். அப்படியிருக்க, இதுவரை வந்த பேரிடர்களிலேயே மனித சமூகம் கண்டிராத பேரிடராக உள்ள கரோனாவிலிருந்து மக்களை மீட்க அரசால் மட்டுமே முடியுமா? தன்னார்வலர்களை அனுமதித்தால், அதன்மூலம் கரோனா பரவிவிடும் என்று அரசு அச்சப்படும் எனில், காய்கறி கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே களத்தில் தானே நிற்கின்றனர்.

அவர்கள் மூலமும் பரவ வாய்ப்பு உண்டே? அதற்காக மனித இயக்கமே இல்லாமல் அனைவரும் முடங்கியா உள்ளனர்? இயங்க வேண்டியவர்கள் இயங்கினால்தான் ஒட்டுமொத்த மக்களையும் காக்க முடியும். அந்த வகையில், தன்னார்வலர்களின் இயக்கம் இந்த நேரத்தில் முக்கியமானது. அதை தடுப்பது மனித விரோதச் செயல். நோய் தொற்று பரவாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு என்ன வழிமுறையோ அதே முறையில் தன்னார்வலர்களையும் அனுமதிக்க வேண்டும்.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



அதுபோல், அத்தியாவசிய பொருள்களை மக்களுக்குச் சேர்ப்பதில் வணிகர்களின் பங்கு முதன்மையானது. வணிகர்களுக்கு சரக்குகள் தடையின்றி வருவது முக்கியமானது. இதில், வணிகர் அமைப்புத் தலைவர்களை அழைத்து தமிழ்நாடு அரசு கலந்தாய்வு செய்யவே இல்லை. விக்கிரமராஜா தொடர்ந்து வேண்டுகோள் வைத்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அதுவும் இரண்டுவாரங்களுக்குப் பிறகு. ஆனால், தலைமைச் செயலகத்தில் இத்தகைய சந்திப்பே இல்லை. மதத் தலைவர்களை அழைத்துப் பேசிய அரசு, வணிகர் சங்க தலைவர்களையோ, தொழிலாளர், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளையோ அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவுகள் எடுக்கவில்லை.

டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களை 100 விழுக்காடு கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் பகுதிகளையும் தனிமைப்படுத்தி, அனைவரையும் பரிசோதித்ததனால் அவர்களில் யாருக்கு நோய்த் தொற்று என்பது தெரியவந்தது. அவர்களை முழுமையாக சோதித்ததுபோல், தமிழ்நாட்டில் வேறு எங்கெல்லாம் எப்படியெல்லாம் யாருக்கெல்லாம் பரவியுள்ளது என்பது பரிசோதித்தால்தானே தெரியவரும்? அப்படி ஒரு பரந்து பட்ட அளவில் பரிசோதனை நடத்தப்படாமல், இவ்வளவுதான் கரோனா எண்ணிக்கை என்று சொல்வது அபத்தம். அப்படி பரந்த அளவில் பரிசோதனை செய்ய வேண்டுமெனில், பரிசோதனை கருவி அவசியம். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தருவதாகச் சொன்ன அல்லது தந்துவிட்டதாகவே எச்.ராஜா சொன்ன அந்த பரிசோதனை கிட்கள் எங்கே? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கருவிகள் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டன என்றால் அது ஏன்? மத்திய அரசை நோக்கி இது குறித்து கேள்வி எழுப்பாமல் மாநில அரசு கள்ள மெளனம் காப்பது ஏன்? 

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி வேண்டுமென்று முதல்வர் கடிதம் எழுதி பல நாட்கள் ஆகியும் மோடி அரசு உரிய நிதியை வழங்கவில்லை. கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதியை கொடுத்து, தமிழ்நாட்டுக்கு சோளப்பொரி போட்டு வஞ்சித்த பின்பும், அதை கண்டிக்கவோ; எதிர்த்து குரல் எழுப்பவோ; குறைந்தபட்சம், ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பாவோகூட இந்த அரசால் முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவைத்துள்ளது மத்திய அரசு. இதனால், தமிழ்நாட்டைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் நம் மாநிலத்திற்கு செய்யப்படவிருந்த மேம்பாட்டுப் பணிகள் தடைபடும். இதைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை எடப்பாடி அரசு. அதிமுக என்னும் கட்சியும் இதை கண்டிக்கவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடைசிவரை எதிர்த்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொண்டது இந்த அரசு. ஜி.எஸ்.டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொண்டதாக காரணம் சொன்னார் ஓ.பி.எஸ். ஆனால், அதே ஓ.பி.எஸ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, ஜி.எஸ்.டி இழப்புத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று வருந்தினார். ஆக, மத்திய அரசால் ஏமாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி தொகையும் வழங்கப்படாமல் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஜி.எஸ்.டி இழப்புத் தொகையை தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கேள்வி கேட்க துணிவில்லாமல், எதிர்க்கட்சிகளிடம் கோபத்தைக் காட்டுகிறது எடப்பாடி அரசு.

பிற மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்ட பிறகும், தமிழ்நாடு அரசு மத்திய அரசு அறிவிக்கட்டும் என காலம் கடத்தியது. ''இவ்வளவு எஜமான விசுவாசமா?'' என பலரும் கேள்விகளால் துளைத்த பிறகு, கடைசி நேரத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்புச் செய்யப்பட்டது. ''இது, ஒரு மாநிலப்  பிரசச்னை அல்ல; ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. எனவே, பிரதமர் அறிவிப்பார்!'' என்று சொன்ன தமிழ்நாடு அரசு, பின்பு தான் சொன்ன கருத்தை தானே மாற்றிக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டது. எல்லாவற்றிலும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

''மருத்துவ உபகரணங்களை மாநில அரசு நேரடியாக வாங்கக் கூடாது. மத்திய அரசிடம் இருந்து தான் வாங்க வேண்டும்; மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு நிதியளித்தால், அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படாது!'' என்றெல்லாம் மத்திய அரசு சொல்கிறது. 

இப்படி மத்திய அரசு தொடர்ந்து மாநில அதிகாரங்களை பறித்துக் கொண்டிருப்பதை பற்றி மூச்சு விடுவதில்லை தமிழ்நாடு அரசு. நெருக்கடி நிலையின்போது, மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்குப் போனதுபோல், இப்போது கரோனா பேரிடர் காலத்தில் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது. மாநில சுயாட்சியின் பிறப்பிடமான தமிழ்நாடோ அமைதியாய் இருக்கிறது.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



''கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட எவ்வித அடையாளங்களையும் வெளியிடக்கூடாது'' என்னும் மருத்துவ நெறியை மதித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் அன்றாடம் ஊடகங்களிடம் வெளிப்பட்டு வந்தார். அப்படியிருக்க, திடீரென அவர் அமைதியானது ஏன்? சுகாதாரத் துறை செயலாளர் ஊடகங்களில் பேசும் போது, முதலில் டெல்லி மாநாடு என்று பிரித்துச் சொன்னது ஏன்? பின்பு அதே செயலாளர் டெல்லி மாநாடு என்ற பதத்தை தவிர்த்து, ஒரே தொற்று என்று சொன்னது ஏன்? அந்த ஒரே தொற்று என்ற வார்த்தையையும் தலைமைச் செயலாளர் தவிர்த்தது ஏன்? ஒரு அறிவிப்பில் கூட ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், இனியேனும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும் அரசு.

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.