Skip to main content

புளூட்டோவ கிரகமா மாத்துங்க, அயர்ன்மேன காப்பாத்துங்க, பசித்தால் சாப்பிட வேண்டாமா... குழந்தைகளின் அட்ராசிட்டிஸ் 2018

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
children

 

2018 சிலருக்கு ரணகளமாக போயிருக்கும், சிலருக்கு அதகளமாக போயிருக்கும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரை எல்லா நாட்களுமே குதுகலம்தான். 2018ல் குழந்தைகள் செய்த சில வித்தியாசமான செயல்கள்...
 

2006ம் ஆண்டு புளூட்டோ கிரகமல்ல எனக்கூறி அதை சூரியக்குடும்பத்திலிருந்து நீக்கியது சர்வதேச வானியல் கூட்டமைப்பு. இதை எதிர்த்து அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி காரா ஓ’கானர், மீண்டும் புளூட்டோவை ஒரு கிரகமாக அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கும் கடிதத்தை எழுதி நாசாவுக்கு அனுப்பியுள்ளார். எண்ணத்திலும், வார்த்தைகளிலும் மழலைமொழி மாறாமல் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ‘நான் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று, புளூட்டோவை மீண்டும் கொண்டுவாருங்கள் என்ற வரியுடன் நிறைவடைந்தது. அது நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். புளூட்டோவை மீண்டும் ஒரு கிரகமாக்குங்கள். நான் பார்த்த வீடியோ ஒன்றில் கடைசி கிரகமாக புளூட்டோ இருந்தது. அதில் இருந்தது போலவே, புளூட்டோவை பூமி, புதன், செவ்வாய் போல மீண்டும் ஒரு கிரகமாக அங்கீகரியுங்கள். பூமியோ, இங்கிருக்கும் யாரோ குட்டி கிரகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிடக்கூடாது’ என தெரிவித்திருந்தார். காராவிற்கு எதிர்காலத்தில் நாசாவில் பணிபுரியவேண்டும் என்பதே கனவு என்பதால், நாசாவிற்கே தனது கடிதத்தை அனுப்பி இருக்கிறார்.
 

space


 

இந்தக் கடிதத்திற்கு நாசாவில் இருந்து பதிலும் கிடைத்துள்ளது. நாசா இயக்குனர் ஜேம்ஸ் கிரீன் தனது பதில் கடிதத்தில், ‘புளூட்டோ குளிராக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், புளூட்டோவிற்கு இதயம் இருக்கிறது என்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? இந்த கண்கவர் உலகில் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புளூட்டோவைப் பற்றி நாம் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நீ புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடிப்பாய் என்று நான் நம்புகிறேன். நீ உன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உன் கனவுகளோடு நாசாவுக்கு வா.. நாங்கள் உனக்காக காத்திருக்கிறோம்’ என எழுதியுள்ளார்.


'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் அந்த ட்ரைலரில் அயர்ன் மேன் தனியாக விண்வெளியில் மாட்டிக்கொண்டிருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனை பார்த்த மார்வெல் ரசிகர் ஒருவர் அயர்ன் மேனை காப்பாற்ற உதவுமாறு நாஸாவுக்கு  ட்வீட் செய்திருந்தார். நாசா அந்த டீவீட்டுக்கு, முதலில் அவென்ஜர்ஸ் சென்ற விண்கலத்தின் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுங்கள், அப்படி தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், பூமியிலிருக்கும் எங்கள் குழுவுடன் இணைந்து அவர்கள் விண்கலத்தை ஸ்கேன் செய்து காணாமல் போனவரை கண்டுபிடிக்கலாம் என கூறியுள்ளது. அதன்பின் அந்த படத்தில் அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டௌனி நாசாவின் இந்த டீவீட்டுக்கு தற்பொழுது பதிலளித்துள்ளார், அதில், 'நாசாவில் உள்ளவர்களை தெரிந்து வைத்திருப்பது எப்பொழுதும் நல்லதே' என கூறியிருந்தார்.
 

இதுதவிர அடிக்கக்கூடாது குணமாக சொல்லணும், பயந்துட்டேன், அப்பாகிட்ட சொல்லிருவேன், பசித்தால் சாப்பிட வேண்டாமா இவ்வாறாக பல மழலை வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாயின. இப்படியாக குழந்தைகளின் மழலைக்கும், அப்பாவிதனத்திற்கும் மக்கள் மயங்கிய நாட்களும் இந்தாண்டில் வந்து போயின.      

 


 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.