Skip to main content

பிரதமர்-கவர்னர் சந்திப்பு!  பதட்டத்தில் எடப்பாடி!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

                                

modi


 

பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து விவாதித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! இந்த சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பில் ஏகத்துக்கும் பதட்டம் தெரிகிறது. 

 

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை கட்டுவதற்கான திட்ட வரையறைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முடிவை கண்டிக்கும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானத்தை கடந்த 6-ந்தேதி நிறைவேற்றியது எடப்பாடி அரசு.
 


மத்திய மோடி அரசை நேரடியாக பகைத்துக்கொள்ளும் வகையில் இதுவரை எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை முதல்வர் எடப்பாடி. ஏன், கடிதம் கூட கண்டித்து எழுதப்பட்டதில்லை. அப்படிப்பட்ட சூழலில், கர்நாடக அரசு கட்டத்துடிக்கும் மேகதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. உடனடியாக இந்த தீர்மானம் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

 

இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (7-ந் தேதி) பிற்பகலில் டெல்லிக்கு விரைந்து பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். 

 

அவரது டெல்லி பயணம் குறித்து விசாரித்தபோது, ’’ மோடி அரசுக்கு தெரிவிக்கும் தீர்மானமாகட்டும், எழுதப்படும் கடிதமாகட்டும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இது வரை வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை எடப்பாடி பழனிச்சாமி. முதன்முறையாக கண்டன வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனை மத்திய அரசு ஜீரணிக்கவில்லை. சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி, மோடியை சந்தித்து வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகளிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால், மத்திய அரசு தன்னைப் புறக்கணிப்பதாக கருதுகிறார் அவர். இந்த நிலையில், தமிழக நலன்களுக்கு எதிரான விசயத்தில் மென்மையானப் போக்கினை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானித்ததன் விளைவுதான் மத்திய அரசை தீர்மான வடிவில் எதிர்க்கத் துவங்கியிருக்கிறார் எடப்பாடி. இதனை மோடி அரசு எதிர்ப்பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் கவர்னரை டெல்லி அழைத்தது.

 

eps



 
தன்னை சந்தித்த கவர்னரிடம், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் ட்ராப்ட் உங்களுக்கு முன்கூட்டி காட்டப்பட்டதா? தீர்மானத்தின் வரிகளைப் படித்துப் பார்த்தீர்களா? என கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு கவர்னர், மேகதாது அணைக்கான ஒப்புதலை தந்த மத்திய அமைச்சகத்தின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்படவிருக்கிறது என முதல்வர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. கண்டனம் தெரிவிப்பதாக என்னிடம் சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார். 

 

இதனையடுத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி. அப்போது, கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமளவுக்கு நிலைமை தமிழகத்தில் இருப்பதையும் சமீபத்தில், 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் விவரித்துள்ளார் கவர்னர்.  மேலும், வைகோ உள்ளிட்ட பலர் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவர்னர். 
 

rajnathwsigh



அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், ராஜ்நாத்தை சந்தித்து விவாதித்துவிட்டு சென்னைக்கு செல்லுங்கள் என கவர்னருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்நாத்தை சந்தித்தார் கவர்னர். இந்த சந்திப்பில், தமிழக அமைச்சர்கள் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு சேகரித்து வைத்துள்ள தகவல்கள், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சு.சாமி கொடுத்துள்ள புகார், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு , 7 பேர் விடுதலை என பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது ‘’ என விரிவாக சுட்டிக்காட்டுகின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 

 

’’எடப்பாடி அரசுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. இனி வரும் நாட்கள் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும்‘’  என்கிறார்கள் தமிழக தலைமைச்செயலக அதிகாரிகள்.  இதற்கிடையே, கவர்னரின் டெல்லி பயணத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்ள டெல்லியிலுள்ள சோர்ஸ்களை அணுகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
 

 

 

 

 


 

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.