Skip to main content

திருத்தப்பட்ட விதிகள்; அன்னபோஸ்ட் எடப்பாடி!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

அதிமுகவின் தலைமை மறைந்த பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்து, பின் ஒருவர் தலைமையில் மீண்டும் அதிமுக இணைவது தொடர்கதையாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. பின்னர் ஜானகி தனது அணியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைத்துவிட்டு அரசியல் வாழ்கையில் இருந்து ஒதுங்கிவிட்டார்.  

 

கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே போன்ற பிரச்சனை அதிமுகவில் தற்போது நிலவி வருகிறது. அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பி.எஸ் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து  தர்ம யுத்தத்தை தொடங்கினார். அதில் கட்சிக்குள் சசிகலா குடும்பத்தின் தலையீடு இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

இதனிடையே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ‘அம்மாவின் இடத்தை நிரப்ப சின்னம்மா நீங்கள்தான் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும்’ என்று மூத்த தலைவர்கள் என பலரும் சசிகலாவின் வீட்டின் முன்பு காத்துக் கிடந்தனர். அவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று பலரும் நினைத்திருந்த தருணத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் சிறைக்கு சென்றார். ஆனால் அதற்கு முன்பு தனக்கான ஒரு நபரை முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்த சசிகலா, அதுவரை தமிழக மக்கள் யாருக்கும் பரிச்சயம் இல்லாத இ.பி.எஸ்ஸை முதல்வராக்கிவிட்டு சிறைக்கு சென்றார். 

 

ad

 

தொடர்ந்து முதல்வரான இ.பி.எஸ், சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும், ஓ.பி.எஸ். வைத்த கோரிக்கைகளான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து கட்சியின் விதியில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்ஸையும், அவருக்கு ஆதரவான 17 எம்.எல்.ஏக்களையும் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதன்படி கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும், துணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போன்று ஆட்சி அதிகாரத்தில் முதல்வராக இ.பி.எஸ்ஸும், துணை முதல்வராக ஓ.பி.எஸ்ஸும் பிரித்துக் கொண்டனர். அதன்பிறகு நடைபெற்ற 4 ஆண்டுகால ஆட்சியில் இருவரும் சேர்ந்தே பயணித்தாலும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் நீயா நானா போட்டி ஏற்படவே கட்சிக்குள் இரட்டை தலைமையால் சில முடிவுகள் தீர்க்கமாக எடுக்க முடியவில்லை என்று கூறி மீண்டும் ஒன்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. 

 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்தனர். கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பி.ஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்ட நிலையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்ப, உடனடியாக மேடையிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படவே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுகவின் பொதுக்குழு கூடும் என அறிவித்தார்.

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

தமிழ்மகன் உசேன் சொன்னபடியே அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி கூடியது. அதன்பிறகு கட்சியின் இரட்டைத் தலைமை பதவிகள் நீக்கப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு ஆர்.பி. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல கட்ட விசாரணைக்குப் பிறகு இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், இ.பி.எஸ் இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட கட்சி இ.பி.எஸ் வசமானது. 

 

AIADMK General Secretary Edappadi Palaniswami

 

உட்கட்சி தேர்தலை நடத்தி புதிய பொதுச்செயலாளரை நான்கு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், தேர்தல் மார்ச் 26 தேதி நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாளே வெற்றி பெற்றவர் யார் என்றும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவரை எதிர்த்து யாரும் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை என்கின்றனர்  எடப்பாடியின் விசுவாசிகள். இதனால் எடப்பாடி பழனிசாமி அன்னபோஸ்ட் முறையில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.