Skip to main content

வெற்றிபெற எடப்பாடி நினைக்கவில்லை... அவரது திட்டமே வேறு... கே.சி.பழனிசாமி அதிரடி..!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

KCP-OPS

 

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சி தலைமை மீது எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், சிட்டிங் எம்எல்ஏ ராஜவர்மன், அமமுகவில் இணைந்துள்ளார். மேலும், பலர் இதுபோன்ற முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், அதிமுகவில் நடக்கும் இந்த விவகாரம் குறித்து நக்கீரனிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார் அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. 

 

அவர் கூறுகையில், ''ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்கியிருக்க வேண்டும். அது ஏற்படுத்தப்படவில்லை என்பது தவறு. தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்த்திருக்க வேண்டும். கூட்டணியில் இந்தக் கட்சி இருக்கிறது என்று பலம் காட்டிவிட்டு, பின்னர் இல்லை என்பது அதிமுகவுக்கு பலகீனம். இந்த இரண்டுமே அதிமுகவுக்கு வரும் வாக்குகளைப் பாதிக்கும். 

 

பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் எதிர் அணிகளுக்குச் செல்லும். வன்னியர் உள்ஒதுக்கீடு கொடுத்ததால், தமிழ்நாடு முழுவதும் வன்னியர் அல்லாத வாக்குகள் பாதிக்கும். சசிகலா ஒதுங்குவதாகக் கொடுத்த அறிவிப்பிற்கு பின்னால், பாஜக மற்றும் இ.பி.எஸ். கொடுத்த அழுத்தம்தான் காரணம் என முக்குலத்தோர் சமுதாயத்தில் அதிமுகவுக்கு எதிரான மனநிலை ஏற்படும். தேவேந்திரகுல வேளாளர் என்ற டைட்டில் கொடுத்ததால் மற்ற சமுதாய வாக்குகள் பாதிக்கும். 

 

அதிமுகவின் குறைந்த வாக்கு சதவீதம் என்று எடுத்துக்கொண்டால் 96ல் 28 சதவீதம் இருந்தது. அப்போது நான்கு தொகுதிகள் இருந்தது. இப்போது வெளியாகும் கருத்துக் கணிப்புகளில் அதிமுகவுக்கு 32 சதவிகித வாக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தவறுகளை சரிசெய்யாததால், தேர்தலில் 25 சதவிகிதம் வாக்குகளாகக் குறையும். இந்த 25 சதவிகித வாக்குகள் என்றைக்குமே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை என என்னைப் போன்றவர்களின் வாக்குகள்தான். இந்த வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கான வாக்குகள் அல்ல. இருபது சதவிகித வாக்கு வங்கியைக் குறைத்தது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியின் சாதனையாக இருக்கும். 

 

மாநிலத்திற்கு எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்திற்கு அமைச்சர்கள். இவர்கள் தங்களுக்கு ஏற்றதுபோல் அடிமையாக இருப்பவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கருத்து வேறுபாடு உள்ளவர்கள், பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்காக தேர்தலை சந்திக்கவில்லை. அவரது திட்டமே வேறு. கட்சியைக் கைப்பற்றுவதற்கு யாரெல்லாம் தேவையோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். சின்னம் தொடர்பான வழக்கில், சட்டமன்றத்தில் இல்லாதபோது சின்னத்தில் போட்டியிட்டவர்களைக் கணக்கு எடுப்பார்கள். அப்போது அந்தச் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் தனக்கு ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரேயொழிய யாரெல்லாம் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தோடு வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. கட்சியைக் கைப்பற்றலாம் என்ற எண்ணத்தோடுதான் வேட்பாளர் தேர்வு, அரசியல் வியூகங்களை வகுத்திருக்கிறார். ஆட்சிக்கு வரவேண்டும் என்ற முனைப்பு இல்லை. இவ்வாறு கூறினார். 

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.