Skip to main content

வேலூர் தேர்தல்.... ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி... துரைமுருகன் திட்டம் தோல்வி...

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள், கிருத்துவர்கள், நாயுடு, பிற சமூகத்தினர் வாக்குகள் என உள்ளன. இதில் பெரும்பாண்மை பலத்தோடு உள்ள சமூகமாக இஸ்லாமியர்கள், முதலியார்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என உள்ளனர். 
 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். 
 

acs - duraimurugan


 

ஏ.சி.சண்முகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் இதே வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் செங்கூட்டுவன், திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகவின் செங்கூட்டுவன் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகம் 3,25,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளரான அப்துல் ரகுமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
 

தாமரைச் சின்னத்தில் நின்றதால்தான் தனக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் நின்றார். இஸ்லாமியர்கள் பாஜக மீது அதிருப்தியில் இருந்ததை கணக்கிட்டு அந்த வாக்குகள் மீது கவனம் செலுத்தாமல் மற்ற வாக்குகள் மீது கவனம் செலுத்தினார். முதலியார், நாயுடு, தலித் மற்றும் பிற சமூக வாக்குகளில் கவனம் செலுத்தினார். 
 

திமுகவினரோ, இஸ்லாமிய வாக்குகளோடு மற்றொரு சிறுபான்மையின வாக்குகளான கிருத்துவ வாக்குகள், வன்னியர் வாக்குகள், தலித் வாக்குகள் மீது கவனம் செலுத்தியது. தொகுதியில் இஸ்லாமிய வாக்குகள் 3.5 லட்சமும், கிருத்துவ வாக்குகள் 1.25 லட்சமும், முதலியார் வாக்குகள் 3 லட்சமும், வன்னியர்கள் வாக்குகள் 2.50 லட்சமும், தலித் வாக்குகள் 3 லட்சமும், நாயுடு சமுதாய வாக்குகள் ஒரு லட்சம் மற்றும் இதர சமுதாயத்தினரும் உள்ளனர். 
 

இந்த வாக்குகளில் இரு கட்சிகளும் தங்களுக்கான வாக்குகள் என பிரித்துக்கொண்டு வேலை செய்ததே ஒரு வேட்பாளருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு வேட்பாளருக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
 

திமுக வேட்பாளர் தனது சமுதாய வாக்குகள் பலமாக உள்ள அணைக்கட்டு, ஆலங்காயம், குடியாத்தம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள வாக்குகளும், இஸ்லாமியர்கள் பரந்து வாழும் பகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டி, வேலூர் பகுதிகளில் உள்ள வாக்குகளும், தொகுதி முழுவதும் பரவலாக உள்ள
குறிப்பாக தனி தொகுதிகளான குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தலித் வாக்குகளும் தங்களுக்கு சாதமாக விழும் என நினைத்தார். 
 

ஏ.சி.சண்முகம் தனது முதலியார் சமுதாய வாக்குகளும், நாயுடு சமுதாயம் மற்றும் பிற சமுதாய வாக்குகளும், மற்றும் தலித் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என நினைத்து வேலை செய்தார். ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் இரு வேட்பாளர்களும் வாங்கியுள்ள வாக்குகளை பிரித்து ஆராயும்போது, பல சுவாரஸ்யங்கள் அறிய முடிகிறது.
 

அதில், ஏ.சி.சண்முகம் திட்டமிட்டதுபோல் முதலியார், நாயுடு உள்பட பிற சமுதாய வாக்குகளையும் மற்றும் தலித் வாக்குகளையும் ஓரளவு பெற்றுள்ளார். திமுகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வன்னியர் சமுதாய வாக்குகளும், ஏ.சி.சண்முகத்திற்கு பெருவாரியாக கிடைத்துள்ளன. குறிப்பாக அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். 
 

இதேபோல் தனி தொகுதியான குடியாத்தத்தில் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அந்த தொகுதியில் உள்ள முதலியார் வாக்குளே. கே.வி.குப்பத்திலும் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளார். இது திமுகவிற்கு அதிர்ச்சியான ஒரு தகவல்தான். ஏனெனில் திமுக வேட்பாளர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

திமுகவுக்கு முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரை முன்னணியில் இருந்த தொகுதி எது என்றால் அது வாணியம்பாடிதான். அங்குள்ள இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் செலுத்திய வாக்குகள் திமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றன. அதிமுகவைவிட திமுக இந்த தொகுதியில் 28 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆம்பூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளில் 90 சதவீத வாக்குகள் திமுகவுக்கே கிடைத்துள்ளன. அதற்கு அடுத்து வேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குகளும் திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தன. இங்குள்ள கிருத்துவ வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்கு பெரிய அளவுக்கு கைக்கொடுத்துள்ளன. திமுகவினர் தங்களுக்கு நிச்சயம் விழும் என்று எதிர்பார்த்த வன்னியர் வாக்குகள்தான் காலை வாரியுள்ளன. இருந்தும் சிறுபான்மையினவாக்குகள், தலித் வாக்குகள் திமுகவை வெற்றிபெற வைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 




 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.