Skip to main content

மங்களம் தரும் ஆரன்முளா (மாங்கல்ய) கண்ணாடி..!!!

Published on 23/01/2019 | Edited on 23/01/2019



 

Aaranmula mirror

   

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்களுக்கும், உலக சுற்றுலாப் பயணிகளின் நினைவில் இருக்கும் ஊரின் பெயரே ஆரன்முளா.! பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளத்திலிருந்து 14 கி.மீ.தொலைவில் உள்ளது இந்த ஆரன்முளா எனும் சிற்றூர். பாம்பினைப் போல் நதியில் வளைந்து நெளிந்து செல்லும் வல்லங்களி எனப்படும் படகு போட்டியும், உலோகத்தால் ஆன மாங்கல்ய கண்ணாடியும் இங்கு பிரசித்தம். கேரள மணப்பெண்ணிற்கு வழங்கப்படும் எட்டு சீர்ப்பொருட்களில் இடம்பெற்றுள்ள இந்த பெருமைமிகு "ஆரன்முளா கண்ணாடி, சாதாரண கண்ணாடியைப் போல பீங்கானைப் பயன்படுத்தாமல் உலோகங்களை மட்டுமே ஒன்று சேர்த்து உருக்கி, முகம் பார்க்கும் வண்ணம் படைக்கப்பட்டது. கைலாயத்தில் ஈசனின் துணையான பார்வதிதேவியும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் மாலையிட்டு பார்த்த கண்ணாடியும் இந்த கண்ணாடி வகையைச் சார்ந்ததே.! 
 

Aaranmula mirror

 
 

Aaranmula mirror


 

Aaranmula mirror


 

Aaranmula mirror



இவ்வூரில் குறிப்பிட்ட எட்டுக் குடும்பத்தினர் தான் பரம்பரையாய் மங்களம் தரும் மாங்கல்ய கண்ணாடியை தயாரித்து வருகிறார்கள். இவ்வூருக்கு ஆரன்முளா கண்ணாடி வந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம். " தெக்கங்கூர் மன்னர் வசமிருந்த இந்த ஊர் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் வசமானது. இவ்வூரைக் கைப்பற்றியதும் மார்த்தாண்ட வர்மா இவ்வூரின் கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். இதற்காக பூஜைப் பொருட்களை தயார் செய்ய சில கைவினைஞர்களை வரவழைத்தார். அவர்களது பணியில் திருப்தியடையாத மகாராஜா அவர்கள் மீது கடும் கோபம் கொண்டார். இதனால் பதறிப்போன அந்த கைவினைஞர்கள் கோவிலுக்குச் சென்று பார்த்தசாரதியிடம் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினர். அதன்பின் இறைவன் அவர்களுக்கு தெய்வாம்சம் பொருந்திய இந்தக் கண்ணாடியை செய்யும் முறையை அறியச் செய்தார். அதன்படி இந்தக் கண்ணாடியை தயார் செய்து அவர்கள் மன்னன் வசம் கொடுத்தனர். வியந்து போன மன்னர் அவர்கள் பணியைத் தொடரச் செய்தார். அந்த வம்சத்தில் வந்த கைவினைஞர்கள் உருவாக்கிய கண்ணாடிதான் இந்த கண்ணாடி." எனும் கர்ண பரம்பரை கதையும் உண்டு.  
 

  18ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை மக்களுடன் தொடர்ந்து வரும் இந்த ஆரன்முளாக் கண்ணாடி வீட்டில் இருந்தால் அந்த வீடு தெய்வாம்சம் பெறும் என்பது ஐதீகம். மேலும் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் ஆரன்முளா கண்ணாடி மூலம் அந்தக் குறை நீங்கும் என்பதும் கேரள மக்களின் நம்பிக்கை. இதனால் கேரளத்தில் அநேகமாக எல்லா வீடுகளிலும் பூஜையறையில் ஒரு கண்ணாடி நிச்சயம் இருக்கும். சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை எழுந்து கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆண்டு முழுவதும் நல்ல பலனைத் தரும் என்றும் சொல்லப்படுகிறது.

 
    வெள்ளை ஈயம் மற்றும் செம்பு ஆகிய இரு உலோகங்கள் கலந்த கலவை மூலமே இந்தக் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது. களி மண்ணில் தயாராகும் அச்சில் இந்த உலோகங்கள் குறைந்தது 8 மணி நேரம் உருக்கப்பட்டு களிமண் அச்சிலிருந்து தானாக குளிர்ந்த பின்னரே வெளியில் எடுக்கப்படுகிறது. எந்த விகிகத்தில் எந்த அளவு வெப்பத்தில் இது மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான் இன்றும் வெளிவராத ரகசியம்.! தகடாக உருவாக்கப்பட்ட பின்னர் இது ஒரு மரக்கட்டையில் ஒட்டப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாலீஷ் செய்யப்டுகிறது. முதல் சணலில் தயாராகும் கோணி (சாக்கு) யில் தேய்க்கப்படுகிறது. பின்னர் தடிமான துணி, மெல்லிய காகித அட்டை, சாதரண துணி, கடைசியாக வெல்வெட் துணிகளில் தேய்க்கத் தேய்க்க கண்ணாடி பளபளப்பு கூடிக் கொண்டே வருகிறது. இப்படி பல்வேறு கட்டமாக தேய்க்கப்பட்ட பளபளப்பான கண்ணாடி பித்தளையால் தயாரான அச்சுகளில் பொருத்தப்படுகிறது.  கண்ணாடியின் மேல்பகுதியில் தான் வேலைப்பாடு இருக்கிறது. இந்தக் கண்ணாடித் துண்டுகளை பொருத்த பித்தளையில் கைப்பிடி மற்றும் பிரேம்கள் தயாரிக்கப்படுகிறது. இரண்டரை அங்குலம் முதல் 16 அங்குலம் வரையிலான கண்ணாடிகளின் விலை 300 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை..! மங்களம் பெருக்கும் ஆரன்முளா கண்ணாடியை புவிசார் குறியீடுப் பெற்றுளது குறிப்பிடத்தக்க அம்சம்.


 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.