Skip to main content

தூக்குதுரைன்னா அடாவடியுமில்லை, அலப்பறையுமில்லை... வேறு என்ன தெரியுமா? விஸ்வாசம் - விமர்சனம்    

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

தூக்குதுரைன்னா அடாவடி...  தூக்குதுரைன்னா அலப்பறை...  தூக்குதுரைன்னா தடாலடி... தூக்குதுரைன்னா கட்டுக்கடங்காத கிராமத்துக் காட்டு அடி...

இது 'விஸ்வாசம்' படத்தில் தம்பி ராமையா அஜித்திற்குக் கொடுக்கும் அறிமுகம். ஆனால், படம் முடியும்போது தூக்கு துரை இது எதுவுமில்லாமல் வேறு பிம்பமாக நம் மனதில் பதிகிறார். அது என்ன பிம்பம்? பார்ப்போம்.

 

ajith viswasam



'விவேகம்' படத்திற்குப்  பிறகு மீண்டும் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்த அஜித் படம் என்றவுடன்  'மீண்டும் சிவாவா?' என்ற எண்ணம் அஜித் ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்பட்டது உண்மை. பாடல்கள், ட்ரெய்லர் என படிப்படியாக நம்பிக்கை ஊட்டி, எதிர்பார்ப்பை எகிறச் செய்த இந்த 'விஸ்வாசம்' படம் ரசிகர்களுக்கு விசுவாசமாக இருக்கிறதா?

கொடிவிலார்பட்டி மக்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு செல்லும் அஜித், ஊர் மக்கள் வணங்கும் மரியாதைக்குரியவராகவும் வாழ்ந்து வருகிறார். மும்பையிலிருந்து  அந்த கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் அமைத்து மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வருகிறார் நயன்தாரா. அப்போது அஜித்தின் சேட்டைகளும் அவரது  நல்ல மனசும் பிடித்துப்போக, அஜித் மீது காதல் கொண்டு திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றுக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அஜித்தை விட்டுப் பிரிந்து குழந்தையுடன் மும்பைக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா. பத்து ஆண்டுகள் கழித்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு மனைவி, குழந்தையை அழைக்க மும்பை செல்கிறார் அஜித். அங்கு தன் குடும்பத்துக்கு இருக்கும் பெரிய ஆபத்தைத் தெரிந்துகொள்கிறார். ஆபத்து யாரால், அஜித் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார், நயன்தாரா மீண்டும் அவரை ஏற்றுக்கொள்கிறாரா என்பதே இயக்குனர் சிவாவின் விஸ்வாசம்.

 

nayanthara



விவேகம் படத்திற்குப் பிறகு மீண்டும் தன் பழைய ஃபார்முலாவுக்குத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் சிவா. பழைய ஃபார்முக்கும் திரும்பியிருக்கிறார் என்றே சொல்லலாம். அமர்க்களமான தூக்குதுரையின் அறிமுகத்துடன் படத்தை ஆரம்பித்து போகப்போக கலாட்டா, குடும்பம், காதல், கல்யாணம், பிரிவு, வலி, பாசம், நேசம் என பயணிக்கிறது விஸ்வாசம். அதிரடியாகவும் கலகலப்பாகவும் நகரும் முதல் பாதியில் அதிரடி வொர்க் அவுட்டாகியுள்ள அளவுக்கு காமெடி வொர்க் அவுட் ஆகவில்லை. தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் தொடங்கி ரமேஷ் திலக் வரை நிறைய காமெடி நடிகர்களும் கொஞ்சமாக காமெடியும் இருக்கிறது. படத்தில் ஆரம்பத்தில் இருக்கும் திருவிழாக் கூட்டம் படம்  முதல் பாதி முழுவதும் இருக்கிறது, காரணம் இருந்தாலும் இல்லையென்றாலும். தூக்குதுரையின் சேட்டைகள், சண்டைகள், பாடல்கள், காதல் காட்சிகள் என முதல் பாதி நகர, இடைவேளையில்தான் கதை தொடங்கி படம் உச்சத்தைத் தொடுகிறது. பின் மீண்டும் காமெடி, பாசம் என இறங்கி நகரும் இரண்டாம் பாதி ஒரு நல்ல மெஸேஜுடன் முடிகிறது. பழக்கப்பட்ட கதை, பல முறை பார்த்த திரைக்கதை, முழுவதுமாக ஒர்க்-அவுட் ஆகாத காமெடி என அனைத்தையும் தாண்டி படத்தைத் தாங்கி நிற்பவை  அஜித் - அனிகா இடையிலான அப்பா - மகள் பாசக்காட்சிகளும் அஜித் பேசும் அதிரடி, ஆத்மார்த்த வசனங்களும்தான். படத்தின் பலமாக இந்த இரண்டு விஷயங்களும் இருக்க, மற்றவை மிக பலவீனமாக இருக்கின்றன.

படத்தில் மதுரை மொழி பேசி மாஸ் காட்டுகிறார் அஜித். ஆனால், மதுரை பேச்சு வழக்கு ஆங்காங்கே மிஸ் ஆகிறது. சண்டைக் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் அதகளப்படுத்துகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பு முடி, கலர்ஃபுல் உடை, கலகலப்பான பேச்சு என செம ஆக்டிவ் அஜித். அதே சமயம் எமோஷனல் காட்சிகளில் உருகவும் வைத்துள்ளார். இறுதியில் 'என் சாமி' என்று அஜித் சொல்லும்போது கலங்காதவரும் கலங்குவார். இன்னொரு பக்கம் அஜித்திற்கு இணையாக ஆளுமை காட்டுகிறார் நயன்தாரா. அழகான காதலி, கோபமான பிசினெஸ் வுமேன் மனைவி என இரு பரிமாணங்களிலும் நயன்தாரா சிறப்பு. அஜித்தின் மகளாக நம் மனதை அள்ளி பாசத்தைப் பெருக வைத்துள்ளார் 'என்னை அறிந்தால்' அனிகா. அஜித்துக்கும் இவருக்கும் உண்மையான தந்தை - மகள் போல அப்படி ஒரு அந்நியோன்யம்.

 

viswasam jegapathy



படம் முழுவதும் அஜித்தின் கூடவே பயணிக்கும் வேடம் ரோபோ சங்கருக்கும், தம்பி ராமையாவுக்கும். ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்ட இவர்கள் செய்யும் முயற்சியில் முந்துவது ரோபோ சங்கர். இரண்டாம் பாதியில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் விவேக் - கோவை சரளா காம்போ கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கவைக்கின்றனர். உணர்ச்சிகரமான வில்லனாக நடித்துள்ளார் நடிகர் ஜெகபதி பாபு. உணர்ச்சிகரம் என்று சொல்ல படத்தில் காரணம் இருக்கிறது. வழக்கமான வில்லன் நடிப்புதான் என்றாலும் குறையில்லை. படத்தில் மைம் கோபி, ஆர்.என்.ஆர்.மனோகர், ரமேஷ் திலக், கலைராணி உள்ளிட்ட பலர் சரியாகப் பயன்படுத்தப்படாமல் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்கின்றனர்.

காதலில் விழுவதும், ஒரே சண்டையில் பிரிவதுமென, மீண்டும் மும்பை சென்று பெரிய பிசினஸ் வுமேனாவதுமென எல்லா விஷயங்களும் சட்டென நடக்கின்றன. வில்லனை நாயகன் எதிர்கொள்வதில் வழிமுறைகள், தந்திரங்கள் என எதுவும் இல்லாமல் நேரடி அடிதடியாகவே இருக்கிறது. இது போன்ற விஷயங்களில் குறையும் சிந்தனை, 'நான் உன் கையை இப்படி பிடிச்சுக்கிட்டா, கட்டிக்கணும் போல இருக்குன்னு அர்த்தம்' என காதலிலும் மகளிடம் கதை பேசிக்கொண்டே சண்டையிடுவதிலும் இருக்கிறது. சிவாவின் அத்தனை படங்களிலும் இதை உணரலாம். 'பதினெட்டு வயசுக்குள்ள ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கிட்டா, அது தற்கொலை இல்லை, கொலை', 'ஒரு தடவ அழுகாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவ சிரிக்காத ஏழையும் இல்லை' என ஆழ்ந்த அர்த்தமும் உணர்வுப்பூர்வமுமாக இருக்கும் சிவா அண்ட் கோவின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.

அடிச்சித்தூக்கு, வேட்டி கட்டு பாடல்கள் மூலம் ரசிகர்களை குதூகலப்படுத்திய டி.இமான் கண்ணான கண்ணே பாடல் மூலம் படத்திற்கும் ரசிகர்களுக்கும் ஒரு எமோஷனல் கனெக்டிவிட்டி ஏற்படுத்தி நெகிழச் செய்துள்ளார். காட்சிகளுக்கு தன் பின்னணி இசை மூலம் வேகத்தையும் கூட்டியுள்ளார். வெற்றியின் கேமரா ஆக்சன் காட்சிகளை தெறிக்க விட்டுள்ளது. குறிப்பாக மழை சண்டைக் காட்சி மற்றும் பாத்ரூம் சண்டைக்காட்சிகளை நேர்த்தியாக படம்பிடித்து ரசிக்க வைத்துள்ளார்.  தொடக்கத்தில் இவர் கொடுக்கும் ஏரியல் வ்யூ அறிமுகத்தில் கொடுவிலார்பட்டி கிராம எஃபக்ட் நமக்குள் இறங்குகிறது.

விஸ்வாசம் - பழக்கமான மசாலா, அதில் உணர்ச்சிகரமான தந்தை மகள் பாசம். மொத்தத்தில் அஜித் - சிவா காம்பினேஷனில் இன்னொரு படத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.