![Vijay's advice to Vijay makkal iyakka won the election](http://image.nakkheeran.in/cdn/farfuture/I4nOfAmyNv4GMtcrol-W6DLhPKkpAgmrT-t7skb_m9I/1635235399/sites/default/files/inline-images/vijay_90.jpg)
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்களும் வெற்றி பெற்றிருந்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 115 இடங்களில் வெற்றிபெற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினருக்கான மறைமுக தேர்தலில் 15க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டும் எவரும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யை சந்திப்பதற்காக பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்கு நேற்று (25.10.2021) வருகை தந்தனர். அவர்கள் அனைவரையும் சந்தித்த விஜய், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் கூறியதாக தெரிவித்தார்.