Skip to main content

தமிழ் சினிமா vs ’ப்ளூ சட்டை’ மாறன்?

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

“ஏம்பா.. புதுசா ஒரு படம் வந்திருக்குல்ல.. எப்படியிருக்கு? நல்லாயிருக்கா? பார்க்கிற மாதிரி இருக்கா?” 

- தொடர்ந்து புது சினிமாக்களைப் பார்க்கும் வழக்கமுள்ள நண்பர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் முன்பெல்லாம் தியேட்டருக்குச் செல்வார்கள். காலப்போக்கில், நல்லவிதத்தில் பத்திரிக்கைகளின் விமர்சனம் இருந்தால் மட்டுமே, புது ரிலீஸ் சினிமாக்களைப் பார்த்தார்கள். இப்போதெல்லாம், வெப்சைட் விமர்சனம், தனிநபரின் யூ டியூப் விமர்சனங்கள் ஆர்வமாக கவனிக்கப்படுகின்றன.  ஆனாலும், ‘படம் சொதப்பல். என்னத்தயோ எடுத்திருக்காங்க..’என, விமர்சனத்துக்கு ஆளாகும் சினிமாக்களை, ‘எதற்கு ரிஸ்க்?’ என்று தவிர்க்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனாலும், எந்த விமர்சனத்தையும் பார்க்காமல், படிக்காமல் சினிமாவுக்குச் செல்பவர்களே அனேகம் பேர்.

 

blue sattai maran



சரி, விஷயத்துக்கு வருவோம். பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர், தனது தமிழ் டாக்கீஸ் யூட்யூப் சேனலில் கடுமையாக விமர்சனம் செய்த விவகாரம், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் காவல்துறையில் புகார் செய்யப்படும் அளவுக்கு சீரியஸாகிவிட்டது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’படம் வெளிவந்த போது, அந்தப் படத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக ‘ப்ளூ சட்டை’ மாறனை பல மேடைகளில் கண்டித்துப் பேசினார் அந்தப் படத்தின் இயக்குனர் சாய் ரமணி. அஜித்தின் ‘விவேகம்’ படம் வெளியான போது படத்தைத் தாண்டி அஜித்தை விமர்சித்தார் மாறன். அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை கடுமையாக சாடி வந்தனர், நேரிலும் தேடி வந்தனர். இந்த விசயத்தில் மாறனைக் கண்டித்து இயக்குனர் விஜய் மில்டன், ‘ஈட்டி’இயக்குனர் ரவி அரசு உள்ளிட்ட சிலர் வீடியோ வெளியிட்டனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ படத்தை இவர் விமர்சித்த விதம் குறித்து கோபம் கொண்ட கிருத்திகா, மாறனின் ரிவ்யூவை தான் ரிவ்யூ செய்து ஒரு வீடியோவை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூட்யூப் சேனல் வாயிலாகவே வெளியிட்டார். இப்படி அவ்வப்போது நடக்கும் பிரச்சனை இப்போது போலீஸ் வரை சென்றுள்ளது. இந்த எதிர்மறை பிரபலம் மாறனுக்கு சாதகமாகவும் ஆகிறது. இன்றளவிலும் ‘விவேகம் விமர்சனம்’ அவரது சேனல் டாப்லிஸ்ட்டில் தொடர்கிறது.

 

motta siva ketta siva



சார்லி சாப்ளின் 2 குறித்து, யூ டியூபில் காணப்படும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தில் ஒரு பகுதி இது -

“படத்துல கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணி வச்சிருக்கானுங்க. இந்தப் படத்தை எடுத்தவங்க அரையும் குறையுமா அப்டேட் ஆயிருக்காங்க. ரெண்டுங்கெட்டானா அப்டேட் ஆகி உசிர எடுக்கிறாங்க. ஒன்றரை மணி நேரம் வாட்ஸப் மெசேஜை அழிக்கிறத பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. ஆனா.. இப்ப ஒரு ஆப்ஷன் வந்திருச்சு. டெலிட் ஃபார் எவரி ஒன்ங்கிற ஆப்ஷன்ல, தவறா அனுப்பிய மெசேஜை அழிச்சிட முடியும். அதைவிட்டுட்டு, ஹீரோயின் போன்ல இருக்கிற மெசேஜை அழிக்கிறதையே  ஒன்றரை மணி நேரம் படமா எடுத்து வச்சிருக்காங்க. இந்த மாதிரி விஷயமெல்லாம் வந்தபிறகு, இப்படி ஒரு படம் எடுத்து ஒன்றரை மணி நேரம் வறுத்து எடுத்துட்டாங்க”

”பிரபுதேவா கதையெல்லாம் கேட்கிறாரா? இல்லையான்னு தெரியல. இஷ்டத்துக்கு நடிக்கிறாரு.  இந்தப் படத்துல ஒரு பாட்டு ஹிட் ஆயிருச்சு. அந்தப் பாட்டுக்காக இந்தப் படத்தை ஒருவாட்டி பார்க்கலாம்னு ஒரு கோஷ்டி சொல்லிக்கிட்டுத் திரியுது. பொல்லாதவன் படத்துல சந்தானம் சொல்வாப்ல. சிங்கிள் டீக்கு ஆசைப்பட்டு உசிர விட்றாதன்னு. அதைத்தான் நாங்களும் சொல்லுறோம்.” என்று வார்த்தைகளால் சார்லி சாப்ளின் 2-வை வறுத்தெடுக்கிறார் மாறன்.

இந்தப் படத்தின் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் அளித்திருக்கும் பேட்டியில் -   

“சார்லி சாப்ளின் 2-வை பார்த்துட்டு ரிமேக் கேட்டிருக்காங்க. எப்படி ஒரு தனிப்பட்ட ஆளு சினிமாவ கிண்டல் கேலி பண்ணுவான்?  தமிழ்த் திரையுலகமே ப்ளூ சட்டை மாறனுக்கு எதிரா திரும்பியிருக்கு.  ப்ளூ சட்டை மாறனைத் தமிழ் சினிமா விடாது. விமர்சனம் பண்பட்டதா இருக்கணும்; புண்படுத்துவதா இருக்கக்கூடாது. எனக்கு கோடிக்கணக்கான வியூவர்ஸ் இருக்காங்கன்னு ரொம்ப தெனாவட்டாவும் கேவலமாவும் பேசினாரு மாறன். ஒரு படத்தைக் காலி பண்ணனும்னே பேசிக்கிட்டிருக்காரு. பத்துகோடி ரூபாய் செலவழிச்சு எடுத்த படத்த பார்க்கக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு உரிமை கிடையாது. படம் சூப்பர் ஹிட்டா ஓடிக்கிட்டிருக்கு. எல்லா தியேட்டர்லயும் ஹவுஸ்ஃபுல்லா ஓடிக்கிட்டிருக்கு. மக்கள் படத்தை தலைமேல தூக்கி வச்சிட்டு கொண்டாடிக்கிட்டிருக்காங்க.” என்கிறார்.

தயாரிப்பாளர் அம்மா க்ரியேஷன்ஸ் டி.சிவா, தன்னுடைய பேட்டியில் -

“அவருடைய சப்ஸ்கிரைபர்ஸை ஏத்துறதுக்காகவும், சம்பாதிக்கிறதுக்காகவும் பண்ணுறாரு. இந்த மாதிரி ஆளுங்களுக்கு விளம்பரம் கொடுப்பதோ, கையூட்டு கொடுப்பதோ கூடாது. காசு கொடுத்தா ஒண்ணு பேசுறது. கொடுக்கலைன்னா ஒண்ணு பேசுறதுன்னு இருக்காரு. காமெடி படத்துல லாஜிக் மீறல் இருக்கத்தான் செய்யும்.” என்று ஆவேசம் காட்டுகிறார்.

 

charlie chaplin 2

தயாரிப்பாளர் சிவா - ஷக்தி சிதம்பரம் - பிரபுதேவா



கொலை மிரட்டல்?

சார்லி சாப்ளின் 2 தரப்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்திருக்கும் புகாரில் ‘படத்தை யூ டியூபில் விமர்சனம் செய்வதற்கும், அதில் விளம்பரம் செய்வதற்கும் பெரும்தொகை கேட்டார் மாறன். நாங்கள் விளம்பரமோ, பணமோ தரமாட்டோம் என்று மறுத்துவிட்டோம். அதனால், விமர்சனம் என்ற பெயரில், தரக்குறைவான வகையிலும் ஒருமையிலும் பேசியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.  மேலும், அவர் கொலை மிரட்டலும் விடுத்தார்’ என்கிற ரீதியில் குறிப்பிட்டுள்ளனர். ப்ளூ சட்டை மாறனோ, “நான் யாரையும் மிரட்டவும் இல்லை; பணம் கேட்கவும் இல்லை” என்று மறுக்கிறார். ஒரு பக்கம் எதிர்ப்புகள் இருந்தாலும் இன்னொரு புறம் அவர் சேனல் மூலம் திரைப்படங்களை விளம்பரம் செய்யும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

பாகவதர் காலத்திலிருந்தே ரசிகர்கள் சந்தித்துவரும் சோதனை!

எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலேயே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சினிமாக்கள் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களிலும் தோல்விப் படங்கள் உண்டு. அட, ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் ‘அட்டர் பிளாப்’ படங்களும் வெளிவந்து ரசிகர்களை இம்சித்திருக்கின்றன. அதே நேரத்தில், தரமான சினிமாக்களும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. குப்பையான மசாலா படங்களும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு சினிமாவும் அந்தந்த காலக்கட்டத்தில், அதற்கேற்ற விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. பிற்காலத்தில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜாவின் இசையை, ஆரம்பத்தில்  ‘தகர டப்பாவை உருட்டுகிறார்’ என்று விமர்சித்ததும் நடந்திருக்கிறது. ரசிகர்களைக் கவரும் வகையில் எத்தனையோ பிரபலமான பாடல்களைப் பாடியிருக்கும் அவருடைய குரலை, அவர் பாட ஆரம்பித்த காலத்தில் கடுமையாக விமர்சித்த முன்னணி பத்திரிக்கைகளும் உண்டு.

நல்ல இயக்குநர்; நல்ல நடிகர் என்று நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களைச் சோதனைக்கு ஆளாக்கும்போது, குமுறலோ, வசைச்சொற்களோ, விமர்சனமோ வெளிப்படத்தான் செய்யும். ஆனாலும், உள்நோக்கத்துடன் விமர்சகர்கள் யாரேனும் செயல்பட்டால், நிச்சயம் அது கண்டிக்கப்பட வேண்டியதே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
ar rahman prabhu deva movie update

பிரபுதேவா தற்போது விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேரளாவில் தற்போது படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் புதுப் பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மனோஜ் என்.எஸ். இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ், பிரவீன் இலக் உள்ளிட்ட மூன்று பேர் இணைந்து தயாரிக்கின்றனர். பிகைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைக்கிறார். 

ar rahman prabhu deva movie update

ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் - பிரபு தேவா இருவரும் காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரக் கனவு உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!