Skip to main content

"எங்களுக்குள் அப்படி இல்லை" - சிக்கல் குறித்து கூலாக பதில் சொன்ன சிவகார்த்திகேயன்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

sivakarthikeyan about maaveeran issue

 

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடலான ‘ஸீனா ஸீனா’ லிரிக் வீடியோ ஆகியவை  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

 

முன்னதாக இப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அப்போது இயக்குநர் மடோன் அஷ்வினை தொடர்பு கொண்டு விசாரித்த போது,"என்னது படப்பிடிப்பு நிறுத்தமா? யாருங்க இந்தப் புரளிய கிளப்புனது? அவுட்டோர் ஷுட்டிங் ஆரம்பிக்கற டைம்ல செம மழை வந்துருச்சு. இப்ப மழை நின்னதும் ஷுட்டுக்கு வந்துட்டோம். ஆனா ஊனான்னா எதுவும் விசாரிக்காம இஷ்டத்துக்கு இப்படி புரளிய கிளப்பி விட்டுட்றாங்க. நம்பிக்கையா, வேகமா வேலை செஞ்சுட்டு இருக்குறப்ப இதெல்லாம் பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஷுட்டிங் சூப்பரா போய்ட்டு இருக்கு. படம் நல்லா வந்துட்டு இருக்கு. சீக்கிரம் தியேட்டருக்கு வரும்" என நம்பிக்கையாகத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில் ஒரு ஆகஸ்ட் 16 - 1947 பட ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாவீரன் பட இயக்குநருடன் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்படுவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், "மாவீரன் படத்தில் என்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. இன்னும் சில தினங்களில் முழுவதுமாக முடிவடைந்துவிடும். எங்களுக்குள் அப்படி இல்லை. ஏன் இந்த நியூஸ் வந்தது என்றும் தெரியவில்லை. சூப்பரா ஷூட்டை முடித்துவிட்டோம். எனக்கு ரொம்ப புதுசான கதைக்களம். அதனால் படப்பிடிப்பு நடத்த கடினமாக இருந்தது. இயக்குநரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்" என கூலாக பதிலளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்