![fwfwfwf](http://image.nakkheeran.in/cdn/farfuture/K_-pNUbk9SioLrHZ-qcpCpdAF-kUEJ_vG0DRuB71OLM/1620735014/sites/default/files/inline-images/radhe-770x433.jpg)
'தபாங் 3’ படத்திற்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ராதே'. 'வெடரன்' என்ற கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, கரோனா காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த நிலையில், 'ராதே' படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ரூ.230 கோடிக்கு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சல்மான் கான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனால் படம் ஓடிடியில் வெளியாகிவிடுமோ என்று திரையரங்க உரிமையாளர்களுக்கிடையே கலக்கம் ஏற்பட்ட நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மே 13 ஈகைத் திருநாள் அன்று 'ராதே' படம் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு, திரையரங்கு உரிமையாளர்களின் கலக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சல்மான் கான். இதையடுத்து 'ராதே' படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலானது. மேலும் ஒரே நேரத்தில் இப்படம் திரையரங்குகளிலும், ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக ட்ரைலரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக 'ராதே' படம், வருகிற மே 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகாது என நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். ஆனால் திட்டமிட்டபடி ஓடிடி மற்றும் டி.டி.ஹெச்-ல் வெளியாகும் எனக்கூறியுள்ள அவர், ரசிகர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே படத்தை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கரோனா பரவல் குறைந்த பின்னர் 'ராதே' படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.