![Premalatha Vijayakanth Vijayakanth should not be used in films by AI without permission](http://image.nakkheeran.in/cdn/farfuture/j5PUOthG95PIKP8DrQ8puP50Tnq2WaHax2QS7BxW4LQ/1720163160/sites/default/files/inline-images/vijaykanth_13.jpg)
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பலரும் நடிக்க வைப்பதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் மறைந்த விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பலரும் இந்த விஷயத்தை கையில் எடுக்கயிருப்பதாக அவ்வப்போது கூறி வந்தனர்.
இந்த நிலையில், விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், அனுமதியின்றி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். விஜயகாந்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே, இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது.
எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வேளியிட வேண்டும். ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாகும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.